search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "windmill"

    • பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
    • 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 26 சக்கரங்கள் கொண்ட 13 கனரக லாரிகள் வந்தன. இந்த லாரிகளால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில்,

    தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மூலனூர், கன்னி வாடி மற்றும் குடிமங்கலம் ,கோவிந்தாபுரம், சத்திரம், குண்டடம், மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலான காற்றாடிகள் அமைக்கப்பட்டு வந்தது.

    இப்பொழுது ஒரு காற்றாடி ரூ.8 கோடி முதல் 12 கோடி வரை பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது . ஆலைகளில் அமைக்கப்படும் காற்றாடி இறக்கைகள் மற்றும் உபகரணங்கள் 200 அடி நீளமுள்ள லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.

    தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில் , பொன்னிவாடி செல்லும் சாலையானது 7 மீட்டர் கொண்ட சாலை ஆகும் .இதில் 6 மீட்டர் அகலமுள்ள லாரிகள் வருகின்றன. அதுவும் இந்த லாரிகளானது ஒவ்வொரு லாரியாக வராமல் தொடர்ச்சியாக 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவில் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மூலனூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
    • காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

    பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மணியாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் காற்றாலையில் சூப்பர்வைசராக இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து ரமேஷ் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே மேட்டுப்பிராஞ்சேரி-வெண்கலப்பொட்டல் சாலையில் தனியார் காற்றாலை செயல்பட்டு வருகிறது. இந்த காற்றாலையில் சூப்பர்வைசராக கயத்தாறு அருகே மணியாச்சியை சேர்ந்த ரமேஷ்(வயது 28) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 25-ந்தேதி காற்றாலையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 33 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த கார்த்தி(33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் உயர்மின் வழித்தடங்கள் மற்றும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பவர் கிரிட் நிறுவனத்தால் உயர்மின் கோபுரங்கள் அமைக்க உள்ளன.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தின் மதிப்பும் குறைகிறது. இதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள எட்டியாம்பட்டியில் அமைக்கப்பட உள்ள உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே அப்பகுதி விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்கபட உள்ள இடத்தின் அருகே கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நேற்று இரவு முழுவதும் 20-க்கும் மேலான விவசாயிகள் கூடாரத்திலேயே விடிய, விடிய தங்கியிருந்தனர்.

    போராட்டம் விடிய, விடிய நடந்ததால், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. 2-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து விவசாயிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, விவசாயிகள் கூறியதாவது-

    எங்கள் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரத்தை அமைக்க கூடாது. அப்படி அமைத்தால் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பென்னாகரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ஊதியூர் அருகே காற்றாலை ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 கோடி மதிப்பிலான எந்திரம் எரிந்து சேதம் அடைந்தது.
    காங்கேயம்:

    காங்கேயத்தை அடுத்த ஊதியூர் பகுதியில் நொச்சிபாளையம், ராசிபாளையம், கண்ணான்கோவில், சிறுகிணறு, ஒரம்பபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊதியூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான காற்றாலையின் மேல் பகுதியில் உள்ள எந்திரத்தில் நேற்று திடீரென்று புகை வந்தது.

    சிறிது நேரத்தில் அந்த காற்றாலையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. 70 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றாலை எந்திரத்தில் தீ பிடித்து எரிந்ததை பார்த்த அந்தபகுதியினர் உடனடியாக இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனால் காற்றாலை எந்திரத்தில் தீ பிடித்த பகுதி அதிக உயரத்தில் இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் காற்றாலையில் இருந்த எந்திரம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.

    அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் காற்றாலை எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் குடியிருப்புகள் அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விபத்து நேர்ந்தால் எந்திரத்தில் இருந்து கொதிக்கும் ஆயில் சிதறி அந்த பகுதியில் உள்ள மக்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே காற்றாலை பாதுகாப்பு அம்சங்களை நன்கு உறுதி செய்த பின்னர் காற்றாலைகளை நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

    ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி விடும். அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.

    இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினர்.நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 16 ஆயிரம் யூனிட் என்ற அளவில் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    ×