என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக பிரிந்தது. அதுமுதல் அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெற்கு சூடானின் உள்நாட்ட அரசியல் சூழ்நிலையை கையாளுதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷியா உதவும் என புதின் கூறினார். மேலும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.
    • விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருவதால் ரஷிய படையை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைனின் சில நகரங்களை ரஷியபடையினர் கைப்பற்றி உள்ளனர்.

    அவற்றை உக்ரைன் வீரர்கள் பேராடி மீட்டு வருகின்றனர். ரஷியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் கிரீமியா தலைநகர் செவஸ்டோ போல் துறைமுகத்தில் உள்ள கருங்கடல் ரஷியா கடற்படை தலைமையகத்தில் உக்ரைன் ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியது. கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.

    இந்த தாக்குதலில் கருங்கடல் கடற்படை தளபதியும், ரஷ்யாவின் மூத்த கடற்படை அதிகாரிகளுள் ஒருவரான விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. இதனால் இந்த ஏவுகணை தாக்குதலில் கடற்படை தளபதி இறந்தாரா? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

    தாக்குதல் நடத்தப்பட்ட கிரீமியா பகுதியை உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பு.
    • ரஷிய கொடுமைகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பு.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷியா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

    போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷியா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷிய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷியா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷியா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • உக்ரைன் போர், தேசப்பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது
    • மாணவர்கள் துப்பாக்கிகளை கையாளுவதற்கு நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்

    கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள்.

    உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

    மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

    இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரஷியா நடவடிக்கை
    • யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள நாட்டிற்கு இந்த தடை இல்லை

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    ரஷியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா தற்காலிக தடை விதித்துள்ளது.

    ரஷியா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷியாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது.

    • தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
    • அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி

    2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

    "இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.

    2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவுக்கு வடகொரியா முழு ஆதரவு தெரிவிப்பு
    • கடந்த சில நாட்களாக ரஷியாவின் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் கிம் ஜாங் உன்

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், இன்று விளாடிவோஸ்டோக்கில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.

    உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.

    புதின்- கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷியாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வடகொரியா ரஷியாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

    அடுத்ததாக ரஷியாவின் கப்பற்படைக்கு சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷியாவின் தொழில்நுட்பத்தை வடகொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் பொரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷியாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணயைாக ரஷியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காஸ்மோடிரோமில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து கிம் தெரிந்து கொண்டார்
    • அதிபர்கள் சந்திப்பிற்கு பிறகு தூதர்கள் சந்திப்பு நடந்தது

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.

    ரஷியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்றுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

    பரஸ்பர நல்லுறவிற்காக சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ரஷியாவின் தென் கிழக்கில் உள்ள ரஷியாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய அதிபரை வரவேற்ற புதின், அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய அதிபருக்கு சுற்றி காண்பித்தார். இதற்கு பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்றது.

    இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷிய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, "ரஷியா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்" என கிம் ஜாங் உன் அறிவித்தார்.

    • கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.

    ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பத்தில் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் கப்பல் கட்டும் தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் கட்டும் தளம் தீப்பிடித்து எரிந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் 24 பேர் காயம் அடைந்தனர். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த கப்பல் கட்டும் தளம் ரஷியாவுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு கருங்கடல் கடற்படையில் உள்ள கப்பல்களின் பழுதுகள் சரி செய்யப்படுகின்றன.

    • 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
    • 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்

    இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.

    இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.

    எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அடுத்து வரவுள்ள நோவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி முயற்சி செய்தார்.

    ஆனால் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால் நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள ஒரு வயலில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர். எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செர்ஜி ஸ்குராடோவ் அறிவித்தார்.

    • இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த திட்டம் இது.
    • இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும் என்றார்.

    மாஸ்கோ:

    சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்புக்கான ஒரு பெரிய வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இதனை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.

    இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான இந்த திட்ட தொடக்கம் என்பது, இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் ஆகும்.

    இந்நிலையில், ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசியதாவது:

    புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுடன் கடைசியாக அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படும் என நான் பார்க்கவில்லை.

    எங்களுடைய வடக்கு-தெற்கு திட்டத்துடன் கூடுதலாக, இந்த வழித்தடம் வழியே கூடுதல் சரக்கு போக்குவரத்து இயக்கம் நடைபெறும். இதில் எங்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என எதனையும் நான் பார்க்கவில்லை.

    இந்தத் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும். இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.இ.சி.) திட்டம் ரஷியாவின் தளவாட போக்குவரத்துக்கான வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் பல்வேறு ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்து வந்தது என தெரிவித்துள்ளார்.

    அரபிக்கடலில் ஈரான் வழியாக இந்தியாவின் மேற்கு துறைமுகங்களுடன் ரஷியாவை இணைக்கும் வகையிலான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் பற்றி அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

    ×