என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    • திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-27 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி மாலை 6.18 மணி வரை பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : திருவாதிரை மாலை 6.39 மணி வரை பிறகு புனர்பூசம்.

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புறப்பாடு கண்டருளல். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.

    திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. நத்தம் வரகுணவல்லித்தாயார் சமேத ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-புகழ்

    கடகம்-ஊக்கம்

    சிம்மம்-விருத்தி

    கன்னி-ஆதரவு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-ஆசை

    தனுசு- நன்மை

    மகரம்-நற்சிந்தனை

    கும்பம்-வரவு

    மீனம்-ஆக்கம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கியப் புள்ளிகளை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். உறவினர் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது.

    கன்னி

    வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    துலாம்

    இடம் சம்பந்தமான பிரச்சனைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.

    விருச்சிகம்

    திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும் நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு குறையும்.

    தனுசு

    யோகமான நாள். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    மகரம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-26 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி இரவு 8.14 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 7.51 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், புன்னைநல்லூர் உள்பட அம்மன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று தேய்பிறை சஷ்டி விரதம். பாபநாசம் சிவபெருமான் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்கார கருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை, ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-ஊக்கம்

    கடகம்-நற்சொல்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-பாராட்டு

    துலாம்- வாழ்வு

    விருச்சிகம்-நலம்

    தனுசு- சாதனை

    மகரம்-தனம்

    கும்பம்-பயணம்

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும்.

    ரிஷபம்

    துணிச்சலோடு செயல்படும் நாள். செய்தொழில் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம்பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    நம்பிக்கைக்கு உரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

    கடகம்

    வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    சிம்மம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். தொழில் தொடர்பாக தொலை தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.

    கன்னி

    தேவைகள் பூர்த்தியாகித் திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    விருச்சிகம்

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.

    தனுசு

    விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் திருப்தி தரும் தகவல் வரலாம்.

    மகரம்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.

    கும்பம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    மீனம்

    முன்னேற்றம் கூடும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். வரவு உண்டு.

    • மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
    • வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் கடைபிடிக்கும் விரதம் தான் சஷ்டி விரதம். பெரும்பாலான முருக பக்தர்கள் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் சஷ்டியிலும் மனதார விரதமிருந்து முருகனுடைய அருளைப் பெறுவார்கள்.

    சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் இருப்பார்கள் என சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. உடல்நல பாதிப்பு, தொழில் பாதிப்பு, திருமணத் தடை என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமிருந்து மனமுருகி அந்த வேலவனை நினைத்தாலே எல்லாவற்றையும் அவன் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    மாதம்தோறும் வரும் சஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.

    * மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.

    * நாளை தேய்பிறை சஷ்டி விரதம். அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    * வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    * கந்த சஸ்டி கவசம், முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள், கந்தபுராணத்தை கேட்பது அல்லது முருகனைப் போற்றும் பாடல்களைப்பாடி, விளக்கேற்றி மனமுருகி வழிபட  வேண்டும்.

    * விரதம் இருக்க முடிந்தவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

    * சஷ்டி விரதம் இருக்கும் போது அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் மனநிறைவைத் தரும்.

    * சஷ்டி நாட்களில் முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு, அன்னதானம் அல்லது தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யலாம்.



    குறிப்பாக முருகப்பெருமானின் அருள் வேண்டி நிற்கும் அனைத்து பக்தர்களும் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.

    இப்படி மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் அமைதியும், வளமும் நிலைத்து நிற்கும். 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை விரிவுசெய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ரிஷபம்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    கடகம்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    சிம்மம்

    யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.

    கன்னி

    வரவைவிட செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும்.

    துலாம்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது.

    விருச்சிகம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம்.

    மகரம்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். தொழில் ரீதியாக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    கும்பம்

    மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள் திடீரென சாதகமாகி விடும். கல்யாண முயற்சி கைகூடும்.

    மீனம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். பணவரவு திருப்தி தரும். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம்.

    • 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.

    பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-24 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.38 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம் : கிருத்திகை இரவு 10.57 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி

    இன்று சங்கடஹர சதுர்த்தி. கார்த்திகை விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்க மயில் வாகன புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசமேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் கோவில்களில் ஹோம அபிஷேகம்.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-அமைதி

    சிம்மம்-முயற்சி

    கன்னி-மேன்மை

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- அனுகூலம்

    மகரம்-விவேகம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-ஆதரவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    ரிஷபம்

    செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி முடிவெடுப்பீர்கள்.

    மிதுனம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

    கடகம்

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    சிம்மம்

    வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும். ஆன்மிகப் பயணம் உண்டு.

    கன்னி

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    துலாம்

    அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும். பிறரை விமர்சிப்பதால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

    விருச்சிகம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல்நலம் சீராகும். தடைபட்ட காரியம் இன்று தானாக நடைபெறும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    தனுசு

    காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும் ஏற்படும் நாள். கோபத்தில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள்.

    மகரம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கும்பம்

    முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.

    மீனம்

    பகை நட்பாகும் நாள். மறதியால் விட்டுப்போன காரிய மொன்றைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    • சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா
    • சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது.

    நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது.

    இவரது அருளால் தங்களின் பல கஷ்டங்கள் தீர்க்கப்பட்டு மகிழ்வோடு இருக்கும் பக்தர்கள் கோடான கோடி பேர். அப்படி மக்களுக்காக மக்களுடன் வாழ்ந்து முக்தியடைந்த பாபா தன் பக்தன் ஒருவனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சம்பவத்தைப் பற்றி இங்கு காண்போம். ஒரு சமயம் "சீரடி" தலத்தில் இருக்கும் "சாய் பாபாவை" தரிசிப்பதற்கு, அவருக்கு முன்னேமே நன்கு பரிட்சயமான ஒரு பக்தை வந்தார்.

    சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா, அவரிடம் இன்று மதியம் அவர் வீட்டிற்கு ஒரு "எருமைமாடு" விருந்தாளியாக வரப்போவதாகவும், ஆதலால் அது உண்ண "போளிகளை" தயாரிக்குமாறு கூறினார். அதை ஏற்ற அந்த பக்தையும் சாய் பாபா கூறியவாறே, போளிகளை தயார் செய்து வைத்து அந்த எருமைமாட்டிற்காக காத்திருந்தார்.

    சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அதைக்கண்டதும் அந்த பக்தை, சாய் பாபா கூறியவாறே அனைத்து போளிகளையும் அந்த எருமைக்கு உண்ணக் கொடுத்தார். அதையெல்லாம் உண்டு முடித்ததும் அந்த எருமை அங்கிருந்து, சற்று தூரம் நடந்து சென்று கீழே விழுந்து இறந்தது.

    இதைக் கண்டதும் அந்த பக்தை திடுக்கிட்டு, நேரே சாய் பாபாவிடம் சென்று இவ்விஷயத்தை கூறினார். அதைக் கேட்ட சாய் பாபா, "இறந்த அந்த எருமைமாடு அதன் முற்பிறவியில் தனது பக்தனாக இருந்ததாகவும், அப்பிறவியில் அந்த பக்தன் இறக்கும் தருவாயில் அவனுக்கு மிகவும் பிடித்த "போளிகளை" உண்ணமுடியாத ஏக்கத்தோடு இறந்து போனதாகவும், இப்போது எருமைமாடாக பிறவியெடுத்திருக்கும் தன் பக்தனின் ஆசையை தான் நிறைவேற்றியதால், அந்த ஆசை நிறைவேறிய மனதிருப்தியோடு அந்த எருமை இறந்து விட்டதாக" கூறினார். இதைக் கேட்ட அந்த பக்தை "எல்லோரின் இம்மையையும், மறுமையையும் அறிந்தவரான" சாய் பாபாவின் கருணையை எண்ணி அவரை உள்ளன்போடு வணங்கினார்.

    • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

    விநாயகப் பெருமானின் அருளை முழுமையாக பெறுவதற்காக மேற்கொள்ளும் விரதம் தான் சங்கடஹர சதுர்த்தி. நாம் எப்போதும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சங்கடஹர சதுர்த்தியைத் தான் மஹா சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுவோம். ஆனால் மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை அப்படியே விட்டுவிடுவோம்.

    மஹாசங்கடஹர சதுர்த்தியைப் போலவே மாதம்தோறும் வரும் சதுர்த்தியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்து விநாயகரின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

    குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அந்த வகையில், நாளை வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்...

    * சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்.

    * வீடு வாசல் துடைத்து மாக்கோளமிட்டு பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.

    * விநாயகரின் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து விளக்கேற்றி அவரது முகம் பார்த்து மனமுறுகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

    * பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். அதனால் காலை எழுந்தவுடன் விநாயகரின் முகம் பார்த்து தரிசித்து       மாலையில் சந்திரனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    * வேண்டுதலின் போது விநாயகருக்கு அருகம்புல் படைக்கலாம். விரதம் இருக்க முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம்.

    * விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம், முதலானவற்றை சாப்பிடலாம். இப்படியும் விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத பண்டம் முதலான எளிமையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

    * விரதத்தை முடிக்க மாலைப்பொழுதில் விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் சார்த்தி விநாயகருக்கு பிடித்த சுண்டல், கொழுக்கட்டை அல்லது மோதகம் முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம் .



    * பூஜையின் நிறைவில் உங்களால் முடிந்த பிரசாதத்தை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கலாம்.

    * மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் விலகும்.

    * நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

    மேலும் சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், திருமணத் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.
    • கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. ஜோதி வடிவில் அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்து ஆட்சி செய்கிறார் என்கிறார்கள்.

    தல வரலாறு

    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, திருநறையூரில் கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார் பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் குதிரையில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள். ஒருமுறை, சமயபுரம் கோவிலுக்கு பங்குனி பெருவிழாவின்போது வணிகம் செய்ய வந்தனர். இரவில் அங்கேயே தங்கி, உறங்கினர்.

    அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றியசமயபுரம் மாரியம்மன், இளம்பெண் வடிவம் எடுத்து கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அணிவிக்க கூறினார். அந்த பெரியவரும் அப்பெண்ணின் பொன்னிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். ஆனால் அணியும்போது வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தது. இதனால் வியாபாரி குழப்பமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.

    தெய்வீக அம்சமாக தோற்றமளித்த அப்பெண்ணின் கைகளை வளையல்களால் அலங்கரிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர், ''தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விட்டன. உன் அழகிய கைகளை வளையல்களால் அலங்கரிக்க என்னிடம் இப்போது வளையல்கள் இல்லை. என் ஊருக்கு வந்தால் உன் இரு கைகளுக்கும் விதவிதமான வளையல்கள் அணிவித்து அலங்கரிப்பேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுவேன்'' என்று அன்புடன் வேண்டினார்.

    இதைக்கேட்டு இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். உடனே, வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அவரின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இதனால் அந்த பெரியவர் மிகவும் மனம் வருந்தினார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர் கோவிலை நோக்கிக் கைகூப்பி வணங்கி நின்றார்.

    விடிந்ததும் கோவில் அர்ச்சகர் அந்த வியாபாரியிடம், ''ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? உடைந்த வளையல்களுக்கு பதிலாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள். சமயபுரத்தாள் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்'' என்றார். மேலும், அம்மை நோய் தாக்கியவர்களுக்கு மாரியம்மனின் அருட்பிரசாதமான திருநீற்றை வழங்கினார். அவர்கள் அதை நெற்றி மற்றும் உடல் முழுவதும் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்து எழுந்தார்கள்.

    கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகள், தங்கள் அனைவருக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், ''தாயே, ஆகாச மாரி.. ஆகாச மாரி..'' என போற்றி புகழ்ந்து வணங்கினர். பின்பு, ''எங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும்'' என்று ஆகாச மாரியம்மனை மனமுருக வேண்டினார்கள்.

    இதைக் கேட்ட சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், ''உங்கள் ஊர் எது?'' என்று கேட்க, ''நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநறையூர்'' என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ''முல்லைக்கும், மல்லிக்கும், கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநறையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன்'' என்று அருளினாள். சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநறையூர் தலம் வந்து தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்குடத்துடன் ஆகாச மாரியம்மன்

     

    வைகாசி திருவிழா

    இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்ரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும், அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம் பழமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவிழாவில் தர்ப்பை புல்லால் அம்மன் உருவாக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறாள். கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

    பதிமூன்றாம் நாள் அம்மன் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவை தவிர மற்ற நாட்களில் அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார்.

    கோவில் தோற்றம்

     

    திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு மல்லிகைப் பூ, வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும், காவடிகள், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகிறார்கள்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவிலில் (திருநறையூர்) அமைந்துள்ளது, ஆகாச மாரியம்மன் கோவில்.

    ×