என் மலர்
புதுச்சேரி

இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா தொற்றால் வேலை இழந்துள்ள பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இது அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் தங்களது பெயர் உள்ள மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைத்தனர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் ஒரு சில மாணவர்கள் சம மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு இடங்களை ஒதுக்குவது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் 19-ந் தேதி காலியிட விவரங்கள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
அவர்களுக்கு 21-ந் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். 22-ந் தேதி காலியிட விவரங்கள் வெளியிடப்படும். அன்றைய தினம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 23-ந் தேதி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் பின்னர் காலியாக உள்ள இடங்கள் பட்டியல் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் படையெடுக்க தொடங்கினர்.
வழக்கமாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அதிகம் வருகை தருவார்கள். நேற்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
கடற்கரை சாலை, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் ஆர்ப்பரித்து எழுந்த கடலில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அங்கு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால் மதிய நேரத்திலும் கடற்கரை சாலையில் மக்களை காண முடிந்தது.
இதேபோல் கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த உள்ளூர் மக்களும், குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
இதேபோல் சண்டே மார்க்கெட்டில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார்.
கூட்டணி மந்திரி சபையில் என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவியும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் முக்கிய இலாகாக்களை பா.ஜனதா கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது சம்பந்தமாக எனது விருப்பத்தை ரங்கசாமியிடம் கூறுவேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுவை வீராம்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவை முதலில் ஒழித்து விட்டால் அதன் பிறகு வளர்ச்சி திட்டங்களில் நாம் கவனம் செலுத்தலாம். முதல்-அமைச்சருடன் இணைந்து கவர்னர் அலுவலகமும் பல வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்து செல்லும்.
அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. கவர்னர் என்ற முறையில் கூட்டணி கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது.
ஆனால், மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவராக விரைவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுடைய பணிகளை செய்வதற்கான என்னுடைய ஆரோக்கியமான ஆலோசனைகளை சொல்லலாம்.
இது தொடர்பாக எனது விருப்பத்தை முதல்-அமைச்சரிடம் கூறுவேன்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுற்றுலாத்துறை மந்திரியுடன் கலந்தாலோசித்து புதுவையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அருந்ததிபுரம் ஆனந்தம் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் மரப்பாலம் 100 அடி ரோட்டில் இருந்து தனது மகள் பார்வதி (24) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
மரப்பாலம் சிக்னல் மின்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ராமச்சந்திரனும், அவரது மகள் பார்வதியும் காயம் அடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்ற இருவரும் பின்னர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்து குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை கன்னியக்கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கரன் (26). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி நிறுத்தி இருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.
இதுகுறித்து சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே உருவையாறு காலனி திருக்காஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள். டாக்டரான இவர் அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் ஏராளமான கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த கறவை மாடுகளை சிவபெருமாளின் தாயார் பராமரித்து வந்தார்.
இதற்கிடையே சிவபெருமாளின் தாயார் உடல் நலக்குறைவால் பசுமாடுகளை பராமரிக்க முடியாததால் அதனை விற்க சிவபெருமாள் முடிவு செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் காவேரி நகரை சேர்ந்த பால் கறவை தொழில் செய்து வரும் சங்கர் என்பவர் தான் மிகவும் கஷ்டபடுவதாகவும், குடும்ப நடத்தவே சிரமப்படுவதாக சிவபெருமாளிடம் முறையிட்டார். தனக்கு சில பசுமாடுகளை கொடுத்து உதவி செய்தால் அதன் மூலம் பால் கறந்து தனது குடும்பத்தை நடத்த முடியும் என்று சங்கர் வருத்தத்துடன் கூறினார்.
இதனை கேட்டு மனமிறங்கிய சிவபெருமாள் நம்பிக்கையின் அடிப்படையில் தனது வீட்டில் இருந்த 5 பசு மாடுகள் மற்றும் 2 கன்றுகுட்டிகளை கொடுத்து தான் கேட்கும்போது எந்தவித நிபந்தனையும் இன்றி பசுமாடுகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒப்படைத்தார்.
இந்த நிலையில் சிவபெருமாள் தான் கொடுத்த பசுமாடுகளையும், கன்றுகுட்டிகளையும் திருப்பி கொடுக்கும்படி சங்கரிடம் கேட்டார். ஆனால் அதனை சங்கர் ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதையடுத்து சிவபெருமாள் மங்களம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது சகோதரர் ராஜீ (வயது23). தச்சு தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ராஜீவின் நண்பரான தேங்காய்திட்டை சேர்ந்த அய்யப்பன் என்பவர் இறந்து விட்டார். நண்பன் இறந்தது முதல் ராஜீ வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த வருத்தத்தில் ராஜீ அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். ஆனாலும் நண்பனின் மறைவு ராஜீயின் மனதைவிட்டு அகலவில்லை. தினமும் இறந்து போன நண்பரை நினைத்து விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தான் குடியிருந்த வீட்டில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே பக்கம் பக்கத்தினர் ராஜீயை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






