என் மலர்
வழிபாடு
- ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா.
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 2-இரண்டாவது நாளான நேற்று காலை ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். நேற்று மாலை திடீரென 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்து அவதி அடைந்தனர். நேற்று இரவு ஏழுமலையான் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடன கலைஞர்கள் சாமி ஊர்வலத்தில் முன்பாக கண்ணைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.
திருப்பதியில் நேற்று 75 552 பேர் தரிசனம் செய்தனர் 35 885 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரிய கெங்கையம்மன் கோவில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
- ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு.
இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.
அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களில் வரும் திதியை வளர்பிறை சதுர்த்தி. இந்நாளில் வீட்டில் பூஜை செய்து அருகில் உள்ள விநாயகர் சந்நதிக்கு சென்று விநாயகரை மனமுருகி வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த உடன் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர விநாயகப் பெருமானின் அருள் ஆசி கிட்டும்..
- திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார்.
- புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதமானது புதன் பகவானுக்குரியதாகும். புதன் கிரகத்திற்கு, அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால் புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். திருப்பதி சந்திரனுக்குரிய ஸ்தலமாகும். சந்திரனின் மகனாகிய புதனின் அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால், புரட்டாசியில் அவரை வழிபடுவது நல்லது. புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சனியின் கெடுபலன்கள் நீங்குவதோடு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் 3 தலைமுறை முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்பது ஐதீகமாகும்.
புரட்டாசி சனிக்கிழமையில் 108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை கொண்டு விளக்கேற்றி துளசி சாற்றி வணங்குவது நல்லது. பின்னர், பெருமாளுக்கு பிடித்த அவல், வெண்ணெய், பால் பாயாசம், பலகாரம் போன்றவற்றை படையல் செய்து வழிபட மகாவிஷ்ணுவின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதால் பெருமாளின் அருளோடு, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-19 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை (முழுவதும்)
நட்சத்திரம்: சுவாதி இரவு 9.06 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ மகேஸ்வரி அலங்காரத்தில் காட்சியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கும் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-அமைதி
மிதுனம்-போட்டி
கடகம்-ஆதரவு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-நட்பு
துலாம்- பொறுப்பு
விருச்சிகம்-அமைதி
தனுசு- பெருமை
மகரம்-புகழ்
கும்பம்-ஆக்கம்
மீனம்-பக்தி
- நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.
- சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவை ஆகும்.
நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது. அம்பிகையை கொண்டாடும் நாட்களில் நவராத்திரி என்பது மிகவும் விசேஷமானது. ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகை துர்க்கை அம்சமாக இருப்பதாக ஐதீகம்.
அதற்கடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி அம்சமாக அருள்பாலிப்பதாக ஐதீகம். அதற்கடுத்த மூன்று நாட்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியாக இருந்து அனைவருக்கும் ஞானம் அருள்வதாக ஐதீகம். அந்த வகையில் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கலை மற்றும் கல்வி ஆகியவற்றின் அதிபதியாக உள்ள சரஸ்வதி தேவி வெள்ளை தாமரையில் அமர்ந்து ஜடா மகுடம் சூடி, அதில் பிறை சந்திரனை அணிந்த பிரம்மாவின் மனைவியாக வழிபடப்படுகிறார்.
அவருடைய வாகனம் வெண்மை நிறம் உள்ள அன்னப்பறவை ஆகும். வட இந்தியாவில் சில மாநிலங்களில் சரஸ்வதி தேவி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் தருவது போன்ற கோவில்களும் உள்ளன.
பண்டைய நூல்கள் சரஸ்வதி தேவியை அறிவின் கடவுளாக, ஞானத்தின் கடவுளாக புகழ்கின்றன. படைப்புக் கடவுளான பிரம்மாவின் நாவில் சரஸ்வதி இருந்து படைப்புக்கு உறுதுணை செய்வதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் சமூக நலனுக்காக செய்யப்படும் வேள்விகளை நல்லவிதமாக நடத்துவதற்கு சரஸ்வதியின் அருள் கடாட்சம் வேண்டும் என்றும் ஆன்மீக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்த மதத்தில் சரஸ்வதி தேவியை சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்து வழிபடும் முறை இருந்திருக்கிறது.
பண்டைய காலங்களில் அரசர்களும், புலவர்களும் அறிவார்ந்த விவாதங்கள் செய்யும் போது அவர்கள் உட்கார்ந்து உள்ள ஆசனங்களில் சரஸ்வதி கொடி இணைக்கப்பட்டு இருக்கும். அதை சாரதா த்வஜம் என்று குறிப்பிடுவார்கள். அந்த கொடியில் சரஸ்வதியின் திருவுருவம் அழகாக பொறிக்கப்பட்டிருக்கும்.
நவராத்திரி நாட்களில் ஒன்பதாவது நாளான நவமி திதியில் சரஸ்வதி தேவியை முறைப்படி வழிபடும் பொழுது ஒருவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்குவார் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன.
அந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்வதற்கு ஒரு மேடை அமைத்து அதில் வெள்ளை விரிப்பை சரியாக விரித்து அதில் கலசம் வைத்து தேங்காய் மற்றும் மாவிலையை அதில் பொருத்த வேண்டும்.

அதன் பிறகு சரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றை வைத்து அதற்கு வெண்மை நிற மலர்களை சூடி இனிப்பான நிவேத்யங்கள் செய்து தூப தீபம் காட்டி வழிபடலாம். இல்லாவிட்டால் வேத விற்பன்னர்களை அழைத்து வந்து மந்திரப்பூர்வ பூஜை முறைகளையும் செய்யலாம்.
பூஜையின் முக்கிய அம்சமாக சான்றோர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பிரசாதம் அல்லது அன்னதானம் என்பதாகும்.
வீடுகளில் அல்லது தொழில் நிறுவனங்களில் பூஜை செய்யப்படும் பொழுது அங்குள்ள ஊழியர்கள் மற்றும் இதர ஏழை மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கி அவர்கள் மனம் மகிழச் செய்வது சரஸ்வதியின் அனுகிரகத்தை பெற்று தரும் என்றும் சான்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-18 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 4.33 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: சித்திரை இரவு 6.48 மணி வரை. பிறகு சுவாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் ஸ்ரீஅம்பாள் ஹம்ச வாகனத்தில் பிராம்ஹி திருக்கோலமாய் காட்சியருளல். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநதர் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பெருமை
மிதுனம்-ஆக்கம்
கடகம்-நட்பு
சிம்மம்-உதவி
கன்னி-ஆதரவு
துலாம்- போட்டி
விருச்சிகம்-தெளிவு
தனுசு- போட்டி
மகரம்-ஆக்கம்
கும்பம்-அன்பு
மீனம்-பரிசு
- ஆந்திரா அரசு சார்பில் நாளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு வழங்க உள்ளார்.
- சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு நேற்று கருடன் சின்னம் பொரித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் ஒப்படைத்தனர்.
இந்த கயிறு கொடி போன்றவை ரங்கநாயக மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் வைக்கப்பட்டது.
பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை அங்குரார்ப்பணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை பார்வையிடும் வைபவம் நடைபெறுகிறது. நாளை மாலை 3 மணி முதல் 5 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது.
இதனை தொடர்ந்து இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அதனை தொடர்ந்து 9 நாட்கள் பல்வேறு வாகன உற்சவ சேவை நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவில் இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பதி மலையில் முக்கிய இடங்கள் மற்றும் மாடவீதிகளிலும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா அரசு சார்பில் நாளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு வழங்க உள்ளார்.
இதற்காக அவர் நாளை திருப்பதி வருகிறார். கோவிலில் பட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் அவர் சமர்ப்பிக்கிறார்.
இரவு திருமலையில் தங்கும் அவர் நாளை மறுநாள் காலை கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவம் தொடங்குவதால் திருப்பதியில் எங்கு பார்த்தாலும் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் தேவஸ்தான நிர்வாக அலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச் சாலைகளிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அலிப்பிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை நடைபாதை மாடவீதி கோவில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்காரத் தோரணங்கள் கட் அவுட்டுகள் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12-ந் தேதி வரை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் நவக்கிரக கோயில் உள்ளது.
- நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்கிற தலத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில். ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இந்த கோயிலில் வழிபட்டுள்ளதால் இக்கோயிலின் தொன்மையை குறிப்பிட்டுச் சொல்ல இயலாததாக இருக்கிறது.
ஆனால், குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் இந்த நவக்கிரக கோயில் உள்ளது என்றும், இத்தனை ஆண்டு காலத்திற்கு பக்தர்கள் இங்கு வந்து தங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர் என்றும் வரலாறு நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
புராண காலத்தில் இந்த ஊர் தேவிபுரம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலின் இறைவனான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். இந்த கோயிலின் புனித தீர்த்தமாக கடல் நீரே இருக்கிறது.

சீதாதேவி ராவணனால் கடத்திச் செல்லப்பட்டு, இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவரை மீட்க, ராமபிரான் தென் திசை வருகிறார். சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பும் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்வது வழக்கம்.
அதன்படி, ராமபிரான் உப்பூரில் உள்ள விநாயகரைப் பூஜித்தார். பிறகு, தேவிப்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து, மணலை ஒன்பது பிடி எடுத்துப் பிரதிஷ்டை செய்தார். அந்த சமயத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. உடனே ராமபிரான் தன் திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதியானது.
அந்த ஒன்பது கற்களாக "நவபாஷாணம்" என்ற பெயரில் நவகிரகங்களாக வழிபடப்படுகிறது. பிற ஸ்தலங்களில் நவகிரகங்கள் காட்சி தருகிறார்கள். பாஷாணம் என்றால் கல் என்று பொருள்படும். இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நவகிரகங்கள் உள்ள இத்தலத்தில் நீராடினால், மிகவும் புண்ணியம் சேரும்.
நமது பூர்வ ஜென்ம பாவங்கள் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும் நவதானியங்கள் வைத்து வழிபட்டால், சகல நற்பலன்களும் கிடைக்கும்.
ராமபிரானே பிரதிஷ்டை செய்த நவகிரகங்களாக இருப்பதால், மிகவும் சிறப்பான ஸ்தலம். இங்கு தான் ராமபிரானுக்குச் சனி தோசம் நீங்கியது. பக்தர்களே நேரடியாக நவகிரகங்களுக்கு அபிசேகம் செய்யலாம்.
இந்த தலத்தைத் தரிசித்தாலே பூர்வ ஜென்ம வினை, பாவங்கள் நீங்கும் நவகிரகங்களில் எந்த கிரகங்களால் தோசம் இருந்தாலும், அவை நீங்கி விடும்.
- நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
- பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள், தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.
- இன்று நவராத்திரி ஆரம்பம்.
- குலசை ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்துடன் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-17 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை பின்னிரவு 2.38 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: அஸ்தம் மாலை 4.19 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று நவராத்திரி ஆரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம். குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்துடன் காட்சி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் ஹம்ச வாகனத்தில் பிராம்ஹி திருக்கோலத்தில் வழிபாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-மாற்றம்
கடகம்-போட்டி
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- புகழ்
மகரம்-சாதனை
கும்பம்-பணிவு
மீனம்-வாழ்வு
- பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர்.
- பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு.
ஒருமுறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழிசெய்ய வேண்டும் என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்... இதுபற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.
பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு.

இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்த கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார்.
அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.
பிரம்மா இதை கண்டித்தார். பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு, சிவலோகம் சென்றார். சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார்.
பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.
அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமிதேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டுமென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார்.
உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் எட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்துவிட்டார்.
தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.
இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்பு கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார்.
அவரைத் தேடி பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.
இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர்.
இத்தனை சங்கதிகளையும் சூரிய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.
அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார்.
இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாரியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார்.
தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.
ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அங்கே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு ஏதுமறியாமல் விழித்தான்.
அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லா காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.

ஸ்ரீ வராகசுவாமி ஆலயம்:
இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார்.
அதற்கு நன்றி கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.

பத்மாவதி தாயார்:
இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான்.
பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது.
அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி என பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.
இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார்.
அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

கோவில் வரலாறு:
தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசு காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843-ல் இருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
கோவில் அமைப்பு:
திருப்பதி திருமலையின் மலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது திருமலை ஏழுமலைகளைக் கொண்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் வீற்றிருப்பது ஏழாவது மலையான வெங்கடாத்ரியின் உச்சியில், மற்ற மலைகளின் பெயர்கள், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, ஆகும். ஏழாவது மலை தான் வெங்கடாத்திரி. இந்த மலைகளின் மொத்த பரப்பளவு 10.33 சதுர மைல்கள்.
- பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உற்சவம் நடைபெறும்.
- ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு கோடான கோடி இன்பமும் பெருகும்.
புரட்டாசி திருவோணம், திருவேங்கடவனின் பிறந்த நாளாகத் தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது.
இந்த திருவோண தினத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில் விசேஷ அலங்காரங்களுடன் உற்சவமூர்த்தியான திருமலை அப்பன் அமர்ந்து திருவீதி வலம் வருகிறார்.

"திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரம்மன் தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோற்சவம் என்று அழைக்கப்பட்டது.
கி.பி.966-ம் ஆண்டுவரை ஒருமுறை பிரம்மன் திருவிழா நடைபெற்று வந்ததாகவும், அதன்பிறகு புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றுமாக இரண்டு தடவை நடத்தப்பட்டன என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
திருமலையின் மூன்றாம் சுற்றுச்சுவற்றில் உள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் வருடத்தில் பதினொரு பிரம்மோற்சவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. கொடியேற்றத்துடன் பிரம்ம உற்சவம் தொடங்கும்.
பிரம்மோற்சவத்தில் ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பமும் பெருகும்.
ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலையில் மோகினி அவதார உற்சவம் நடைபெறும். இரவு எம்பெருமான் கருடாழ்வார் மீது பவனி வந்து அருட்காட்சி தந்து அருளுகிறார்.
கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும். இக்குடைகள் சென்னையிலிருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கருடோற்சவ தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வர்.
காலை, மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷவாகனம், பெரிய சேஷவாகனம், தங்கத் திருச்சி, ஹம்சவாகனம், முத்துப்பந்தல், கல்ப விருஷம், சர்வ பூபால வாகனங்கள், பல்லக்கு கருட சேர்வை, ஹனுமந்த வாகனம், சூரிய, சந்திரப்பிரபை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம் இப்படி பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருகிறார்.

குடை, சாமரம், மங்கள வாத்தியம் முதலியவற்றுடன் வடமொழி மறையும், தென் மொழி மறையும் பாராயணம் செய்ய பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உற்சவம் நடைபெறும். இத்திருவிழா காண்போரை இன்பக்கடலில் மூழ்கச் செய்யும். மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார். இதற்கு முன்பாக வசந்த உற்சவம் நடைபெறும். வெள்ளை வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு குங்குமக் குழம்புடன் கூடிய சந்தனத்தை வாரி அள்ளி வழங்கிக் கொண்டு பவனி வருகிறார்.
தேர் திருவிழா அன்று பகவான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவிழாவின் கடைசி தினமான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும். பின் கொடியிறக்கம் (துவஜாவரோகணம்) நடைபெற்றுத் திருவிழா இனிதே நடைபெறுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பிரம்ம உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 5 - காலையில் சின்ன சேஷ வாகனம், இரவில் அன்ன வாகனத்தில் வீதி உலா
அக்டோபர் 6- காலையில் சிம்ம வாகனம், இரவில் முத்துப்பல்லக்கு சேவை
அக்டோபர் 7- காலையில் கல்பவிருஷ வாகனம், இரவில் சர்வ பூபால வாகனத்தில் உலா
அக்டோபர் 8- காலையில் மோகினி அவதாரம், இரவில் கருட சேவை நிகழ்ச்சி
அக்டோபர் 9- காலையில் அனுமன் வாகனம், இரவில் கஜ வாகனத்தில் எழுந்தருளல்
அக்டோபர் 10- காலையில் சூரிய பிரபை உற்சவம், இரவு சந்திர பிரபை உற்சவம்
அக்டோபர் 11- தேரோட்டம்
அக்டோபர் 12- பிரம்மோற்சவ விழா நிறைவு






