search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer protest"

    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் உயர்மின் வழித்தடங்கள் மற்றும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பவர் கிரிட் நிறுவனத்தால் உயர்மின் கோபுரங்கள் அமைக்க உள்ளன.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தின் மதிப்பும் குறைகிறது. இதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள எட்டியாம்பட்டியில் அமைக்கப்பட உள்ள உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே அப்பகுதி விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்கபட உள்ள இடத்தின் அருகே கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நேற்று இரவு முழுவதும் 20-க்கும் மேலான விவசாயிகள் கூடாரத்திலேயே விடிய, விடிய தங்கியிருந்தனர்.

    போராட்டம் விடிய, விடிய நடந்ததால், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. 2-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து விவசாயிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, விவசாயிகள் கூறியதாவது-

    எங்கள் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரத்தை அமைக்க கூடாது. அப்படி அமைத்தால் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பென்னாகரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    நிலுவைத்தொகை வழங்க கோரி தஞ்சை கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015-16 -ம் ஆண்டுக்கான மாநில அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ. 450 வீதம் 2 ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.

    இந்த நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதையடுத்து நிலுவைத்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தீபாவளி பண்டிகை புறக்கணித்து கருப்பு தீபாவளியாக அனுசரிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி கரும்பு விவசாயிகள் தஞ்சை குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் கரும்புடன் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை இன்னும் 15 நாட்களில் வழங்காவிட்டால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவோம் என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவையாறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஏரியில் தண்ணீர் விடாததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்கள் ஏரி நீர் பாசனத்தை நம்பி உள்ளன. இப்பகுதியில் உள்ள புதுக்குடி ஏரி, கறக்குடிப்பட்டி ஏரி உள்பட 150 ஏரிகள் கடந்த 7 ஆண்டுகளாக நிரம்பாததால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலங்கள் வறண்டு போய் உள்ளன.

    இந்தநிலையில் மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் கடலில்போய் வீணாக கலக்கிறது. டெல்டா பாசனத்திற்கு கல்லணை திறக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் இன்னும் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள புதிய மேட்டு கட்டளை கால்வாய், உய்யக்கொண்டான் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதற்கு காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம் இன்று நடத்தபோவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    இதற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி இன்று செங்கிப்பட்டி அருகே உள்ள புதிய மேட்டுக்கட்டளை கால்வாயில் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செலயாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார், தமிழக விவசாயிகள் தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பூதலூர் வட்டார சங்க தலைவர் அறிவழகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நந்தகுமார், த.மா.கா. வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×