என் மலர்tooltip icon

    உலகம்

    • போர் தீவிரமாக 13-வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது
    • ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு ஈரான் நிதியுதவி செய்கிறது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மிருகத்தனமாக கொன்று குவித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர்.

    உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

    மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், இப்போர் குறித்து இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினரான ஷாரன் ஹெஸ்கல் (Sharren Haskel) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் மிருகத்தனமாக கொன்றுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலிருந்து காசா பகுதியை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். நாம் நம்பும் மதிப்பு வாய்ந்த பண்புகளின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது. சுதந்திர உலகத்தின் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாத தீமைக்குக்கும் இடையே நடக்கும் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

    பயங்கரவாத எனும் பாம்பின் தலையாக ஈரான் செயல்படுகிறது. அந்த தலையான ஈரானை நாம் வெட்ட வேண்டும். ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இரு அமைப்புகளுக்கும் ஈரான் நிதியுதவி செய்து வருகிறது. அனைத்து இஸ்ரேலியர்களும் ஒற்றுமையாக உள்ளனர்.

    அனைத்து கட்சியினரும் அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறோம். பாலஸ்தீன பொதுமக்களும் ஹமாஸ் அமைப்பினரால் துன்பப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரை காத்து கொள்ள மனித கேடயமாக பொதுமக்களை பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பை முடித்து புறப்பட்டார்
    • இன்றும் என்றும் உங்களுடன் இருக்கிறோம் என்றார் சுனக்

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மிருகத்தனமாக கொன்று குவித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர்.

    உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

    மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். அவர் பயணம் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார்.

    இஸ்ரெலின் டெல் அவிவ் நகர் வந்திறங்கிய ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார். முன்னதாக இஸ்ரேல் அதிபரையும், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்தார்.

    இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் ரிஷி சுனக், தெரிவித்திருப்பதாவது::

    இன்றும் என்றும், நானும் இங்கிலாந்தும் உங்களுடன் இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு என்றும் நாங்கள் எதிராக இருக்கிறோம். தனது குழந்தைகள் தன் கண் முன்னாலேயே வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படுவது பயங்கரமான, தாங்க முடியாத துன்பம். தங்களின் உயிருக்கு உயிரானவர்களை பயங்கரவாதிகளிடம் பறி கொடுத்தவர்களை சந்தித்து பேசினேன். நாங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகளை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நான் அதிபர் ஐசக் ஹெர்சக்கை சந்தித்தேன். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின் போது இஸ்ரேலில் உள்ள இங்கிலாந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பிற்காக அவரிடம் நன்றி தெரிவித்தேன். காசாவில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசினேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேச்சல் பயங்கரவாதிகளை கண்டு சிறிதும் அஞ்சவில்லை
    • ரேச்சல் அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ, குக்கி பிஸ்கெட் வழங்கி உபசரித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர்.

    உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.


     



    ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர்.

    இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார். உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார்.

    காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர்.

    அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது:

    அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன். அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


     



    இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார்.

    தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார்.

    சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
    • கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார். இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவுவதை தடுப்பது, சில பயனர் நடைமுறைகளை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது, சில தரவுகளை பகிர்வது போன்ற விதிகள் உள்ளது.

    இந்த புதிய இணையதள ஒழுங்குமுறை சட்டம் காரணமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் எக்ஸ் செயலியின் இருப்பை அகற்றுவது அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனர்களை தடுப்பது குறித்து எலான் மஸ்க் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    • போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர்.
    • அமெரிக்க பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது.

    தாக்குதல்களை நிறுத்தக் கோரி பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்குள்ள கேனான் ரோட்குண்டா பகுதியை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தை நோக்கி சென்றனர்.

    இதையடுத்து பாராளுமன்ற நுழை வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரதான நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பாதைகளுக்கு பதிலாக சுரங்கப் பாதைகளை பயன்படுத்துமாறு பாராளுமன்ற ஊழியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி சென்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 300 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் யூத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் போர் நிறுத்தம் கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக யூத அமைப்பு உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்கள் பாராளுமன்ற கேனான் கட்டிடத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க அதிபர் ஜோபைடன் பாராளுமன்றத்துக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

    அமெரிக்க பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர்.
    • வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கம்பாலா:

    ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவின் மேற்கு மாகாணத்தில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பூங்காவில் அதிக அளவிலான வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

    இந்தநிலையில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த சபாரி வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அந்த வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் சென்ற உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து அந்த நாட்டின் அதிபர் யோவேரி முசவேனி கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்
    • வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் யூத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. புகழ்பெற்ற இந்த வழிப்பாட்டு தலம் சார்பில் பள்ளி- கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை அங்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் இந்த வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். 

    • டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.
    • நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    ஹனோய்:

    வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் இறுதி வரை ஒரு வாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இருமடங்காக உயர ஆரம்பித்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என சுகாதார துறையினர் கூறுகிறார்கள். மேலும் தாச் தட், ஹோங் மாய், தான் ட்ரை, ஹா டோங் போன்ற நகரங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தலைநகரில் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு காரணமாக வியட்நாமில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.
    • ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் செய்வார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

    அதன்படி ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் வரவேற்றார்.

    அதனை தொடர்ந்து டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜோ பைடனும், பெஞ்சமின் நேதன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது ஜோ பைடன் பேசுகையில், "நேற்று காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்தேன். நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இந்த தாக்குதல் மற்ற குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரிகிறது, நீங்கள் (இஸ்ரேல்) அல்ல" என கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "ஒரு எளிய காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். அமெரிக்கா எங்கு நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். தீமைகள் மற்றும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையானதை அமெரிக்கா உறுதி செய்யும்.

    உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. மேலும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள்" என்றார்.

    மேலும் அவர் காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார்.

    அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்கு பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் தற்போது நடந்து வரும் போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என விவரித்தார். மேலும் இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

    இதனிடையே போரில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைக்கோர ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாட்டை நடத்த இருந்தார்.

    ஆனால், காசா ஆஸ்பத்திரி மீது நடந்த குண்டுவீச்சின் காரணமாக ஜோ பைடன் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதை ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மன் சபாதி தெரிவித்தார்.

    இதனிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் உதவும் வகையில் மேலும் சில போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

    ஏற்கனவே கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கப்பல்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்தை அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார்
    • ஹமாஸ்க்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு துணை நிற்பதை உணர்த்தும் வகையில் பைடன் பயணம் அமைந்திருந்தது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் மிகப்பெரியதாக உள்ளது. ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றார். தாக்குதல் நடத்தியது வேறு அமைப்பு எனக் கூறினார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்தித்து பேசுகிறார்.

    காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோ பைடன்- அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

    • போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

    தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நெதன்யாகு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது என்றார். கடந்த 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது என்றும், குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

    மேலும் இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, இஸ்ரேல் மக்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
    • அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.

    இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது தூதரக வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மொஹமத் முய்சு தெரிவித்தார். மேலும், அவர் கூறும்போது, அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கோரப்படும். இதுவே எனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரை சந்தித்தேன். அப்போது இந்திய படைகள் வெளியேற்றத்தை வலியுறுத்தினேன் என்றார்.

    ×