search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் ரெயில் நிலையம்"

    • பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
    • வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.

    மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    • ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய 1 மற்றும் 2 நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
    • ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேத்துப்பட்டு ரெயில் பணிமனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது.


    இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.
    • தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்டவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர்.

    சென்னை:

    திருச்செந்தூரில் இருந்து கடந்த 17-ந்தேதி இரவு புறப்பட்டு சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பலத்த மழை-வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    பாதுகாப்பு கருதி ரெயில் நிறுத்தப்பட்டதால் அதில் வந்த 800 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் ரெயில் பெட்டியிலும் அங்குள்ள பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

    ஆனால் மழையும் வெள்ளமும் கோர தாண்டவம் ஆடியதால் அவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. பாதுகாப்பாக ரெயில் பெட்டியிலேயே இருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    பள்ளியில் தங்கியிருந்த  300 பேர் நேற்று மீட்கப்பட்டனர். அதே போல ரெயிலில் இருந்த 508 பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் இருந்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். நைலான் கயிறு உதவி மூலம் வெள்ள நீரை பயணிகள் கடந்து வந்தனர். அதே போல பெரியவர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ரெயிலில் இருந்து 508 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் சென்னைக்கு பயணமானார்கள். இரவு 11.15 மணிக்கு மணியாச்சியில் இருந்து 508 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது.

    கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் வரக்கூடிய அதே வழித்தடத்தில் புறப்பட்டு வந்தது. பயணிகளுக்கு இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு வரை ரெயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டன.

    காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ரெயில் தாமதமாக வந்தது. மதியம் எழும்பூர் வந்து சேர்ந்தது. விழுப்புரத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அங்கு சிறிது நேரம் நின்ற ரெயில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், வடை மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு ரெயில் திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்றது. பயணிகள் 3 நாட்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊரை அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் அவர்களை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.


    தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.

    ஒவ்வொரு பயணிகளும் குடும்பம் குடும்பமாக சிறப்பு ரெயிலை விட்டு இறங்கி சென்றனர். 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் மற்றவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    • அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    • இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை:

    மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் அடையும் சிரமத்தை நேற்றைய தினம் சமூகவலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டு இருப்பதை கண்ட பிறகாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொண்டு உடனடியாக அவற்றை சரிசெய்வதோடு, அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுகுறித்து பலமுறை மண்டல கூட்டத்திலும், பலமுறை கடிதம் வாயிலாகவும் ரெயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

    • 2-வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது.
    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் 115 ஆண்டுகள் பழமையான கடிகாரம் இயங்கி வந்தது.

    சென்னை :

    சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. தெற்கு ரெயில்வேயில் 2-வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. 144 ஆண்டுகள் கடந்தும் இந்த தொண்மையான கட்டிடம் எழில்மிகு வகையில் காட்சி அளிக்கிறது. நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி வருகின்றது.

    ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த எழும்பூர் ரெயில் நிலையத்தில் 115 ஆண்டுகள் பழமையான கடிகாரம் இயங்கி வந்தது. இங்கிலாந்தில் உள்ள டெர்பி என்ற ஊரில் செயல்பட்டு வந்த 'ஜெ ஸ்மித் அண்டு சன்ஸ்' என்ற நிறுவனம் இந்த கடிகாரத்தை தயாரித்து கொடுத்தது. முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட கடிகாரமாக இது உள்ளது. டிஜிட்டல் கடிகாரம் வருவதற்கு முன்பாக எழும்பூர் ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கு இந்த கடிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் போது 4-வது நடைமேடைக்கு அருகிலேயே இந்த கடிகாரம் அமைந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கடிகாரம் திடீரென செயல்படாமல் நின்று போனது. இதையடுத்து இந்த கடிகாரம் கருப்பு துணி கொண்டு மூடப்பட்டது. எழும்பூர் ரெயில் நிலையம் பராமரிப்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த தொன்மையாக கடிகாரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகளும், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "2020-ம் ஆண்டு முதலே இந்த கடிகாரம் செயல்படாமல் போய்விட்டது. இது 1900-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தயாரிக்கப்பட்ட கடிகாரம். இதில் பழுது ஏற்பட்ட உடன் இதை சரி செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால், கடிகாரத்தின் உள்ளே பழுது ஏற்பட்ட பொருள் சந்தையில் கிடைக்கவில்லை. பழுதான பொருளை மாற்ற பல மாதங்களாக சந்தை சந்தையாக அலைந்து பார்த்தோம். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. அதனாலேயே துணி கொண்டு மூடப்பட்டுவிட்டது. இந்த கடிகாரத்தை அகற்றவும் முடியாது" என்றார்.

    • எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

    சென்னை:

    எழும்பூர், சென்ட்ரல், ரெயில் நிலையங்களில் நிழல் கூரை இல்லாததால் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் பழமை வாய்ந்த எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள ரெயில் நிலைய வளாகத்தில் கட்டண வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகின்றன.

    இங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகிறார்கள். ஆனால் வாகனங்களுக்கு நிழற்கூரை, எந்தவித பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லை. இதனால வெயில், மழையால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிழற்கூரை மற்றும் பந்தல் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் விரைவு ரெயில், மின்சார ரெயிலில் பயணம் செய்ய மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வாகனங்களில் வருகின்றனர். எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த 2 பெரிய ரெயில் நிலையங்களில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் செய்து கொள்ள எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். வெளியூர்களுக்கு செல்பவர்களின் இருசக்கர வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உடனடியாக கூரைகள் அமைத்து வெயில், மழையால் பாதிக்கப்படும் வாகனங்களை பாதுகாக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த பணிகள் அனைத்தும் உலகத்தரத்தில் இருக்கும்.

    சென்னை :

    இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு நாள்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 442 புறநகர் ரெயில்கள் என 562 ரெயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் சராசரியாக 26 ஆயிரத்து 400 பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

    தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில்நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

    அதன்படி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்த பணிகளை மேற்கொள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது.

    பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

    தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன.

    விமான நிலையத்தில் இருப்பது போன்று பயணிகள் வருகை, புறப்பாடு பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நடைமேடை, காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப்பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் பிரத்யேக பாதை அமைக்கப்பட இருக்கிறது.

    பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்கு தடையின்றி ரெயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளிவளாகப் பகுதி பிரமாண்டமாக அமைய இருக்கிறது. பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுமானம் அமையும். இந்த பணிகள் அனைத்தும் உலகத்தரத்தில் இருக்கும்.

    மறு சீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. மரங்கள் மற்றும் பயன்பாட்டு பகுதி, கட்டுமானத்துக்கான நிலப்பரப்பு கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

    புதிய கட்டிடம், பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், காத்திருப்பு அரங்கு, அடுக்குமாடி வாகன காப்பகம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    11 இடங்களில் ஆழ்துளை கருவிகள் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மறு சீரமைப்பு பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டுமே தினசரி சுமார் 5 ஆயிரம் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
    • டிக்கெட் கவுண்ட்டர்களில் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

    சென்னை :

    சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர் என பெரும்பாலானோர் மின்சார ரெயில் சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    அந்தவகையில் சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கமாக வாரநாட்களில் 244 மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் முக்கிய ரெயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்கான பயணிகள் கூட்டம் எப்போதும் இருந்து வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டுமே சராசரியாக தினசரி சுமார் 5 ஆயிரம் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மின்சார ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற 4 தனி டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற 3 கவுண்ட்டர்கள் பெரும்பாலும் மூடிய நிலையில் தான் இருக்கிறது. எப்போதாவதுதான் 2-வது கவுண்ட்டர் திறக்கப்படுகிறது.

    இதனால் நெருக்கடியான நேரங்களில் மின்சார ரெயிலுக்கு டிக்கெட்டு எடுக்க வரும் பயணிகள், ஒரே கவுண்ட்டரில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. வால் போல் நீண்டு நிற்கும் பயணிகளின் வரிசை சில சமயங்களில் டிக்கெட் கவுண்ட்டர் வளாகத்தை விட்டு வெளியே சென்று விடுகிறது.

    நீண்ட நேரம் நின்று, டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்தும் கூட சில சமயங்களில், பயணிகளுக்கு சில்லரை இல்லை எனக்கூறி டிக்கெட் வழங்காமல் திருப்பி அனுப்பி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கால்கடுக்க நிற்கும் பயணிகள் நொந்து விடுகின்றனர். குறிப்பாக டிக்கெட் வழங்கும் நபர்கள், சில்லரைக்காக முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொள்வது பயணிகளிடையே ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது

    என்னதான் கூறினாலும், பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இது தவிர பண்டிகை காலங்களில் அலைமோதும் கூட்டத்துக்கு, கவுண்ட்டர்களில் நிற்க இடம் ஏது? ஆனால் ரெயில்வே நிர்வாகமோ, கவுண்ட்டர்கள் இருந்தும் அதற்கான வேலையாட்களை நியமிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே காலை மற்றும் மாலையில் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க வரும் பயணிகளின் நீண்ட வரிசையை குறைக்க, கூடுதல் கவுண்ட்டர்களை திறந்தால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் சில்லரை தட்டுப்பாட்டை சுமூகமாக கையாளவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பெரும்பாலான மின்சார ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • பிளாட்பாரத்துக்குள் நுழைந்தால் டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்யக்கூடாது என்ற இரண்டு மட்டும் எல்லோருக்கும் தெரியும்.
    • ரெயிலில் செல்வதற்கும், ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கும் பல விதிமுறைகள் இருக்கலாம்.

    சென்னை:

    சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் ரெயில் நிலையங்களில் கடைப்பிடிக்கும் விதிமுறைகள் தெரிவது கிடையாது.

    பிளாட்பாரத்துக்குள் நுழைந்தால் டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்யக்கூடாது என்ற இரண்டு மட்டும் எல்லோருக்கும் தெரியும்.

    சில நேரங்களில் அறியாத தவறுகளை தெரியாமல் செய்து பயணிகள் திண்டாடுவது உண்டு. அந்த வகையில் நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிப்பதற்காக ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் டிக்கெட் எடுத்துள்ளார்கள்.

    மாலையில் புறப்படும் ரெயிலுக்கு முன் கூட்டியே வந்து விட்டதால் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் பிளாட்பாரம் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்ததும் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்து ஓய்வு எடுத்து உள்ளார்கள்.

    அங்கு வந்த 2 பெண் டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களிடம் டிக்கெட்டை கேட்டு இருக்கிறார்கள். ராமேஸ்வரம் ரெயிலுக்கு எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை அவர்கள் காட்டியதும், இந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு இந்த பிளாட்பாரத்துக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால் அந்த பயணிகளுக்கு இந்த விவரம் தெரியாது. எங்களுக்கு இதெல்லாம் தெரியாது மேடம் என்று அவர்கள் கூறிய பிறகும் டிக்கெட் பரிசோதகர்கள் கேட்டபாடில்லை. அபராதம் கட்டியே தீர வேண்டும் என்றதும், பெண் பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தெரியாமல் செய்த தவறுக்கு ஏன் அபராதம் கட்ட வேண்டும். குறைந்தபட்சம் மன்னித்தாவது விடலாமே என்று கேட்டும், கெஞ்சியும் அந்த டிக்கெட் பரிசோதகர்கள் கொஞ்சம்கூட காதில் வாங்கவில்லை. இதனால் சுமார் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது.

    அங்கு வந்த பயணிகளும் தெரியாமல்தானே வந்திருக்கிறார்கள். மன்னித்து விட்டால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனாலும் அவர்கள் விடவில்லை. கடைசியில் ரூ.1040 அபராதம் கட்டி விட்டு சென்றார்கள். வழிச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை அபராதம் செலுத்திவிட்டு விழி பிதுங்கியபடி அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள்.

    ரெயிலில் செல்வதற்கும், ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கும் பல விதிமுறைகள் இருக்கலாம். அவற்றை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எல்லா ரெயில் நிலையங்களிலும் நுழைவு வாயிலிலேயே பெரிய அளவில் விளம்பரப்படுத்தலாம்.

    வெறுமனே டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு கைச்செலவுக்கு 100 அல்லது 200 ரூபாயை வைத்துக்கொண்டு ஊர்களுக்கு செல்லும் எத்தனையோ பயணிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இப்படி நெருக்கடிக்குள் ஆளாக்கினால் அவர்கள் கதி என்னவாகும்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும் இதற்கு ரெயில்வே நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும்.

    • கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
    • முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.

    சென்னை:

    சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    இங்கு பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது.

    கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதே போல முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. ரெயிலை தவற விடும் நிலை உருவாகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

    ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும். அவசர பயணமாக செல்லும் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து அதிகஅளவில் பயணம் செய்வார்கள்.

    தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மைய கவுண்டர்கள் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.

    டிக்கெட் வாங்க வரிசையில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் கவுண்டர்களில் விரைவில் ஊழியர்களை கூடுதலாக உடனடியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகள் எளிதில் பெற முடியும்.

    தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ரெயில் டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×