search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic voting machine"

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் மோடியின் பலத்துக்கு நிகராக யாரும் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வாக்களித்தவர்கள் அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். அதை எண்ணி பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது காங்கிரசுக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகங்கை தொகுதியில் இருந்து பலர் புகார் கடிதங்களை டெல்லி தலைமைக்கு அனுப்பினார்கள். இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

    மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கார்த்தி சிதம்பரம், எம்.பி. மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருப்பதால் தமிழக காங்கிரசால் நடவடிக்கை எடுக்க இயலாது.

    எனவே அவர் மீது வந்த புகார்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    கார்த்தி சிதம்பரம் விரைவில் விளக்கம் அளித்து கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை டெல்லி மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    அரியலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ணுவது பற்றி தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt

    புதுடெல்லி,:

    தேர்தலின்போது ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சை நிலவியபடி உள்ளது.

    மின்னணு எந்திரத்தில் உள்ள எந்த பட்டணை அழுத்தினாலும் அது குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டாக மாறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மின்னணு எந்திரத்தில் பா.ஜனதாவினர் தில்லு முல்லு செய்ததால்தான் வெற்றி பெற முடிந்தது என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, “ஒவ்வொரு ஓட்டுப்பதிவு எந்திரத்துடனும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் அது இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

    இதை ஏற்று தேர்தல் ஆணையம் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் ஒப்புகை சீட்டு தரும் எந்திரத்தை இணைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது.

    அதில் ஒவ்வொரு தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்களில் இருந்தும் ஏதாவது ஒரு ஓட்டுச்சாவடியின் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் எடுத்து ஆய்வு செய்யப்படும் என்று கூறியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தெலுங்கு தேசகட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 கட்சிகள் மனுதாக்கல் செய்தன.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

    அவர்கள் தங்கள் மனுவில் மின்னணு எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளில் 50 சதவீதத்தை எண்ண வேண்டும். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 50 சதவீத ஒப்புகை சீட்டு எண்ணப்பட்டால்தான் சரியாக இருக்கும்.

    தேர்தல் கமி‌ஷன் வழி காட்டுதல் படி செயல்பட்டால் அது ஒப்புகை சீட்டு திட்டத்துக்கு எதிராகத் தான் இருக்கும். எனவே ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத ஒப்புகைச் சீட்டை எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட பெஞ்சில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டுக்கு உதவ தேர்தல் அதிகாரி ஒருவரை நியமனம் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt

    மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு, மாயாவதி கூறியுள்ளனர். #Mayawati
    புதுடெல்லி:

    ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யமுடியும்’ என்று அமெரிக்காவை சேர்ந்த மின்னணு தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா குற்றம் சாட்டினார்.

    இதனால் தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றது என்றும் கூறி இருக்கிறார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து பா.ஜனதா வெற்றிபெற்றதாக லண்டனில் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    உடனடியாக பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாறவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் விரைவில் ஒன்றுகூடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரம் தொடர்பாகவும் கலந்து ஆலோசிப்போம்.

    நாங்கள் நவீன தொழில் நுட்பத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இப்போது 120 நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படவில்லை. 20 நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வாக்கு எந்திரங்களை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

    இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

    பகுஜன் சமாஜ் வாடி கட்சி தலைவர் மாயாவதி கூறியிருப்பதாவது:-

    வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள், அதன் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்கி உள்ளது. எனவே எதிர்காலத்தில் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்துவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்.



    வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களால் பா.ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவின் சதியை இந்த தகவல் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் விதமாக பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. எனவே, தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    லண்டனில் வாக்குப்பதிவு குறித்து மின்னணு தொழில் நுட்ப நிபுணர் சையது சுஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபலும் கலந்து கொண்டார். எனவே வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய குற்றச்சாட்டு காங்கிரஸ் சதி என்று பா.ஜனதா விமர்சனம் செய்தது. இதற்கு பதில் அளித்து கபில்சிபல் கூறிய தாவது:-

    லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது நானும் பங்கேற்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான அஷிஷ்ரேயின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே இதில் கலந்து கொண்டேன்.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நமது நாட்டின் ஜனநாயகம் நிலைக்க இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    யாராவது குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவை உண்மையா, அல்லது பொய்யா என்பது குறித்து முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும், சட்டங்களும் கூறுகின்றன. இப்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது உண்மை என்றால் மிக தீவிரமான வி‌ஷயம். இந்த விவகாரத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பொறுப்பற்றவை. சிறுபிள்ளை தனமானவை. இதுபோன்ற கருத்துக்கள் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    இவ்வாறு கபில்சிபல் கூறினார். #Mayawati #ChandrababuNaidu
    ×