search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கி"

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் உத்தர பிரசேதம் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
    • 2-வது பாதி ஆட்டத்தில் தமிழக அணி 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. அரியானா (ஏ பிரிவு), தமிழ்நாடு (பி), கர்நாடகா (சி), பஞ்சாப் (டி), மணிப்பூர் (இ), ஜார்க்கண்ட் (எப்), உத்தரப்பிரதேசம் (ஜி), ஒடிஷா (எச்) ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், அசாம், தத்ரா நகர் கவேலி, பீகார், மராட்டியம், உத்தரகாண்ட் , பெங்கால், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், ஆந்திரா, கோவா, புதுச்சேரி, ராஜஸ்தான், கேரளா, டெல்லி, தெலுங்கானா, அருணாசலப் பிரதேசம் ஆகிய அணிகள் வெளியேறின.

    9-வது நாளான இன்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடந்த காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகா- ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

    இதில் கர்நாடகா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கர்நாடகா அணிக்காக ஹாரிஸ் முதாகர் 2 கோலும் (46 மற்றும் 49-வது நிமிடம்) கேப்டன் ஷேசே கவுடா (23-வது நிமிடம்), லிகித்பிம் (32-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

    ஜார்க்கண்ட் அணியில் தில்பர் பர்லா 39-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    அடுத்து நடைபெற்ற கால் இறுதியில் தமிழ்நாடு- உத்தர பிரதேசம் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. 27-வது நிமிடத்தில் மனிஷ் சகானியும், 30-வது நிமிடத்தில் சுனில் யாதவும் அந்த அணிக்காக கோல் அடித்தனர்.

    2-வது பாதியில் தமிழக வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 33-வது நிமிடத்தில் சுந்தரபாண்டி முதல் கோலை அடித்தார். 52-வது நிமிடத்தில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி 2-வது கோலை அடித்து சமன் செய்தார். இதனால் 2-2 என்ற நிலை ஏற்பட்டது.

    59-வது நிமிடத்தில் தமிழகம் 3-வது கோலை அடித்தது. கேப்டன் வெஸ்லி இந்த கோலை அடித்தார்.

    ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தமிழக அணி அரை இறுதியில் அரியானா அல்லது ஒடிசாவை சந்திக்கிறது.

    • 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர்.
    • 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    அரவேணு,

    சி.ஐ.எஸ்சி. மண்டல அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பிருந்தாவன் பள்ளி அபார வெற்றி பெற்றது.

    குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி கிடைத்து உள்ளது.

    மேலும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிருந்தாவன் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். 

    • தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    ராமநாதபுரம்

    ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி ராமநாதபுரம் வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு அரங்கில் 19-ந் தேதி தொடங்கி நாளை (26-ந் தேதி) வரை நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுகுறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்திய ஆக்கி அணியில் விளையாட திறமையான வீரர்களை கண்டறிய முதல் முதல்முறையாக இந்திய அளவில் 4 மண்டலங்களாக பிரித்து 18 வயதிற்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.

    ராமநாதபுரத்தில் தென்னிந்திய மண்டல அளவிலான போட்டி ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நடக்கிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்து கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நாளை (26-ந் தேதி) நடக்கிறது.தேர்வாளர் குழுவினர் 30 சிறந்த வீரர்களை அடையாளம் காணுவார்கள்.

    இவர்களுக்கு 4 மண்டல அணிகள், 2 அகாடமி அணிகள் மண்டலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். இதில்,ஆக்கி இந்தியா தேர்வாளர்கள் 45 திறமையான வீரர்களை தேர்வு செய்து,பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
    • 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது.

    15-வது உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். மற்ற 4 அணிகள் 2-வது சுற்று மூலம் முன்னேறும்.

    ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது.

    இந்திய அணி 3-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் வேல்சை நாளை (19-ந் தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி கால் இறுதியில் நுழைய வேல்சை கண்டிப்பாக அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி ஸ்பெயினிடம் தோற்க வேண்டும். ஸ்பெயின்- இங்கிலாந்து மோதும் ஆட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    இந்த பிரிவில் இங்கிலாந்து, இந்தியா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னேறி இருக்கிறது. ஸ்பெயின் ஒரு வெற்றியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. வேல்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    'சி' பிரிவில் இருந்து நெதர்லாந்து அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    • மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ராஜூ நினைவு அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி 3 நாட்கள் நடக்கிறது. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி, திண்டுக்கல் அணி, வாடிப்பட்டி உள்பட 11 அணிகள் மோதுகின்றன.

    தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், கவுன்சிலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் ராஜா வரவேற்றார். எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளை சாமி, சரவணன், சந்திர மோகன், ராமசாமி, காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2:0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது.

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

    விருதுநகர்

    இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதியை இந்திய தேசிய விளையாட்டு நாளாக கடைபிடிக்கிறது.

    அதனப்படையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-வயதிற்குட்பட்ட மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகர் காமராஜர் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும், 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கி போட்டியில், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆக்கி விளையாடியபடி சிவகாசி உழவர் சந்தை முதல் சாட்சியாபுரம் வரை சென்று நோபல் உலக சாதனை பெற்ற வி.எஸ்.கே.டி. பதின்ம மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 வயதான ஜியாஸ்ரீ கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஆக்கி போட்டி சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி-சுவாமி விவேகானந்தா பள்ளி அணிகள் மோதின.

    இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதல்வர் புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோரை பாராட்டினர்.

    இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் வரும் 1-ந்தேதி தொடங்குகிறது. #Hockey
    இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு குழு சார்பில் இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 6-ந்தேதி வரை இந்தப்போட்டிகள் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஐ.சி.எப், 2-வது இடத்தை பிடித்த தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, ஐ.ஒ.பி., வருமானவரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை நகர போலீஸ், இந்தியன் விளையாட்டு ஆணையம் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.

    ‘லீக்’ மற்றும் ‘நாக்அவுட்’ முறையில் இந்தப்போட்டி நடக்கிறது.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு இந்தியன் வங்கி கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இதுதவிர சிறந்த வீரர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்படும்.

    இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு கமிட்டி தலைவர் எம்.நாகராஜன், செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    ×