search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UIDAI"

    • ஆதார் 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண்ணாகும்
    • மூடி'ஸ் நிறுவனம் ஆதாரமில்லாமல் கூறுவதாக இந்தியா தெரிவித்துள்ளது

    இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு தனிமனிதர்களின் கைவிரல் ரேகை மற்றும் முக அடையாளமும் இன்ன பிற விவரங்களும் சேகரிக்கப்படுவதால், ஒவ்வொரு குடிமகனின் அடையாள விவரங்களும் வேறு ஒருவருடன் ஒத்து போகாது.

    இத்தகவல்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் கட்டமைப்பான தனித்துவ அடையாள ஆணையத்தால் பாதுகாக்கப்படும். இந்த அடையாள எண் 12 இலக்கங்கள் கொண்டது.

    இந்நிலையில் உலகின் முக்கிய நிதி மற்றும் கடன் தரக்குறியீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடி'ஸ் (Moody's) நிறுவனம், ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் மிகுந்த வானிலை சூழல் மிகுந்த ஊர்களில் நம்பத்தகுந்த வகையில் பயனாளிகளின் கைரேகை சரிபார்ப்பு முறை வேலை செய்யாது என தெரிவித்திருந்தது. மேலும், கூலி வேலை செய்பவர்களுக்கு பல சேவைகள் மறுக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. அனைவரது அங்க அடையாளங்கள், விரல் ரேகை, புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் ஒரே மென்பொருள் தொகுப்பில் இருப்பதால் பயனர்களின் தரவு விவரங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரித்திருந்தது.

    ஆனால், இதனை இந்திய அரசாங்கமும் ஆதார் தனித்துவ அடையாள ஆணையமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

    இது குறித்து இந்திய அரசு தெரிவித்திருப்பதாவது:

    சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஆதார் திட்டத்தை பாராட்டி வருகின்றன. பல நாடுகள் இதே முறையை தங்கள் நாட்டில் பின்பற்ற இந்தியாவின் உதவியையும், ஆலோசனையையும் நாடி வருகின்றன. தங்களின் கருத்துக்களுக்கு அவர்களின் அறிக்கையில் எந்தவிதமான அடிப்படை ஆதாரமோ அல்லது வேறு விவரங்களோ ஆதாரமாக மூடி'ஸ் நிறுவனம் வழங்கவில்லை. ஆதாருக்கான வலைதளத்தை மட்டுமே மேற்கோளாக அந்த அறிக்கையில் காட்டியுள்ளது.

    மேலும், பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க அவசியம் ஏற்படும் இடங்களில் பயனாளிகள் தொடுதல் முறை மூலமாக மட்டுமே சேவைகளை பெற வேண்டும் என்பதில்லை. கண் கருவிழி அல்லது முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது ஓடிபி எனப்படும் கடவுச்சொல் மூலமாகவோ சேவைகளை பெறலாம்.

    இந்திய பாராளுமன்றத்திலேயே இது குறித்த விவரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டது. கூலி தொழிலாளிகள் மற்றும் மானிய உதவிகள் பெறுபவர்கள் ஆதார் எண்ணை தர வேண்டிய அவசியமில்லாமல் தங்களுக்கு உரிய பணத்தையோ பிற சேவைகளையோ பெற்று கொள்ள முடியும்.

    இவ்வாறு இந்திய அரசாங்கம் பதிலளித்துள்ளது.

    • ஆதாரில் ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சிறந்த சேவைகள் பெற உதவுகிறது.
    • தற்போதைய அடையாளச் சான்று, முகவரிச் சான்றுடன் புதுப்பிப்பது நன்மை அளிக்கும்.

    ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பர் 9ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் விதிமுறைகள் 2022-ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு அதை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

    மை ஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனிலும் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்றும் தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம்.

    மத்திய அரசின் நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    வங்கிகள், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பலவேறு நிதி வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அங்கீகரித்து, அனைத்து வகையான சேவைகளை வழங்க ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

    ஆதார் அட்டையை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவும்.

    எனவே பொது மக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களை இணைக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண்ணை யு.ஐ.டி.ஏ.ஐ. கட்டாயமாக்கியுள்ளது.
    • ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் ஆதார் அட்டைக்கு பதிவுசெய்து அந்த எண்ணைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) அளித்த புள்ளிவிபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளைப் பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் யு.ஐ.டி.ஏ.ஐ. சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் சலுகைகளைப் பெற கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். அப்படி ஆதார் அட்டை வழங்கப்படாத பட்சத்தில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து அந்த எண்ணைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.

    அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என யு.ஐ.டி.ஏ.ஐ. அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

    நிரந்தர ஆதார் வரும்வரை, அந்த நபருக்கு ஆதார் பதிவு அடையாள எண் ஒதுக்கப்படும். அந்த ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம் என யு.ஐ.டி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.

    50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #Aadhar #AadhaarJudgment
    புதுடெல்லி:

    மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன.

    ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.

    இந்த நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை (ஆதார்), சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. எனவே, ஆதார் மூலம் கேஒய்சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.



    தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் மொபைல் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் இதுதொடர்பாக தொலைத்தொடர்புதுறை உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் (UIDAI) கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. அதில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளன. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது என கூறி உள்ளது.

    ஆதார் eKYC மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட வேண்டும் என்று அதன் ஆதார் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் எங்கும் சுட்டி காட்டவில்லை என்று கூட்டு அறிக்கை தெளிவுபடுத்துகிறது. #Aadhar #AadhaarJudgment

    ஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. #UIDAI #Telecom #Aadhaar
    புதுடெல்லி:

    டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் 12 இலக்கம் கொண்ட ஆதார் அட்டை தகவல்களை பெறவேண்டியது கட்டாயமில்லை என்று கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் டெலிபோன் நிறுவனங்கள் பெற்ற தகவல்களை நீக்குவது குறித்த நடவடிக்கையை ஆதார் ஆணையம் தொடங்கி உள்ளது.



    இதுபற்றி ஆதார் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘டெலிபோன் சேவை வழங்கும் அத்தனை நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே, வாடிக்கையாளர்களை அறிவோம் திட்டத்திற்காக பெற்ற ஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துவது குறித்த திட்டங்களை வருகிற 15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

    இதுபற்றி ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி அஜய் பூஷண் கூறுகையில், “டெலிபோன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் தகவல்களை சுமூகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காகத்தான் இது தொடர்பான திட்டத்தை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இதில் எங்கள் தரப்பில் இருந்து ஏதாவது தேவை என்றால் டெலிபோன் நிறுவனங்கள் அளித்த திட்டங்களுக்கு பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும்” என்றார்.  #UIDAI #Telecom #Aadhaar
    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என பள்ளிகளுக்கு ‘ஆதார்’ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Aadhaar #UIDAI
    புதுடெல்லி:

    அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ‘ஆதார்’ அடையாள அட்டை ஆணையம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக, சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆதார் எண் இல்லாததற்காக, எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அப்படி சேர்க்க மறுப்பது செல்லாது. சட்டப்படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, வேறு அடையாள அட்டைகள் மூலம் அம்மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பள்ளியிலேயே ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Aadhaar #UIDAI
    இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் தானாக ஆதார் சேவை மைய உதவி எண் தானாக சேமிக்கப்பட்டதற்கு கூகுள் பொறுப்பேற்றுக் கொண்டது. #UIDAIMystery #Google


    இந்தியா முழுக்க மொபைல் போன் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் ஆதார் சேவை மையத்திற்கான (UIDAI) இலவச அழைப்பு எண் தானாக சேமிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். மர்ம முறையில் ஆதார் சேவை உதவி எண் சேமிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஆதார் சேவை மையம் உடனடியாக பதில் அளித்திருந்தது. 

    அதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் கான்டாக்ட்-இல் தானாக சேமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ‘18003001947’ பழைய எண், இந்த இலவச எண் செயலற்று கிடக்கிறது என தெரிவித்தது. மத்திய அரசின் ஆதார் மையம் இவ்வாறு செய்யவில்லை எனில், பயனற்ற நம்பரை யார் பதிவு செய்தார்கள் என்ற குழப்பத்திற்கு கூகுள் பதில் அளித்துள்ளது.

    இதுகுறித்து கூகுள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக கோடிங் செயய்ப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் அன்று முதல் தளத்தில் இருந்ததோடு, புதிய சாதனங்களிலும் அப்டேட் ஆகியிருக்கிறது.

    சில ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் தங்களது போன்புக்-இல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் ஆன்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறும் போது சின்க் செய்யப்பட்டு இருக்கலாம். இது ஆன்ட்ராய்டு சாதனங்களில் முறையற்ற பயன்பாடு கிடையாது என கூகுள் உறுதியாக தெரிவித்துள்ளது. 

    எனினும், இந்த பிழையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. #UIDAIMystery #Google
    ஆதார் எண் மூலம் டிராய் தலைவரின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளிவந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, அவரது தகவல்கள் ஆதாரின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது. #Aadhaar #UIDAI
    புதுடெல்லி:

    மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் எனும் தனிநபர் அடையாள அட்டை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாகவும், பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

    அதே சமயம் ஆதார் தகவல்களை திருட முடியாது எனவும், பலகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆதார் முகமை தனது சார்பில் விளக்கத்தை அளித்து வருகிறது.

    இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். எனது ஆதார் எண்ணை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.



    இவரது இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்பவர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

    அத்துடன், “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் ட்வீட்டும் செய்திருந்தார். இதனால் ஆதாரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை மீண்டும் வெடிக்க துவங்கியது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, டிராய் தலைவர் ஷர்மாவின் தகவல்கள் ஆதார் எண் மூலம் திருடப்படவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், அவர் பல ஆண்டுகளாக அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என குறிப்பிட்ட ஆதார் முகமை, ஒரு அரசு ஊழியரின் அடிப்படை தகவல்களை கூகுள் போன்ற சாதாரண இணையங்களில் இருந்தே பெற முடியும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளில் ஆதார் முகமை விளக்கம் அளித்துள்ளது என்றாலும், ஆதாரின் பாதுகாப்பு குறித்த சர்ச்சையும், சந்தேகமும் முற்றுபெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. #Aadhaar #UIDAI
    ஆதார் அட்டையில் முக அடையாளங்கள் இணைக்கப்படும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக போதிய கால அவகாசம் இல்லாததால் அடுத்த மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் ஆதார் அட்டை செயல்பாடு தற்போது நடைமுறையில் உள்ளது. ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவை அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    வயது முதிர்வு, கடின உழைப்பு, கைரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை எடுக்கும் போதும், பிறபயன்பாட்டின் போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அடையாளம் எடுக்கப்படும். மற்றபடி சாதாரண நடை முறையே தொடரும்.

    இந்த செயல்திட்டம் ஜூலை 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செயல்திட்டத்தை தயார் செய்வதற்கான கால அவகாசம் போதவில்லை என்பதால், ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

    முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது தனி நபர்களுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு அடையாளம் உறுதிப்படுத்துவதற்கு கூடுதலாக ஒரு வழிமுறையே வழங்குகிறது. அதே வேளையில் முகப்பதிவு அடையாள வழிமுறையை கருவிழிப்படலம், கைரேகை அல்லது ஒரு முறை கடவுஎண் (ஓ.டி.பி),ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்தே மேற்கொள்ள முடியும். 

    இந்த புதிய சேவை பயோமெட்ரிக் சாதனத்தை வழங்கும் நிறுவனங்களுடன் தனித்துவ அடையாள ஆணையம் இணைந்து செயல்பட்டுள்ளது. இது வரை 119 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் சரா சரியாக 4 கோடி ஆதார் அடையாளமாக சரிபார்ப்புகள் நடைபெறுகின்றன.

    அரசு உதவித்தொகை, மானியவிலை சமையல் கியாஸ், விவசாய கடன்கள், ஓய்வூதிய திட்டங்கள் என அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது.
    ×