search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிவிபத்து"

    • இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி:

    குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 1,087 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (30), சாந்தி (43), ஜெயா (57), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (50), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துசாமி (43), குருசாமி (50), முனியசாமி (42), சித்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (26), கிளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29), நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அவ்வைராஜ் (62) ஆகியோர் இறந்தனர்.

    5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்த சிவக்குமார், முத்துக்குமார், ரெங்கம்மாள் உள்பட 4 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியை சுற்றியுள்ள 60 சதவீதம் பட்டாசு ஆலைகளை அதன் லைசென்சு பெற்ற உரிமையாளர்கள் நடத்துவதில்லை.

    மாறாக, அதனை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். அவ்வாறு குத்தகைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே பணியில் இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் 10-க்கும் மேற்பட்டோரை பணியில் வைக்கிறார்கள்.

    கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூடுதல் தொழிலாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள். வெடிமருந்து பயன்பாடு வழக்கத்தைவிட அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பட்டாசு தொழிலை மட்டுமே தெரிந்திருக்கும் ஆட்களை கொண்டு ஆலைகளை இயக்காமல் அதிக சம்பளம் தருவதாக கூறி தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தபோது பணியில் இருந்த தொழிலாளி செல்வம் கூறுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் செல்ல முயன்றோம். ஆனால் அடுத்தடுத்த அறைகள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டு இருந்தன.

    அதேவேளையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்தது. எனவே எங்களால் நெருங்க முடியவில்லை. ஒருவழியாக முதலில் வெடித்து சிதறிய அறைக்கு அருகில் சென்றபோது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுற மும் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தனர். அதிலும் ஒருவரின் ஆடைகள் மட்டும் அங்குள்ள மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

    நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்துவருகிறோம். இன்று நடந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என நினைக்கிறோம். காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை என்றபோது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை.

    காலையில் அனைவரும் ஒன்றாக வேலைக்கு வந்தோம். ஆனால் மாலையில் 10 பேர் பிணமாக வீடு திரும்பியதை எண்ணும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைக்கும் தொழிலாக பாதுகாப்பற்ற பட்டாசு தொழில் வந்துவிட்டது என்றார்.

    மற்றொரு தொழிலாளி கூறுகையில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இன்னும் திறந்து பணிகளை தொடங்காத நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாண வேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.

    இந்த வகை வாணவேடிக்கைகளை தயாரிக்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்கவேண்டும். எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுத் தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

    மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர் களை தீவிரமாக தேடி வரு கிறார்கள்.

    • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பம்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

    • இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது. கன்னி சேரி புதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இனாம் ரெட்டிய பட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (18), தம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த சரவண குமார் (25) ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார், மேலாளர் கருப்பசாமி(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்ப சாமி கைது செய்யப்பட்டார்.

    • சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார்.
    • இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தபோதிலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் விலையில்லா உயிர்கள் பறிபோவது தடுக்க முடியாததாகி வருகிறது. அதேபோல் இன்று காலை நடந்த வெடிவிபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சாத்தூரை அடுத்த சின்ன கொல்லப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தற்போது விவசாயம் எதுவும் செய்யப்படாத நிலையில் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேலும் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார். அங்கு ரகசியமாக விவசாய வேலை பார்ப்பதற்கு ஆட்களை அழைத்து வருவது போன்று சிலரை அழைத்து வந்து இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறை முழுவதுமாக இடிந்துவிழுந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி பலியானது சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 27) என்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜ கோபாலை தேடி வருகிறார்கள்.

    • வெடி விபத்து ஏற்பட்ட அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
    • பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகளுக்காக மீண்டும் இந்த ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தொடங்கின.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்திருந்த ஆர்டர்களின் பேரில் பட்டாசு உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியது. இதற்காக அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள மருந்து சேமிக்கும் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறையில் 'திடீர்' வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதில் மற்ற 3 அறைகள் உள்பட 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இருந்தபோதிலும் அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    இந்த பயங்கர விபத்தில் கன்னிசேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இருவரும் தரைமட்டமான அறைகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானோர் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.
    • ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே கனிஷ்கர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடையும் வைத்திருந்தார்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கடையின் பின்புறம் அனுமதி பெறாமல் விதிகளை மீறி தகர செட் அமைத்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் அங்கு பட்டாசு வாங்க வந்த வெளியூரை சேர்ந்த நபர்கள் சரவெடி ஒன்றை பரிசோதனை முறையில் கடையின் முன்பாக வெடித்து பார்த்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கிருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முழுமையாக அணைப்பட்ட பிறகே பலியானவர்களின் உடலை மீட்கும் பணி நடந்தது.

    இதில் அங்கு பணியாற்றிய வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த சின்னத்தாய் (35), பொன்னுத்தாய் (55) ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கரிக்கட்டையாக மீட்கப்பட்ட பலியான 13 பேரின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.

    அதேபோல் சிவகாசி அருகே மாரனேரி கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒரே நாளில் பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் பலியாகினர்.

    12 பெண்கள் உள்பட 13 பேரை உயிரை பலி வாங்கிய ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, போர்மேன் கனகு என்ற கனகராஜ் (41), மேலாளர் ராம்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்துகளை முறையாக கையாளாதது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது, பட்டாசுகளை பாதுகாப்பின்றி விதிகளை மீறி வைத்திருந்தது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

    • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்த 7-ந்தேதி, நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (17) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கர்நாடக மாநிலம் முல்பாகலை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்ற வாலிபரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.

    • தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
    • புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிவகாசி, விருதுநகர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்று சேர்த்து பின்னர் அவர்கள் யார்? யார்? என அடையாளம் கண்டனர்.

    தொடர்ந்து காயம் அடைந்த 13 பேரில் 7 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில மாதங்களாக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வேகமாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இவர்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியம் பாஸ்பேட் இருந்த பெட்டியை வேகமாக இழுத்ததாக தெரிகிறது. அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வேலை செய்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரும் உறுதி செய்துள்ளார். மேலும் இங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளை போல வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும்.
    • விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார்.

    அதன்படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-

    அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.

    தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
    • அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

    பொதுவாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து நடந்தால் தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடிப்பதாலும் அருகில் சென்று தீயை அணைப்பது சிரமமானதாகும். இதனால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததாலும் விபத்துகள் நிகழுகின்றன.

    கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

    • பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
    • படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இந்த ஆலையில் 11 பேர் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.

    அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது.

    வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள், பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் சிதறி கிடந்தன.

    இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த பொறையாறு போலீசார், வெடிவிபத்தில் பலியான 4 வாலிபர்களின் உடல்களை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    கவிசாரணையில், பலியான வாலிபர்கள் கிடங்கல் மாமாகுடியை சேர்ந்த பக்கிரி மகன் மாணிக்கம் (வயது 32), மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் மதன்(21), சித்தர்காட்டை சேர்ந்த மணிமாறன் மகன் நிகேஸ்(22), மூவலூரை சேர்ந்த ராஜ்மோகன் மகன் ராகவன்(22) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களில் உயிரிழந்த நிகேஸ் கல்லூரி மாணவர் ஆவார்.

    மேலும் படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகனிடம் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா விசாரணை நடத்தி வருகிறார். வெடி விபத்து நடந்த இந்த பட்டாசு தொழிற்சாலை லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பொறையாறு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×