search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக இடைத் தேர்தல்"

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #AMMK
    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்ததேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்ட சபை தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கும் இடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனின் தனது கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து இருப்பதால், அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக “டார்ச் லைட்” சின்னம் ஒதுக்கப்பட்டது.

    ஆனால் டி.டி.வி.தினகரன் தனது “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி இதுவரை பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக டி.டி. வி.தினகரன் கட்சி வேட்பாளர்கள் பொதுவான ஒரு சின்னத்தை பெறுவதில் சிக்கல் உருவானது.

    டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க.வுடன் வேறு எந்த பெரிய கட்சியையும் கூட்டணி சேர்க்கவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சியை மட்டுமே கூட்டணியில் சேர்த்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியை தினகரன் கொடுத்துள்ளார்.

    மீதமுள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள், 19 சட்டசபை தொகுதிகளில் டி.டி.வி.தினகரன் தனித்துப் போட்டியிடுகிறார். இந்த 58 தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இந்த 58 வேட்பாளர்களுக்கும் தனது ராசியான சின்னமான குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குக்கர் சின்னம் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகி இருந்ததால் அந்த சின்னம் கிடைத்தால் பிரசாரம் செய்ய எளிதாக இருக்கும் என்று தினகரன் நினைத்தார். இதற்காக அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.

    அப்போது, “பதிவு செய்யப்படாத கட்சிக்கு குறிப்பிட்ட ஒரு சின்னத்தை ஒதுக்க கோரும் உரிமை கிடையாது” என்று நீதிபதிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி உத்தரவிட இயலாது என்று தீர்ப்பளித்தனர்.



    இதையடுத்து தங்களது வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொதுச்சின்னத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரனின் வக்கீல்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “தினகரன் கட்சிக்கு வேறு ஒரு பொதுச் சின்னம் வழங்க பரிசீலிக்கலாமே... அவர்கள் வெற்றி பெற்றால் சுயேச்சை எம்.எல்.ஏ.வாகத்தான் கருதப்படுவர்” என்று யோசனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் தரப்பில் தனி மனு கொடுக்கப்பட்டது.

    அந்த மனு மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சுயேச்சையாக கருதப்படும் வேட்பாளர்களுக்கு பொது சின்னம் வழங்கினால் அது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடுமோ என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதனால் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு பொதுச்சின்னம் கிடைக்குமா? என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி.தினகரன் தரப்பில் நேற்று ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் அவர், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம், டி.வி.தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத்குமார் சர்மா இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.  இந்த அறிவிக்கை நகல் தமிழக, புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சுப்ரீம்கோர்ட்டு 26-3-19 அன்று வழங்கிய அறிவுறுத்தலின் பேரிலும் மனு தாரர் (தினகரன்) பரிந்துரையின் பேரில் மனுதாரர் அமைத்துள்ள குழுவுக்கு “பரிசுப் பெட்டி” சின்னம் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும், புதுச்சேரியில் பாராளுமன்ற தொகுதியிலும், ஒரு சட்டசபை இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னத்தை மனுதாரர் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு ஒதுக்கலாம்.

    இத்துடன் மனுதாரர் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பட்டியலை இணைத்துள்ளோம். அவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று மாலை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்போது டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்படும். #LokSabhaElections2019 #AMMK
    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார். #LokSabhaElections2019 #MKStalin
    திருவாரூர்:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் 8 கட்சிகளும், தி.மு.க. கூட்டணியில் 9 கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இரு கூட்டணிகளையும் ஏராளமான அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகள் போட்டி போட்டு ஆதரிக்கின்றன.

    கூட்டணி அமைப்பதில் தொடங்கி வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் பிரசாரத்தை தொடங்குவது ஆகியவற்றில் அ.தி.மு.க. தலைவர்களும், தி.மு.க. தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். கடந்த 17-ந்தேதி ஒரே நாளில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. நேற்று அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் வெளியானது.

    இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல் கட்டமாக மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை பிரசார சுற்றுப்பயண திட்டத்தை வெளியிட்டார். முதல் கட்டத்தில் இன்று முதல் மொத்தம் 18 நாட்கள் அவர் இடைவிடாமல் பிரசாரம் செய்கிறார்.

    மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தனது பூர்வீக ஊரான திருவாரூரில் தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்காக நேற்று அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் சென்றார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு அங்கிருந்த கருணாநிதி படத்துக்கும் மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் திருவாரூர் கீழவீதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று அதிகாலை அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    திருவாரூர் கீழ சன்னதி தெரு, திருவள்ளுவர் நகர், வாசன் நகர், காந்தி நகர், மருதப்பாடி மற்றும் அய்யனார் கோவில் தெரு,கீழ வீதி உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திருவாரூர் தொகுதி சட்டசபை வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

    வீதி வீதியாக சென்ற அவர் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். நிறைய பேரிடம் அவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    பிரசாரத்தின் போது அவரை ஆண்களும், பெண்களும் உற்சாகமாக வரவேற்றனர். நிறைய இடங்களில் வாலிபர்களும், இளம்பெண்களும் சிரித்தப்படி மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டனர். அப்போது செல்பிக்காக அவர்களுடன் மு.க.ஸ்டாலின் பொறுமையாக நின்று விட்டு சென்றார்.



    வீதி, வீதியாக சென்ற மு.க.ஸ்டாலின் ஒரு கட்டத்தில் வீடு வீடாகவும் சென்று தி.மு.க., கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டார். வாக்காளர்களை கண்டதும் முகம் மலர கை கூப்பியப்படி மு.க.ஸ்டாலின் வணங்கி வாக்கு சேகரித்தார்.

    8 மணிக்கு பிறகு பல இடங்களில் நடந்தே சென்று அவர் வாக்குகளை சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மு.க.ஸ்டாலின் தெருக்களில் நடந்து சென்ற போது எதிரே வரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி ஸ்டாலினிடம் கை குலுக்கினார்கள். அவர்களில் பலரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    இதுபோல திருவாரூர் வீதிகளில் பல இடங்களில் சிறுவர்-சிறுமிகள் மு.க. ஸ்டாலினுக்கு ஆர்வத்துடன் ஓடிவந்து பூக்கொத்துக்களை கொடுத்தனர். அவற்றை சிரித்தப்படியே வாங்கிக் கொண்ட மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிகளிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் இந்த நட வடிக்கைகளால் திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தி.மு.க. நிர்வாகிகளுடன் பொதுமக்களும் வரவேற்றதால் உற்சாகம் அடைந்த மு.க.ஸ்டாலின் பெரும்பாலான தெருக்களில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு இடையே திருவாரூர் கீழ சன்னதி வீதியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு சிறிது நேரம் அமர்ந்து நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    பின்னர் திருவாரூரில் இருந்து காரில் புறப்பட்டு மணக்கால் கிராமத்துக்கு சென்றார். அங்கு பெண்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் மறக்காமல் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு கொண்டார்.

    அங்கு பிரசாரம் முடிந்ததும் திருக்காரவாசல் கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். அந்த ஊர் மக்கள் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

    அவர்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்க நட வடிக்கை எடுத்துள்ளனர். இந்த திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டாம். இதை உடனடியாக கைவிட செய்ய வேண்டும். இந்த திட்டம் வந்தால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்” என்று கூறினார்கள்.

    பொதுமக்கள் சொன்னதை மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் அந்த பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    காலை 11 மணிக்கு திருவாரூர்-நாகை புறவழிச் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இதையடுத்து மீண்டும் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை மு.கஸ்டாலின் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சை திலகர் திடலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.  #LokSabhaElections2019 #MKStalin
    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.



    வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

    வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன. இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

    அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். (முன்பு ஒரு ஆண்டு வருமான வரிக்கணக்கு). இந்து கூட்டுக்குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

    அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள், டி.வி. சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

    இதற்கிடையே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிடுகின்றன. #LokSabhaElections2019 #ParliamentElections #TamilnaduByElection #Nomination

    ×