search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வெள்ளம்"

    கேரளாவை நிலைகுலைய வைத்த வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் வாடகையாக மத்திய அரசு ரூ.290 கோடியை கேட்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது.

    கேரளாவில் வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது. குறிப்பாக விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் மக்களை துரிதமாக மீட்பதில் பெரும் உதவியாக இருந்தது.

    வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கேரள வெள்ள பாதிப்பு குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தகவல்களை தெரிவித்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-


    வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவில் ரூ.26 ஆயிரம் கோடியே 718 லட்சத்திற்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக ஐ.நா. சபை ஏஜென்சிகள் கணக்கு எடுத்து உள்ளன. கேரள மறு சீரமைப்புக்கு ரூ.31 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசு கேரள மீட்பு பணிக்கு விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களை வழங்கியது. இந்த செலவுக்காக ரூ.290 கோடியே 74 லட்சத்தை வழங்க வேண்டுமென மத்திய அரசு நம்மிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மீட்புப்பணியின் போது 56 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம், கோவை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தூரத்தை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 மணி நேரம் ஹெலிகாப்டர் பறக்க ரூ.3 லட்சம் செலவாகிறது. பெரிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்கு இதை விட கூடுதல் கட்டணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods
    கேரளா வெள்ள பாதிப்பின் போது பொது மக்களுக்கு உதவிய மீனவருக்கு மஹிந்திரா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. #Marazzo



    இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.

    இயற்கை சீற்றத்தால் மாநிலமே சீரழிந்த போதும், மனம் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்தனர். அவ்வாறு உதவ வந்தவர்களில் ஒருவர் தான் ஜெய்சல் கே.பி. இதேபோன்று ஏராளமான மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினர்.



    இவர்கள் சேவையை பாராட்டி மாநில அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கினார்.

    மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார்கள். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர். 

    இதை பார்த்த ஜெய்சால் என்ற மீனவர் வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்ததும் அந்த மீனவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.



    இந்த நிலையில் மீனவர் ஜெய்சாலின் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் ஜெய்சலுக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவரிடம் வழங்கினார்.

    இதுபற்றி மீனவர் ஜெய்சால் கூறும்போது நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.

    மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் மராசோ கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எனும் துவக்க விலையில் கிடைக்கும் மராசோ தற்சமயம் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கேரள மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தின் எதிரொலியாக, மாநிலத்தின் அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்தன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியிலும், அதற்காக நிதி திரட்டும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், கேரள மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் சர்வதேச திரைப்பட கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நிதி சேமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும் கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. #KeralaFloods
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நெல்லையில் இருந்து ரெயில் மூலம் 3.30 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர் அனுப்பப்பட்டது. #KeralaFloods
    நெல்லை:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் மூழ்கடித்தது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து தன்னார்வ அமைப்புகள், வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சியினரும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். பெட்ஷீட், பால் பவுடர், மருந்து பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பாக கேரள மக்களுக்கு ஏற்கனவே சென்னை, ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கண்டெய்னர்களுடன் சரக்கு ரெயில் நெல்லை ரெயில்நிலையத்திற்கு வந்தது. அதில் தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 சின்டெக்ஸ் தொட்டிகள், தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 தொட்டிகள் இருந்தன. அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் நிரப்பப்பட்டது.



    இதையடுத்து நேற்று மாலை சரக்கு ரெயில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. அங்கிருந்து கோட்டயம், எர்ணாகுளம் பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதேபோல் கேரளாவில் ரெயில் பாதை மற்றும் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரிசெய்யவும், சாலைகளை சீரமைக்கவும் நெல்லையில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலமாக ஜல்லி கற்கள், மணல் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி தலா 50 டன் கொண்ட 26 லோடு மணல் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தலா 40 டன் எடை கொண்ட 36 லோடு ஜல்லிகற்கள் நெல்லை, மதுரை பகுதியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை ரெயில்நிலைய மேலாளர் இளங்கோவன் கூறுகையில், ‘ரெயில் மூலமாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்ப அரசு கட்டண விதிவிலக்கு அளித்துள்ளது. எனவே ரெயில்வே பார்சல் சேவை மூலமாக கேரளாவிற்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம்’ என்றார். #KeralaFloods
    கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1.75 கோடி நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #KeralaReliefFund

     
    உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது.

    கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் தனது அம்சங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதவும் நோக்கிலும், உதவி செய்வோரை அவர்களுடன் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக 2,50,000 டாலர்கள் வழங்குகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆகஸ்டு 8-ம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத அளவு கனமழையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என கேரளாவின் பெருமளவு மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்புகளில் சிக்கி இதுவரை சுமார் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்து நிவாரன முகம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.



    உலகம் முழுக்க ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ பிரத்யேக க்ரூப்கள், லைவ் வீடியோக்கள் மற்றும் பக்கஙக்ளை துவங்கி நிவாரன உதவிகளில் ஈடுபட்டுள்ளனர். க்ரூப்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரன பொருட்களை வழங்குவது குறித்த தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்கிறது.

    ஆகஸ்டு 9-ம் தேதி சேஃப்டி செக் அம்சத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தியது. இதன் மூலம் மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. ஃபேஸ்புக்கின் ஹெல்ப் அன்ட் க்ரைசிஸ் டொனேட் பட்டன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,300-க்கும் அதிகமான போஸ்ட்களை ஈர்த்திருக்கிறது. மேலும் க்ரைசிஸ் டொனேட் பட்டன் மூலம் இதுவரை 500 பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளதாக தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தெரிவித்தார். #KeralaFlood #SupremeCourtJudge
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளனர். நேற்று ஒரு பொதுநல மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா இந்த தகவலை தெரிவித்தார்.

    நீதிபதிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அளிப்பார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ரூ.1 கோடியும், அவருடைய மகனான மூத்த வக்கீல் கிருஷ்ணன் ரூ.15 லட்சமும் அளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

    கேரளாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப், கேரளாவுக்கு நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவதில் வக்கீல்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கணிசமான நிதி உதவியையும் அவர் அளித்துள்ளார். #KeralaFlood #SupremeCourtJudge #tamilnews
     
    தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். #KeralaFlood #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கேரள வெள்ள சேதம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மூத்த அதிகாரிகள், வெங்கையா நாயுடுவின் செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.



    அவருடைய ஒரு மாத சம்பளம் ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளனர். #KeralaFlood #VenkaiahNaidu
    மதுரை மாநகராட்சி சார்பில் கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்களை ஆணையாளர் அனீஷ் சேகர் இன்று அனுப்பி வைத்தார். #KeralaFloods #KeralaRain
    மதுரை:

    மதுரை மாநகராட்சி சார்பில் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களாக 4660 கிலோ அரிசி, 800 கிலோ பருப்பு, 175 கிலோ கோதுமை, 839 சோப்புகள், 5240 நாப்கின்ஸ், 1704 பெட்சீட்கள், 1027 நைட்டீஸ், 1191 கைலிகள், 290 வேட்டிகள், 1336 துண்டுகள், 7810 மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள், 25 சில்வர் தட்டுகள், 30 சில்வர் பானைகள், 1 சாக்கு பொரிகடலை, 2 சாக்கு உப்பு, 2 சாக்கு புளி, 15 பண்டல் தலைவலி மருந்துகள், 5 தலையனைகள், 25 ஸ்வெட்டர்கள், 50 பாக்கெட் மாஸ்க்குகள், 4262 பாக்கெட் பிஸ்கட்ஸ் மற்றும் ரஸ்க் பொருட்கள், 3 பண்டல் மருந்து பொருட்கள் என 43 வகையான சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 2 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் மதுரை மாநகராட்சியில் இருந்து 400 மூடைகள் கொண்ட 10 டன் பிளீச்சிங் பவுடர் 2 டிப்பர் லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் மணி வண்ணன், நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, நாராயணன், பிரேம்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) ரங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #KeralaFloods #KeralaRain
    ×