என் மலர்tooltip icon

    கனடா

    • இந்திரா காந்தியை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    • இதுதொடர்பாக கனடா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி. வலியுறுத்தினார்.

    ஒட்டாவா:

    கனடாவின் வான்கூவரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக, கனடா நாட்டின் பொது பாதுகாப்பு, ஜனநாயக அமைப்புகள் மற்றும் வெளிவிவகார மந்திரி டொமினிக் லெப்லாங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வாரம் வான்கூவரில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. கனடாவில் வன்முறையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.

    இந்திய வம்சாவளி எம்.பி.யான சந்திரா ஆர்யா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கனடா அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர்கள் கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    • 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது.
    • தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    டொராண்டோ:

    கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீ சுக்கு 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது.

    விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறியது. என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே விமானத்தை தரை இறக்குமாறு அறிவுறுத்தினர். விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பி விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

    அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனே தரை இறக்கியதால் பயணிகள் தப்பினர்.

    இந்த சம்பவத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானம் தரை இறக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.

    விமானம் புறப்பட்டதும் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    • இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
    • சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

    கனடாவை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு ப்ரூவரி சிண்ட்ரோம் நோய் இருப்பதை டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இது குடல் பூஞ்சை நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு அரிய வகை நோய் ஆகும். இது அவரது குடலில் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது. குடிபோதையில் இல்லை.

    இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார், மேலும் மது அருந்தாமல் இருந்தபோதிலும், இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மற்றும் அவரது சுவாசத்தில் ஆல்கஹால் அதிகரித்தது.

    அந்த பெண் குடிக்கவில்லை என்று கூறினாலும் டாக்டர்கள் அதை நம்ப மறுத்தனர்.

    இதை தொடர்ந்து அவருக்கு கடந்த 5 ஆண்டுகளில், அவருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) இருந்தன, இதற்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் நைட்ரோஃபுரான்டோயின், அத்துடன் இரைப்பை குடல் ரிஃப்ளக்ஸ் நோய், டெக்ஸ்லான்சோபிரசோல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.

    முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பாள்; இருப்பினும், சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

    அவர் இதுவரை ஏழு முறை அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றிருக்கிறார். இது மருத்துவர்களிடையே நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததை காரணம் என கூறுகின்றனர்.

    தற்போது அந்த பெண் பூஞ்சை காளான் மருந்துகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

    "நீரிழிவு நோய், கல்லீரல் நோய், குடல் டிஸ்மோட்டிலிட்டி கோளாறுகள் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற நோய்கள் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோமுடன் தொடர்புடையவை" என்று ஆய்வு காட்டுகிறது.

    • கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.

    ஒட்டாவா:

    கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது. அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2-வது இடத்தில் இருந்த ரஷியா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    • கனடா நாட்டின் மாகாணம் ஒன்று குடியேற்ற விதியைகளை திடீரென மாற்றியுள்ளது.
    • இதனால் ஏராளமான மாணவர்கள் இந்திய திரும்பும் என நிலை ஏற்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதன் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கனடாவில் உள்ள ஒரு மாகாணம் பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் (Prince Edward Island). இந்த மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது.

    இதன் காரணமாக இந்த மாகாணத்தில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இது தற்போதும், இதுவரையும் இல்லாத சூழ்நிலையாக உள்ளது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கூறும்போது "ஏராளமான இந்திய மாணவர்கள் கனடா சென்று படித்து வருகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தகுந்த வகையிலானது. ஆனால், ஏராளமான மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக எஙகளுக்கு தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலம் வரவில்லை. இங்கொன்று, அங்கொன்று என இருக்கலாம். கனடாவில் இருக்கும் மாணவர்கள் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதாக நாங்கள் பார்க்கவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

    இந்தியாவால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் குழுவின் செயல்பாடு கனடாவில் அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து கனடாவை வலியுறுத்தி வருகிறது. காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய விசாரணை அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.
    • நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    டொரண்டோ:

    கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18-ந் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களான கரண் பிரார், கமல்பிரீத் சிங், கரன்பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-

    கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இங்கு வலிமையான, சுதந்திரமான நீதித்துறை செயல்படுகிறது. அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.

    நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் கைது விவகாரத்தை தாண்டியும் விசாரணை நடக்கும். நிஜ்ஜார் கொலையை தொடர்ந்து கனடாவில் உள்ள சீக்கியர்கள் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்தனர். இருப்பினும், ஒவ்வொரு கனடா குடிமகனும் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கனடா நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருவதாக கனடா தெரிவித்தது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஹிட் ஸ்குவாட் (தாக்குதல் குழு) உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கரன் ப்ரார், கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங் ஆகிய இந்தியர்கள் என்றும், சில மாதங்களுக்கு முன்பு சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டதாகவும், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிட் டெபூல் கூறும்போது, நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது. கொலை வழக்கு மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் தனித்தனியான விசாரணைகள் நடந்து வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களின் ஈடுபாடு மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகளை விசாரிப்பதும் அடங்கும் என்றார்.

    கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது தலா ஒரு முதல் நிலை கொலை மற்றும் நிஜ்ஜாரின் கொலைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    • 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.

    இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .

    பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.

    வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    பிரபல பஞ்சாபி பாடகரான ஏ.பி. தில்லான் கோச்செல்லா மேடையில் கிடாரை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

    பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 'சம்மர் ஹை' ஹிட்மேக்கர் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக மேடையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும் காட்சி உள்ளது. அதில் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திய அவர் முடிவில் தனது கிடாரை மேடையிலேயே வீசி உடைப்பது போன்று காட்சி உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த விசயங்களை மதிக்கவும். இது உங்களுக்கு அழகல்ல என கூறியுள்ளார். மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



    • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

    இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கனடா பிரதமர் ஒரு குழு அமைத்தார்.
    • கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரியவந்தது.

    டொரன்டோ:

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு மோசமடைந்தது.

    கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) 2021-ம் ஆண்டின் தேர்தலின்போது காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்துள்ளது. தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.

    இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    இதற்கிடையே, தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு குழுவை அமைத்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது.

    மூத்த அதிகாரிகள் குழுவிடம் வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2021 தேர்தலின்போது இந்திய அரசு தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

    • மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார்.
    • பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

    5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.

    ×