என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலான் மஸ்க்"

    • ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர்.
    • சாம்சங், மெட்டாவில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI இல் இந்திய ரோபாட்டிக்ஸ் நிபுணர் தேவேந்திர சிங் சாப்லோட் இணைந்துள்ளார். xAI என்பது சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உடைய ஏஐ பிரிவாகும். 

    எலான் மஸ்க்குடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சூப்பர் இன்டலிஜென்ஸ்-ஐ உருவாக்கும் இலக்கோடு xAI குழுவில் இணைந்திருப்பதாக தேவேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு மஸ்க் பதிலளித்து வரவேற்றுள்ளார்.

    யார் இந்த தேவேந்திர சிங் சாப்லோட்?

    தேவேந்திர சிங் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி பாம்பேவில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்தவர். பின்னர், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் மெஷின் லேர்னிங் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

    தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸில் தனது பணியைத் தொடங்கினார். அதன்பின், மெட்டா நிறுவனத்தில் AI ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.

    பிரான்ஸின் முன்னணி AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Mistral AI இல் மல்டிமோடல் ஆராய்ச்சி குழுவிற்குத் தலைமை தாங்கினார். 'மிஸ்ட்ரல் 7பி' போன்ற சக்திவாய்ந்த AI மாடல்களை உருவாக்குவ முக்கியப் பங்காற்றினார்.

    தற்போது xAI நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளர் (Technical Staff Member) ஆகப் பொறுப்பேற்றுள்ளார்.

    தேவேந்திர சிங் தனது ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிக்காக 2020-ம் ஆண்டு பேஸ்புக் பெல்லோஷிப் உள்ளிட்ட பல சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளார். 

    • பங்குச்சந்தையில் Short Selling முறையில் பில் கேட்ஸ் பந்தயம் கட்டி இருந்தார்
    • இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

    இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    அமெரிக்க நீதித்துறை உத்தரவுப்படி இந்த லட்சக்கணக்கான கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன.

    அண்மையில் வெளியான கோப்புகளில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷிய பெண்களுடன் பாலியல் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி, அதற்கு ரகசியமாக மருந்து எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, சமீபத்தில் தனது தொண்டு நிறுவனமான கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்கள் மத்தியில் பேசிய பில் கேட்ஸ், தான் ரஷிய பெண்கள் இருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார்.

    மேலும் எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்   தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்நிலையில் இந்த செய்தியை பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் "டெஸ்லா பங்குகளை வீழ்த்த நினைப்பவர்கள் நல்ல மனது உள்ளவர்கள் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவன தலைவர் மஸ்க் "கர்மா உண்மையானது" என்று பதிவிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் என சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) தொகையை Short Selling முறையில் பில் கேட்ஸ் முன்பொருமுறை பந்தயம் கட்டியிருந்தார்.

    இதுவே மஸ்க், தற்போது 'கர்மா உண்மையானது' என பதிலளிக்க காரணமாகும்.  கடந்த எட்டு ஆண்டுகளாக பில் கேட்ஸ் இந்த ஷார்ட் பொசிஷனை தொடர்ந்து வைத்திருப்பதாக மஸ்க் முன்பு கூறியிருந்தார்.

    ஒருவேளை டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால், இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி என்று மஸ்க் எச்சரித்திருந்தார்.

    தற்போது உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க் இருக்க, முதல் 10 இடங்களில் கூட பில் கேட்ஸ் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    Short Selling என்பது பங்குச்சந்தையில் பங்குகள் விலை குறையும் போது லாபம் ஈட்டும் ஒரு உத்தியாகும். இதில், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை வருங்காலத்தில் குறையும் என்று கணித்து கடன் வாங்கி அந்த பங்குகளை வாங்குவார்கள்.

    அதை அதிக விலைக்கு விற்பார்கள். கணித்தபடி, அந்த பங்குகளின் விலை குறையும்போது அவற்றை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தி லாபம் பார்ப்பார்கள். 

    • நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது.
    • நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை இலக்காக கொண்டிருந்தார். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையிலான ஸ்டார்ஷிப் ரக விண்கலன்களை தவிர்த்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு பால்கன், ராப்டர் உள்ளிட்ட ராக்கெட்களை தயாரித்து கொடுத்து வருகிறது.

    இந்தாண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலன் ஒன்றை அனுப்பி இதற்கான முயற்சியில் இறங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அந்த திட்டத்தை தற்போது தள்ளிப்போடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "நிலவைவிட செவ்வாய் நமக்கு தூரமாக உள்ளது. எனவே நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம். இந்தாண்டு இறுதிக்குள் அங்கு விண்கலன் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்கி மக்களை குடியேற செய்வோம்" என்றார். இந்தாண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • எக்ஸ்ஏஐ (xAI) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினார்.
    • இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடையும்.

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI செயலிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்ற நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு தொடங்கினார்.

    இந்நிலையில், எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX, அவரது AI நிறுவனமான xAI நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    SpaceX மற்றும் xAI ஆகிய இரு நிறுவனங்களும் இணையும் போது 1.25 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே அதிக மதிப்பு மிக்க தனியார் நிறுவனம் என்ற பெயரை SpaceX பெறுகிறது. இதன்மூலம் X வலைதளம், Grok Al, Grokpedia என அனைத்தும் SpaceX நிறுவனத்தின்கீழ் செல்கிறது.

    • 72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது.
    • எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.

    எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன Grok மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது. சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ளது.

    மேலும், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன. 

    • 2025-ல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
    • இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் குறைவு.

    உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனம் விற்பனை நிறுவனம் என்ற பெயரை கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக டெஸ்லாவின் விற்பனை வெகுவாக குறைந்த நிலையில், இந்த பெயரை சீன நிறுவனத்திடம் இழந்துள்ளது.

    2025-ல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் குறைவு.

     சீனாவின் BYD நிறுவனம் 2025-ல் 2.26 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

    விற்பனை குறைவு, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், பங்குச் சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு ஏறக்குறைய 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • இம்மாதத்தின் 2-வது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது.
    • ஒரே வாரத்தில் சொத்தின் மதிப்பு 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்து எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

    உலக பணக்காரர்களில் முதலிடத்தில் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ.54.46 லட்சம்) எட்டியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்தார்.

    இந்த நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில் எலான் மஸ்க்குக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.67 லட்சம் கோடி) உயர்ந்தது.

    கடந்த அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது.

    இதற்கிடையே, 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டு சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இம்மாதத்தின் 2-வது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது. தற்போது ஒரே வாரத்தில் சொத்தின் மதிப்பு 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்து எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

    • எலான் மஸ்கின் சொத்துமதிப்பு அண்மையில் கிடுகிடுவென உயர தொடங்கியது.
    • 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.

    உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

    டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் அண்மையில் கோரிக்கை வைத்தார். இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து எலான் மஸ்கின் சொத்துமதிப்பு கிடுகிடுவென உயர தொடங்கியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.

    தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 648 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    • 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறியது எக்ஸ்.
    • முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்தது.

    27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த விதிமீறலால் ஐரோப்பிய எக்ஸ் பயனர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் எக்ஸ் தங்களின் விளம்பர தரவுத்தளத்திற்கான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிவிட்டது என்றும் ஐரோப்பியஒன்றியம் குற்றம்சாட்டி இருந்தது.

    இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், அப்போதுதான் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் 797 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.      

    • ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
    • தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அப்போதிருந்தே உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்து உள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் இருப்பதாகவும், ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    • அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன.
    • எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது

    உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

    உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து 'X' தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே மஸ்க் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

    ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையே போரையோ அல்லது போரின் அச்சுறுத்தலையோ தடுக்கின்றன. போர் அச்சுறுத்தல் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன, எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளராகவும் உள்ள எலான் மஸ்க் இதற்கு பதிலளிக்கையில், "போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம். என் கணிப்புப்படி 2030-க்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

    எனினும், தனது இந்தக் கருத்து குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டோ அல்லது விரிவாகவோ எதுவும் கூறவில்லை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் பெற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

    • திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம்.
    • என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான்

    Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது மனைவி, குடும்பம் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

    அந்த பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர். இதுகுறித்த முழு தகவல் தெரியவில்லை.

    அதேபோல நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கர் சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு 'சேகர்' என சூட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார். 

    ×