search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய மேட்டுக்கட்டளை கால்வாயில் விவசாயிகள் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.
    X
    புதிய மேட்டுக்கட்டளை கால்வாயில் விவசாயிகள் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

    பூதலூர் அருகே ஏரியில் தண்ணீர் விடாததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஏரியில் தண்ணீர் விடாததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்கள் ஏரி நீர் பாசனத்தை நம்பி உள்ளன. இப்பகுதியில் உள்ள புதுக்குடி ஏரி, கறக்குடிப்பட்டி ஏரி உள்பட 150 ஏரிகள் கடந்த 7 ஆண்டுகளாக நிரம்பாததால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலங்கள் வறண்டு போய் உள்ளன.

    இந்தநிலையில் மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் கடலில்போய் வீணாக கலக்கிறது. டெல்டா பாசனத்திற்கு கல்லணை திறக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் இன்னும் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள புதிய மேட்டு கட்டளை கால்வாய், உய்யக்கொண்டான் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதற்கு காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம் இன்று நடத்தபோவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

    இதற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி இன்று செங்கிப்பட்டி அருகே உள்ள புதிய மேட்டுக்கட்டளை கால்வாயில் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செலயாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார், தமிழக விவசாயிகள் தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பூதலூர் வட்டார சங்க தலைவர் அறிவழகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நந்தகுமார், த.மா.கா. வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×