search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலப்பு திருமணம்"

    • சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தொப்பூர்:

    தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

    கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களிலும் வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது37) என்பவர் மொரப்பூர் அருகே உள்ள பறையப்பட்டியில் வேறு சமூகத்தை சேர்ந்த சுதா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் விழாக்குழுவினர் சுரேஷ் குடும்பத்தினரிடம் கோவில் விழாவுக்கு வரி வாங்கவில்லை. இதனால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் இருரப்பினர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு காதல் தம்பதி சுரேஷ், சுதா ஆகியோர் குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராமு (வயது 35), மற்றொரு முருகன் மனைவி கவிதா (38), அனுமந்தன் மனைவி அலமேலு (36), மாதேஷ் மனைவி தேன்மொழி (35), ரமேஷ் மனைவி அமுதா (35), அசோகன் மனைவி விஜயா (23) ஆகிய 6 பேரும் கோவில் அருகே பாயாசம் செய்து அதில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து நேற்று வேப்பமரத்தூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயசெல்வம், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் ஊர்கவுண்டர் துரை மற்றும் சுரேஷ், அவரது மனைவி சுதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். 

    • பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
    • பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்த முற்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த கலப்பு திருமணம் தம்பதியினரை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினர், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். காதல் கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 22 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.

    மேலும் இது அனைவருக்குமான கோவில் தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலப்பு திருமணம் செய்த தம்பதியினரிடம் வரி வாங்கவில்லை என்றும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலப்பு திருமணம் செய்தவர்களால் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவு ஊர் நடுவில் பாயாசத்தை காய்ச்சினர்.

    பின்னர் அவர்கள் அதில் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து கிராம மக்களில் 6 பேர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே போலீசார் தடுக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த பாயசாத்தை வேப்பமரத்தூரைச் சேர்ந்த ராமு (வயது35), கவிதா (35), அமுதா (35), அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய 6 பேர் குடித்துள்ளனர்.

    இதனால் பதறிப்போன போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் தருமபுரி தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, தம்பிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (24). டிப்ளமோ முடித்து பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நர்மதா (23) பி.எஸ்.சி. பட்டதாரி. 2 பேரும் ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 13-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களால் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தங்கதுரை, நர்மதா தம்பதிகள் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்களை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து தங்கதுரை, நர்மதா மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

    ×