search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரரசு"

    • பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "நினைவெல்லாம் நீயடா".
    • இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    'சிலந்தி', 'ரணதந்த்ரா', 'அருவா சண்ட' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "நினைவெல்லாம் நீயடா". பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார்.

    "அப்பா" படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.


    லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ராஜா பட்டா சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, "இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1,417-வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும்.


    நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்ப பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது" என்று கூறினார். 

    • இந்த மாதிரி கதை கொண்ட படங்கள் தான் நல்ல படம்.
    • மக்கள் எல்லா பிரச்சினைகளையும் செய்தியாக கடந்து போகிறார்கள்.

    மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக 'பாய்' உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, எது நல்ல படம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை."

     


    "ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா? வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான். அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்," என்று தெரிவித்தார்.

    கே.ஆர்.எஸ். ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். இத்ரிஸ் படத்தொகுப்புசெய்திருக்கிறார். இப்படத்தை பி.வி.ஆர். பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

    • பல படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பேரரசு.
    • இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பேரரசு, திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது, "சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி சார் கேட்டு வாங்கியது இல்லை. தளபதி என்றால் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி . இது மிகப்பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இது விஜய் மற்றும் ரஜினி சாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? சில விஷயங்களை நாம் கடந்து போக வேண்டும்.


    சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அதில் நம்பர் ஒன் யார் என்று பேசலாம். சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அதை விஜய் சாரும் கேட்கவில்லை. ரஜினி சாரும் சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கும் சொந்தமில்லை என்று சொல்லியிருக்கிறார். பட்டம் என்பது விஷயமில்லை. யாரும் அடுத்த உலகநாயகன், அடுத்த நடிகையர் திலகம் என்று கூறுவது இல்லை. சூப்பர் ஸ்டார் என்பது அதுமாதிரியான ஒரு பட்டம் தான். அரசியலில் தான் வாரிசு என்றால் சினிமாவிலும் ஏன் பட்டத்தை வைத்து வாரிசு என்கிறீர்கள். பட்டத்தை பட்டமாக பாருங்கள்" என்று பேசினார். இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

    • சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடத்தல்’.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    காத்தவராயன், காந்தர்வன், இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடத்தல்'. இப்படத்தை பி.என்.ஆர். கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகனாக எம்.ஆர். தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், ஆர். ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'கடத்தல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, கடத்தல் இது என்ன கடத்தல், ஆள் கடத்தலா? எம்.எல்.ஏ.கடத்தலா? உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள்கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும் அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். இந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம் ஆனால் அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன் எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது.

    சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள். ஆனால் வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்சினையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் அனைவரும் கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி.


    சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன், ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது. உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா அவரை ஜாதி பார்த்தார்களா சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள். அது தான் சினிமா, அவரை ஜாதி என்ன என பார்க்க மாட்டார்கள். என்னை உதவியாளராக சேர்த்த போது நான் என்ன ஜாதி என கேட்கவில்லை.

    விஜய் சார் வாய்ப்பு தந்தார் அவர் என்னிடம் கதை தான் கேட்டார் ஜாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சவுத்திரி சார் ஜாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன என கேட்பவன் இயக்குனரே இல்லை. சிறுபான்மையினர், ஜாதி, மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள். இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன், கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி ஜாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள். முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சினை ஆக்காதீர்கள். சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி" என்று கூறினார்.

    • இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லைசென்ஸ்’.
    • இந்த படத்தில் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஜே.ஆர்.ஜி. புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான இயக்குனரின் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியான சாய்ஸ்.


    ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.

    அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.


    ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம். மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையுடன் பேசினார்.

    • மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    • இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஏ.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நடைபெற்றது.


    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி


    இதில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், மயில்சாமியின் மகன் அன்பு, படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.


    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம்.


    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி

    விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்" என்று கூறினார். 

    • 'நெடுமி' பட விழாவில் இயக்குனர் பேரரசு பங்கேற்று கொண்டு பேசினார்.
    • கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்'' என பேரரசு தெரிவித்துள்ளார்.

    பனை மர தொழில் மற்றும் அதை சார்ந்து வாழ்வோரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'நெடுமி'என்ற படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக பிரதீப் செல்வராஜ், நாயகியாக அபிநயா நடித்துள்ளனர். நந்தா லட்சுமன் இயக்கி உள்ளார். எம்.வேல்முருகன் தயாரித்துள்ளார்.

    'நெடுமி' பட விழாவில் இயக்குனர் பேரரசு பங்கேற்று பேசும்போது, ''பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள். பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி. கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.


    பேரரசு

    பேரரசு

    அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்'' என்றார்.

    • இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லாக்’.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.

    'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குனர் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.


    லாக் இசை வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, " பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துக்களை நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான். இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது.

    ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள். இன்டர்வெல் லாக் என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான் லாக். பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார்.

    அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால் அது தோல்விப்படம். இயக்குனர் ரத்தன் லிங்காவைப் பார்க்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குனர் ஆவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குனராக இருந்து, பிறகு இணை இயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்றி ,வெளியே வந்து கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து பிறகு தான் இயக்குனராக முடியும். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள்.

    ஆனால் ரத்தன் லிங்கா படிப்படியாகக் குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். அப்படி வளர்ந்து இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது குறும்பட காலத்திலேயே அவரை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் . அவர் நிதானமாகத்தான் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவசரத்தில் எதுவும் வெற்றி பெறாது .இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லி உள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.


    லாக் இசை வெளியீட்டு விழா

    பெண்கள், ஆண்களுக்கு நிகராகப் பல பணிகளைச் செய்யலாம் . ஆனால் ஆண்களைப் போலவே, ஆண்கள் மாதிரி வாழ நினைக்கக் கூடாது. அங்கே தான் நிறைய பெண்களுக்கு பிரச்சினை வருகிறது. நிறைய தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெண்கள், ஆண் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தனது நண்பர்களை தைரியமாக அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும் .அப்படி அறிமுகப்படுத்தாமல் மறைத்தால் பிரச்சினை வரும். குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்படும் நண்பன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினர் கவனித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவசாலிகள் .

    இருமல், தும்மல் போன்று தான் காமமும் .நம்மை மீறி வந்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

    • இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
    • ஜவான் படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    அட்லீ -ஷாருக்கான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது."


    ஜவான்

    இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் 'மௌன ராகம்' படத்தைப் போல் இருப்பதாகவும் 'மெர்சல்' படம் 'மூன்று முகம்' படம் போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • நித்யானந்தா பலருக்கு தர்ம ரட்சகர் விருது அறிவித்துள்ளார்.
    • தற்போது இவர் இயக்குனர் பேரரசுக்கு இந்த விருதை அறிவித்துள்ளார்.

    சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.


    பேரரசு

    இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அடுத்ததாக இந்த தர்ம ரட்சகர் விருது இயக்குனர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.


    நித்யானந்தா

    உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
    • இந்த விழாவில் வெற்றிமாறனின் பேசியதை இயக்குனர் பேரரசு விமர்சனம் செய்துள்ளார்.

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள்.

    வெற்றிமாறன்

    அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே நாங்கள் மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள்.

    பேரரசு

    ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.

    உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்,நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு.
    • சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பேரரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.

    "புளுசட்டை" என்ற பட விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்தில் கடுமையாக விமர்சனம் செய்பவரின் நாக்கை அறுப்பது போல் ஒரு காட்சி, அந்த குறும்படத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்தார். "கடுமையாக எழுதுவது தவறுதான் என்றாலும், நாக்கை அறுத்து தண்டிப்பது போல் எப்படி காட்சி வைக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினார்.

     

    பேரரசு

    பேரரசு

     

    அதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு குரல் எழுப்பினார். "நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். இயக்குனர் ஆவதற்கு 5 வருடங்கள் ஆனது. அந்த 15 வருடங்களில் ஊருக்கு கூட போகமுடியவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி அது வெளிவரும்போது கடுமையாக தாக்கி வா போ என தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால் ஒரு புது இயக்குனரின் மனம் என்ன பாடுபடும்? கடுமையான சொற்களால் தாக்கி எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் பார்த்து எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக்கூடாது" என்றார்.

    விழாவின் நோக்கம் மறந்து வேறு பாதையில் விலகி, விவகாரமாகும் சூழ்நிலையை உணர்ந்த ஜாக்குவார் தங்கம் மேடையில் இருந்து இறங்கி வெளிநடப்பு செய்தார். காரசாரமாக நடந்த இந்த படவிழா இறுக்கமான சூழ்நிலையில் முடிவடைந்தது. இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

    ×