search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை ரத்து"

    • இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, அரவேணு, அருவங்காடு, பர்லியார், காந்தல், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி, மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிளாஸ்டிக் கவரினை அணிந்தபடி தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பெரும்பாலானவா்கள் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    கோத்தகிரியில் 9 மி.மீட்டர் மழையும், கொடநாட்டில் 2 மி.மீ, கீழ்கோத்தகிரியில் 69 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வெயில் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவியது.

    இன்று காலை முதல் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

    வால்பாறையில் நேற்று இரவு நேரத்தில் வால்பாறை, அக்காமலை, பச்சமலை, நடுமலை, கருமலை, கவர்கள், சோலையார் அணை, முடீஷ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி சின்கோனாவில் 31 மில்லி மீட்டர் மழையும்,சின்னக்கல்லார் 16 மில்லிமீட்டர் மழையும், வால்பாறையில் 19 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

    மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர். குடைபிடித்தபடி அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • தரமணி, பெருங்குடி, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
    • ரெயில் சேவை மாற்றத்தையொட்டி மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை-எழும்பூர் கடற்கரை இடையே 4-வது ரெயில்பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரெயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.

    சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையே மட்டும் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்று கூட்டம் அலைமோதியது.

    மெரினா கடற்கரைக்கு வந்தவர்கள் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.

    பொதுவாக மக்கள் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை நிலையம் பரபரப்புடன் செயல்பட்டது. போதிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இன்று திங்கட்கிழமை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என கூட்டம் களை கட்டியது. காலை 6 மணி முதல் படிப்படியாக அதிகரித்த கூட்டம் 9, 10 மணிக்கெல்லாம் ரெயில் நிலையம் நிரம்பி காணப்பட்டது.

    சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய ரெயில்களிலும் அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரக்கூடிய ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர். பெண்கள், கூட்ட நெரிசலில் சிக்கி பயணித்தனர்.

    தரமணி, பெருங்குடி, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ரெயில் சேவை மாற்றத்தையொட்டி மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. பிராட்வேயில் இருந்து சித்தாதிரிப்பேட்டை வழியாக 2436 சேவைகளும், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கத்தில் இருந்து பிராட்வேக்கு 2436 சேவையும் வழக்கமாக இயக்கப்படுகின்றன. இதை விட கூடுதலாக 140 சேவைகள் இருபுறமும் நேற்று இயக்கப்பட்டன.

    ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பஸ் வசதியும் போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 30 நிமிடத்திற்கு ஒரு சேவை என்ற அளவில் பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயிலில் இருந்து இறங்கி வரும் 1000 பயணிகளுக்கு போதுமான அளவு பஸ் வசதி இல்லை.

    ரெயில் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்தவுடன் அதில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு 3 பஸ்கள் தான் நிற்கின்றன. ஒரே நேரத்தில் ஆயிரம் பயணிகள் ரெயிலுக்கு காத்து நிற்கின்ற நிலையில் வேளச்சேரியில் இருந்து வரும் ரெயிலில் ஆயிரம் பயணிகள் வருவதால் 2-வது பிளாட்பாரத்தில் கடுமையான நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து பிளாட்பாரத்தில் பயணிகள் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.

    சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் 8 பஸ்கள் பிரத்யேகமாக பயணிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.

    காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல கூடியவர்கள் அதிகளவில் பயணிப்பதால் பஸ்சுக்கு காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே மேலும் கூடுதலாக மாநகர பஸ்களை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இன்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே ரூ.276 கோடி மதிப்பில் 4 கிலோ மீட்டருக்கு புதிய பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரெயில் சேவை இன்று முதல் அடுத்த 7 மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது.

    இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இன்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • கண்ணூர்-கோவை ரெயில் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

    திருப்பூர்:

    கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை ரெயில் சேவை மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி சொரணூர்-கோவை ரெயில் நாளை காலை 11.10 மணிக்கு கோவைக்கு வரும். இந்த ரெயில் போத்தனூர்-கோவை வரை நாளை இயங்காது. மதுரை-கோவை ரெயில் நாளை போத்தனூர்-கோவை வரை இயங்காது. கோவைக்கு மதியம் 12.15 மணிக்கு சேரும். கண்ணூர்-கோவை ரெயில் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

    கோவை-கண்ணூர் ரெயில் போத்தனூரில் இருந்து கண்ணூருக்கு ரெயில் இயக்கப்படும். போத்தனூரில் மதியம் 2.34 மணிக்கு இயக்கப்படும். கோவை-மதுரை ரெயில் போத்தனூரில் மதியம் 2.52 மணிக்கு புறப்படும். போத்தனூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். கோவை-சொரணூர் ரெயில் மாலை 4.41 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு சொரணூர் சென்றடையும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்-கோவை இடையே கடந்த மாதம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயில் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்பாத்-கோவை வாராந்திர ரெயில் நாளை 5-ந் தேதி முதல் மார்ச் மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தன்பாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேரும். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 1.35 மணிக்கும் செல்லும்.

    கோவை-தன்பாத் வாராந்திர ரெயில் புதன்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் சென்று சேரும். இந்த ரெயில் 8-ந் தேதி முதல் மார்ச் மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. ஈரோட்டுக்கு புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கும், சேலத்–துக்கு 3.30 மணிக்கும் செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜோலார்பேட்டை-காட்பாடி இடையே இயக்கப்படும் மின்சார ரெயிலும் 7, 11, 27 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • வேலூர் கண்டோன்ட்மென்ட்-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் 24-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. வந்தே பாரத் அதிவேக ரெயில் 130 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் ரெயில் பாதையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே தண்டவாளத்தை தரம் உயர்த்தும் பணி நடக்கிறது. பல்வேறு பிரிவுகளாக இந்த பணியை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    இந்த மாதத்தில் நடைபெறும் பணிகளுக்காக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. 4 மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே ஓடும் மின்சார ரெயில் நாளை 7-ந்தேதி, 11 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல ஜோலார்பேட்டை-காட்பாடி இடையே இயக்கப்படும் மின்சார ரெயிலும் 7, 11, 27 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    வேலூர் கண்டோன்ட்மென்ட்-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் 24-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல அரக்கோணம்-வேலூர் கண்டோன்ட்மென்ட் இடையே ஓடும் மின்சார ரெயிலும் 24-ந்தேதி முழுவதும் இயங்காது.

    இதுதவிர 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடி-சென்ட்ரல் இடையே 24-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. காட்பாடி வரை மட்டும் இன்டர்சிட்டி இயக்கப்படும்.

    மைசூரு-சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் (12610) எக்ஸ்பிரஸ் காட்பாடி-சென்ட்ரல் இடையே மட்டும் 24-ந்தேதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி வரை இயக்கப்படும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்படும் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல்-காட்பாடி இடையே 24-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து 4.20 மணிக்கு புறப்படும்.

    பகல் 3.30 மணிக்கு புறப்படும் சென்ட்ரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல்-காட்பாடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும்.

    சென்ட்ரலில் இருந்து 11-ந் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படும் சாய்நகர் ஸ்ரீரடி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22601) 2 மணி நேரம் தாமதமாக பகல் 12.20 மணிக்கு புறப்படும். இதே போல் சென்ட்ரலில் இருந்து 11-ந் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு மங்களூர் புறப்படும் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 1.30 மணிக்கு 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.

    இதே போல் சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு மைசூரு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால், ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதோடு, வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    கரூர்:

    ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால், ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதோடு, வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

    கரூர், ஈரோடு இடையேயான ரெயில்வே வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வருகிற 26, 29-ந் தேதிகளில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் (வ.எண்.56841) மற்றும் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரெயில் (வ.எண்.56825), கரூரில் இருந்து ஈரோடு வரையிலான சேவை மேற்கண்ட 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

    வருகிற 26-ந் தேதி திருநெல்வேலி, ஈரோடு பயணிகள் ரெயில் (56826) ஈரோட்டில் இருந்து புறப்பட்டு புகளூருக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வரும். கோவை, நாகர்கோவில் விரைவு பயணிகள் ரெயில் மற்றும் பாலக்காடு, திருச்சி விரைவு பயணிகள் ரெயில் (வ.எண்.56712) ஈரோடு கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு சேலம் வழியாக நாமக்கல் வரை இயக்கப்படுகின்றன.

    வருகிற 29-ந் தேதி திருநெல்வேலி, ஈரோடு பயணிகள் ரெயில் (வ.எண்.56826) வழக்கத்தை விட 20 நிமிடங்கள் தாமதமாக கரூர் வரும். நாகர்கோவில், மும்பை விரைவு ரெயில் (வ.எண்.16340) ஈரோடு மற்றும் கரூருக்கு வழக்கத்தை விட 15 நிமிடங்கள் தாமதமாக வரும்.

    கோவை, நாகர்கோவில் விரைவு பயணிகள் ரெயில் (வ.எண்.56320) மற்றும் பாலக்காடு, திருச்சி விரைவு பயணிகள் ரெயில் (வ.எண்.56712) ஆகியவை ஈரோடு, கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு சேலம் வழியாக நாமக்கல் வரை இயக்கப்படு கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×