search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுக்குறிப்புகள்"

    • சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
    • சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

     மஞ்சள் சாமந்திப்பூ:

    சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

     சீமை சாமந்திப்பூ:

    சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

     பப்பாளி:

    பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

     கற்றாழை:

    சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

     வாழைப்பழம் மற்றும் தேன்:

    வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

     பார்லி:

    பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

     சந்தனம்:

    சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

     மூலிகைத் தேநீர்:

    சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

    • பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
    • சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது.

    காலாவதி சன்ஸ்கிரீன்:

    சரும அழகை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. அப்படி இருக்க சிலர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

    கோடை காலத்தில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வெயிலின் உக்கிரம் குறையத்தொடங்கியதும் அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு பயன்படுத்துவதற்காக பாதுகாத்து வைப்பார்கள். அப்படி சேமித்து வைக்கும்போது காலாவதி தேதியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதனை கவனிக்காமல் காலாவதியான சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்தினால் சரும ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும்.

     பற்பசை:

    சிலர் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கரும்புள்ளிகளை போக்குவதற்கு பல் துலக்க பயன்படும் பற்பசையை பயன்படுத்துவார்கள். அதனை சருமத்தில் உபயோகிப்பது சிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையை உண்டாக்கும். மெலனின் உற்பத்தி அதிகமாகி சருமத்தில் நிறமாற்றமோ அல்லது கரும்புள்ளிகளோ உருவாகலாம். சரும எரிச்சல் பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். முகப்பருக்கள் மீது பற்பசை பூசினால் விரைவில் பருக்கள் மறைந்துவிடும் என்று சிலர் பரிந்துரைப்பதிலும் உண்மை இல்லை.

     எலுமிச்சை:

    எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் உள்ளடங்கி இருக்கும் சிட்ரிக் அமிலத்தின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் கலந்திருந்தால் அது சிலருடைய சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தை சேதப்படுத்திவிடக்கூடும். சரும எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எலுமிச்சை சாறை நேரடியாக சருமத்தில் தடவுவதும் நல்லதல்ல.

     தேங்காய் எண்ணெய்:

    தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளையில் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது கூடாது. உடலின் மற்ற பாகங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லாரிக் அமிலம் நிறைவுற்ற கொழுப்பாகும். அது சரும துளைகளை அடைத்து விடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கவே கூடாது. சரும துளைகளை அடைப்பதோடு முகப்பரு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும்.

     ஷாம்பு:

    கூந்தலுக்கு மட்டுமே ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அது கூந்தலில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசு பிசுப்பு போன்றவற்றை போக்க உதவும். அதற்காக ஷாம்புவை கொண்டு முகத்தை சுத்தம் செய்வது கூடாது. ஏனெனில் ஷாம்பு கூந்தலை சுத்தம் செய்வதற்காகவே தயாரிக்கப்படுபவை. அவை மென்மைத் தன்மையுடைய சரும செல்களை கையாள்வதற்கு ஏற்றவையல்ல. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடைந்துவிடும்.

    • பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
    • வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.

    அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு நிரந்தரமானவை அல்ல என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. எனவே எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிப்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே. எனவே, அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்

    கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

    செய்முறை

    முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

    அதன்பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை கட்டிவிட வேண்டும். பின்னர் இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விட வேண்டும்.

    முக்கிய குறிப்புகள்:

    * எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.

    * உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்தக் கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.

    * கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

    • சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க மாய்ஸ்சுரைசர்கள் உதவும்.
    • பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும்.

    மழை மற்றும் பனிக்காலங்களில் சரும வறட்சி பிரச்சினையை பலரும் சந்திப்பார்கள். இந்த நேரங்களில் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு மாய்ஸ்சுரைசர்கள் உதவும். இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக மாய்ஸ்சுரைசர்கள் தயாரித்து பயன்படுத்த முடியும். இவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும். அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

    ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்

    ஆலிவ் எண்ணெய்யில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும். சருமத்தில் இருக்கும் மெல்லிய சுருக்கங்களையும் அகற்றும். ஆலிவ் எண்ணெய்யுடன் சம அளவு எடுத்து தேன் கலந்து நன்றாக குழைக்கவும். இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    யோகர்ட் மற்றும் சர்க்கரை

    சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்துக்கு புத்துணர்வு அளிக்கும் தன்மை யோகர்ட்டில் உள்ளது. இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் பூசி, வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்திற்கு பொலிவையும், மென்மையையும் அளிக்கும்.

    கற்றாழை

    கற்றாழையின் மேல் தோலை சீவி, அதன் உள்ளே இருக்கும் சதைப்பற்றான ஜெல்லை எடுக்க வேண்டும். அதை பலமுறை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்திய பின்னர் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அந்த ஜெல்லை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தில் உண்டாகும் காயங்களை குணப்படுத்தும் தன்மையும் கற்றாழைக்கு உண்டு.

    தேங்காய் எண்ணெய்

    தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை சிறு கிண்ணத்தில் ஊற்றி மிதமாக சூடுபடுத்த வேண்டும். அதை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு உடலில் வறைட்சி அடைந்து இருக்கும் இடங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, வறட்சி நீக்கி பொலிவை அதிகரிக்கும்.

    பப்பாளி மற்றும் தேன்

    பப்பாளியில் இருக்கும் மூலக்கூறுகள் வெயிலால் சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்கும். பழுத்த பப்பாளி பழத்தின் மேல் தோலை நீக்கி சதைப்பற்றான பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பசைபோல கலந்துகொள்ளுங்கள். இதனை சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    பால் மற்றும் பாலாடை:

    பாலாடையுடன் சிறிதளவு பால் சேர்த்து பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். பால், சருமத்தின் மிருதுவான தன்மையை பாதுகாக்கும். சருமத்துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும்.

    ×