என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

உச்சநீதிமன்ற செயல்பாடுகளில் மனிதர்களுக்கு பதில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தலைமை நீதிபதி முடிவு!
- மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் முறை உள்ளது.
- குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற வட்டாரத்தின்படி, வழக்கு ஒதுக்கீடு (Case Allocation) மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் இருந்து மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' (Master of the Roster) முறையின்படி, எந்த வழக்கை எந்த நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.
அண்மையில் உத்தரப் பிரதேச குண்டர் சட்டத்திற்கு எதிராக இர்பான் சோலங்கி என்பவர் தாக்கல் செய்த மனுவை சூர்யா காந்த் அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, இதேபோன்ற ஒரு மனு ஏற்கனவே 2022-ல் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.
தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, மீண்டும் ஒரு புதிய அமர்வின் முன் எப்படி பட்டியலிடப்பட்டது குறித்து நடந்த உள் விசாரணையில் உச்ச நீதிமன்றப் பதிவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
எனவே இனி வழக்குகள் மற்றும் அமர்வுகளை ஒதுக்கீடு செய்யும் பணியை இனி AI மென்பொருள் கவனிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், சீரான முறையில் வழக்குகளைப் பட்டியலிடும் என்று நம்பப்படுகிறது.






