search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதிமீறல்"

    • விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர்பான ரசீது அனுப்பப்படுவது உண்டு.
    • காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேசமாட்டார்கள்,

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. சென்னை மாநகரில் தினமும் 5 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படும் நிலையில்15 பேர் மட்டுமே தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று அப்பீல் செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர் ன ரசீது அனுப்பப்படுவது உண்டு. அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல் துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று போலீசார் தெரித்துள்ளனர்.

    இதற்காக புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதா ங்கள் போன்றவற்றைக் காட்டி வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை முதலில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.

    அதன் பிறகு எந்த விதிமுறைகளில் சம்பந்தப் பட்ட வாகனம் ஈடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறை மூலமாக அவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் அது போன்று பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம் இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
    • விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்றுமுன்தினம் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    அதாவது பிரேக் லைட் எரியாத வாகனங்கள், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், அதிக அளவு சரக்கு ஏற்றிச்சென்ற வாகனங்கள், உரிமங்களை தவறாக பயன்படுத்தியது, உரிமங்களின் விதிமீறலுக்கு மாறாக செயல்பட்டது, உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வரி கட்டாமல் ஓடும் வாகனங்கள், காலாவதியான ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று புத்தகங்கள் இன்றி வாகனம் ஓட்டியது என பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 281 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 315 அளவிற்கு செலுத்தப்படாத வரிகள் கண்டறியப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளன.

    மேலும், விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் செலுத்தப்படாத வரிகள் மற்றும் அபராதத் தொகையை சேர்த்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 715 வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதிகபாரம் ஏற்றி வந்ததாக 389 வாகனங்களும், அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்ததாக 251 வாகனங்களும், உரிமம் இல்லாமல் வந்த 96 வாகனங்களும், வரி கட்டாமல் இயக்கப்பட்டதாக 135 வாகனங்களும், தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) இல்லாத 308 வாகனங்களும், உரிய காப்பீடு இல்லாத 312 வாகனங்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 295 வாகனங்களும், புகைச்சான்று இல்லாத 111 வாகனங்களும், பிரேக் லைட் எரியாத 267 வாகனங்களும் கண்டறியப்பட்டன. அவற்றில் 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திடீர் சோதனைகள் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடத்தப்படும்.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
    • சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சீட்பெல்ட் அணியாதவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் என பல்வேறு விதி மீறல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்கள் 3 முறை விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 6 மாதத்தில் ஜூன் மாதம் வரையில் விதி மீறல்களில் ஈடுபட்ட 30 ஆயிரத்து 383 பேரின் லைசென்சை போலீசார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    அதிவேகமாக சென்ற 7 ஆயிரத்து 57 பேர் சிக்கியுள்ளனர். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 6 ஆயிரத்து 748 வழக்குகளும், போடப்பட்டு உள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 272 பேர் சிக்கியுள்ளனர்.

    சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.25கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
    • போக்குவரத்து விதி மீறலில் 10 எம்.பி.க்கள் மற்றும் 19 எம்.எல்.ஏ.க்களும் சிக்கியுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்தன. இதனால் விபத்துகளும் அதிகமாகியது. இதனால் வாகனஓட்டிகள் போக்கு வரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்குவதை தடுக்க கேரள மாநில போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    அதன்படி மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதான சாலைகளில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் வாகனங்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இந்த நவீன கேமராக்கள் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 32 லட்சத்துக்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிமீறலில் கேரள மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும், முக்கிய பிரமுகர்களும் சிக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    திருவனந்தபுரத்தில் போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜா தலைமையில் நடந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்களில் ஒரு மாத காலத்தில் மொத்தம் 32 லட்சத்தது 42 ஆயிரத்து 277 போக்குவரத்து விதி மீறல்கள் பதிவாகியிருக்கிறது. அவற்றில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 367 வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, 3 லட்சத்து 82 ஆயிரத்து 580 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் அனைவருக்கும் போக்குவரத்து விதிகளை மீறி, வாகனம் இயக்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறித்து இ-செலான் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.25கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ரூ3.3கோடி மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதி மீறலில் 10 எம்.பி.க்கள் மற்றும் 19 எம்.எல்.ஏ.க்களும் சிக்கியுள்ளனர். மேலும் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் போக்கு வரத்து விதிகளை மீறி சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பொருத்த வரை அதிவேகம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தில் சென்றது ஆகிய சம்பவத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கும் இ-செலான் வழங்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் பொருத்தப் பட்ட பிறகு போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் பலர் சிக்கியிருந்தாலும், போக்குவரத்து விதி மீறல்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக மந்திரி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய முடியும்.
    • குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை கண்டறிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 330 ப்ரீத் அனலைசர் எந்திரங்கள் தவிர 50 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில் 2 அதிநவீன ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர போக்குவரத்து போலீசாருக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி சென்னை மெரினா நேப்பியர் பாலம் அருகில் உள்ள போக்குவரத்து பூங்காவில் இன்று நடைபெற்றது.

    இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புதிய ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.

    புதிய ரோந்து வாகனங்கள் 360 டிகிரி சுழலக்கூடிய கேமராவை கொண்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, டிரிபிள்ஸ் ரைடிங் வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களை படம்பிடிக்க 2 டிரேடார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

    விதிமீறல்கள் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் அவற்றை சரிபார்த்த பிறகு ரசீது உருவாக்கப்படுகிறது. விதிகளை மீறுபவருக்கு உடனடியாக இந்த ரசீது அனுப்பப்படும்.

    நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய முடியும். இதுபோன்ற வாகனங்கள் தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை கண்டறிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 330 ப்ரீத் அனலைசர் எந்திரங்கள் தவிர 50 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதிய ப்ரீத் அனலைசர்களில் சிம் பொருத்தப்பட்டுள்ளதால் விவரங்கள் உடனடியாக சர்வருக்கு அனுப்பப்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. ஊதுபவர்களின் முகத்தை தெளிவாக படம்பிடிக்க இது சிறந்த கேமரா தரத்துடன் கருவிகள் உள்ளன.

    இந்த வகையான ரைபாட் கேமராக்கள் நகரின் எந்த பகுதியில் இருந்தும் போக்குவரத்து நிலைமையை நேரலையாக கண்காணிக்க உதவுகின்றன. மேலும் சிம் கார்டு உள்ளதால் எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். விசேஷ நாட்கள் மற்றும் விஐபி வருகையின் போது போக்குவரத்தை கண்காணிக்கவும் வாகன சோதனைகளை கண்காணிக்கவும் இது உதவியாக இருக்கும்.

    சாலைகளில் முன்னே பேரிகேட்களை கண்டறிய ஈர்க்கும் வகையில் சிறந்த பார்வைக்காக 100 பேரிகேட் ப்ளிங்கர் விளக்குகள். 625 பேட்டன் விளக்குகள் சார்ஜருடன் வாங்கப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேளச்சேரி-விஜயநகர் ஜங்ஷனில் 16X8 அடி அளவிலான புதிய போர்டு நிறுவப்பட்டுள்ளது.

    முறையான மற்றும் இடையூறு இல்லாத போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சாலையில் அறிவிப்புகளை வெளியிடவும் 79 மெகா போன்கள் வாங்கப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.

    நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா சதுக்கம் இடையே அமைந்துள்ள சென்னை போக்குவரத்து பூங்கா பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து 2.07 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

    போக்குவரத்து காவலர்கள் தனியார் பள்ளியுடன் ஒத்துழைத்து மாணவர்களை போக்குவரத்து பூங்காவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யும். சென்னை நகரில் மொத்தம் 239 பள்ளிகளில் சுமார் 18000 மாணவர்கள் இருப்பது குறிப்படத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி, மும்பையில் இருப்பது போன்று சென்னை மாநகரில் புதிய ரோந்து வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த ஆண்டு சாலை பாதுகாப்புக்காக ரூ.10 கோடி நிதியை அரசிடம் இருந்து வாங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

    • சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்கள் பெறப்படுகின்றன.
    • பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன.

    கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

    • அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
    • போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர்.

    சென்னை:

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உடனடியாக செலுத்துவது இல்லை. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை வசூலிப்பதற்காக சென்னையில் 10 இடங்களில் போலீஸ் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகிறது.

    அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு இந்த மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த 20-ந்தேதி அன்று ஒரேநாளில் 586 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.60 லட்சத்து 36 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்த அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 12 ஆயிரத்து 551 குடிபோதை வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர்.

    இதன் மூலம் ரூ.12 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதத் தொகையாக கிடைத்துள்ளது. தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் அபராதத் தொகை செலுத்தாத 371 வாகன ஓட்டிகளின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த 1 லட்சத்து 63 ஆயிரத்து 318 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டு ரூ.6 கோடியே 78 லட்சத்து 69 ஆயிரத்து 540 அபராதத்தொகை வசூலித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையை போலீசார் துன்புறுத்தலாகக் கருதக்கூடாது. விழிப்புணர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
    • சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம், எல்.என்.டி.துறைமுகம், நிலக்கரி முனையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவொற்றியூர் முதல் மீஞ்சூர்-பொன்னேரி- மணலி சாலைகளை பயன்படுத்தி வருகின்றன.

    சரக்குகள் ஏற்றி மற்றும் இறக்கி செல்லும் வாகனங்களை டிரைவர்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதன் டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் மற்றும் மீஞ்சூர் போலீசார் பலமுறை அறிவுறுத்தினர். ஆனால் லாரிகள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நீடித்து வந்தது.இந்த நிலையில் செங்குன்றம் சரக போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைச்சாமி ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் மணலிசாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை 92 லாரிகளுக்கு மொத்தம் ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.56 ஆயிரம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், பேபி, மணவாளன், நரேஷ், சண்முகராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, திருவொற்றியூர்-மணலி-மீஞ்சூர் நெடுஞ்சாலைகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. லாரிகளை அதனை நிறுத்தும் வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதனை மீறும் லாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றார்.

    • போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும்.
    • மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் வைக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் வைக்கப்படும்.

    நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது மட்டுமின்றி போக்குவரத்து போலீசார் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும். அதே போல் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    அதிக வேகம், ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்தி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்காணித்து விதிமீறும் வாகனங்களின் டிரைவர்களுக்கு 15 நாட்களுக்குள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அபராதம் விதிக்க புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்.

    இதில் தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.

    அபராத சீட்டை பெற்றுக்கொண்டு இணைய தளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் அபராத தொகையை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.
    • அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.

    Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.

    போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடையில் கேமராவைபொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.

    போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் கூடிய ரசீது மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.

    அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு செலான்கள் அனுப்பப்படுகிறது.

    சென்னை:

    விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் பதிவாகும் காட்சிகள் மூலம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் விதி மீறல், சிக்னல்களை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் என போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கப்படுகிறது.

    பின்னர் அந்த வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு செலான்கள் அனுப்பப்படுகிறது.

    இந்த முறையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரே விதி மீறல் செய்தவராக கருதப்படுகிறார். ஆனால் சில நேரங்களில் வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த வாகனத்தை ஓட்டி செல்லாமல் தங்களது நண்பர்களுக்கு கொடுக்கும் போது அவர் விதிமீறலில் ஈடுபட்டாலும், வாகன உரிமையாளரே விதிமீறல் செய்தவராக கருதப்படும் நிலை உள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் போக்குவரத்து திருத்த விதிகளின்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை வேறொரு நபர் ஓட்டியதற்கான ஆதாரத்தை வழங்கி, தாங்கள் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

    அதன்படி உரிய ஆதாரங்களை போலீசாரிடம் சமர்பித்தால் ஏற்கனவே போலீசார் அனுப்பிய அபராத செலான்கள் ரத்து செய்யப்பட்டு உண்மையான குற்றவாளியின் பெயரில் அவரது ஓட்டுனர் உரிம எண்ணை பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.
    • போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகிறார்கள். இப்படி போதையில் சிக்குபவர்களில் பலர் அபராதத்தை கட்டாமல் ரசீதை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள்.

    இதுபோன்று அபராதம் செலுத்தாமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அபராதம் கட்ட வைப்பதற்காக போலீசார் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குடிமகன்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்க திட்டமிட்டு அதை நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதத்துக்கு பயந்து பலர் மது குடித்த பின்னர் வாகனங்களை ஓட்டுவதில்லை.

    அதே நேரத்தில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்று போதையில் வாகனம் ஓட்டி அபராதம் கட்டாமல் 8119 பேர் போலீசாரை ஏமாற்றி வருகிறார்கள்.

    இதுபோன்ற நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராத தொகையை வசூலிக்க போலீசார் கோர்ட்டு வரை சென்று வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவுகளையும் வாங்கி வைத்துள்ளனர். சென்னையில் 361 பேருக்கு எதிராக இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவர்களது அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்று அபராதம் கட்டாமல் தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் அனைவரது வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாதவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் அழைப்பு மையங்களை ஏற்படுத்தி போலீசார் அபராத வசூலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2 மாதங்களில் இந்த அழைப்பு மையங்கள் மூலமாக 8674 போதை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 97 லட்சத்து 27ஆயிரம் 400 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

    எனவே மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாமல் இருப்பவர்கள் உடனடியாக தங்களது அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆன்லைனில் பணம் செலுத்தும் அனைத்து வழிகளிலும் பணத்தை செலுத்தலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×