என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் 7-ந் தேதி வரை எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
    புதுச்சேரி:

    ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகம் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) காலை 9 மணி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் அவசியம். மாணவர் சேர்க்கைக்கு வருவோர் நீட் தேர்வு எழுதுவதற்கு கொடுத்திருந்த அடையாள அட்டை, நீட் தேர்வு ஹால் டிக்கெட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவரிசை கடிதம், ஆன்லைனில் பெறப்பட்ட இட ஒதுக்கீடு கடிதம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கையில் ஏதாவது மாற்றம் உள்ளதா? என்பது குறித்து ஜிப்மர் மற்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி இணையதளங்களை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதன் எதிரொலியாக புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவைக்கு தமிழக பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்பட்டது.

    இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

    புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.

    புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பின. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக பார்க்க முடிந்தது. ஓட்டல்கள், துணி கடைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சண்டே மார்க்கெட்டில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

    புதுவை அரசின் வேண்டுகோளின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கவேண்டும் என, பல்வேறு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் புதுவை அரசை வலியுறுத்தி வந்தனர்.

    தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத புதுவை அரசை கண்டித்து, காரைக்காலில் பிப்.1-ந் தேதி பேரணி நடத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் சிலர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் புதுவை அரசின் வேண்டுகோளின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், தென்னங்குடி நவீன அரிசி ஆலை ஆகிய 2 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், விவ சாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் உழவர் உதவியங்களில் ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நெல் மாதிரியை, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து காண்பித்து ஏற்றுக் கொள்ளப்பட்டப் பின்னர், நெல்லை கொண்டு வந்து விற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மீனவர்கள் தீயை அணைக்க முயன்று, முடியாமல், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அரசலாறு, முல்லையாறு கலக்கும் கடற்கரையோரம் மாவட்ட மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு, காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவகிராமத்தைச்சேர்ந்த கலைமணி என்பவருக்கு சொந்தமான சிவரஞ்சனி என்கிற விசைப்படகு, நேற்று அதிகாலை, வழக்கம்போல் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியது.

    சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, விசைப்படகில் உள்ள மீனை விற்பனை தளத்திற்கு இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக, விசைப்படகு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மீனவர்கள் தீயை அணைக்க முயன்று, முடியாமல், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், விசைப்படகில் எரிந்து கொண்டிருந்த தீயை மற்ற படகிற்கு பரவாமல் போராடி அணைத்தனர்.

    இருந்த போதிலும் விசைப்படகில் உள்ள இன்ஜின், மீன், வலை மற்றும் மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து, நிரவி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரைக்காலில் கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நூர்பள்ளிவீதி தீன்ஸ்பார்க்கில் வசிப்பவர் ஹாஜிராபானு(வயது28). இவரது கணவர் ஹாஜா நவாகதீன் வெளிநாட்டில்கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

    ஹாஜிராபானு, ஹாஜாநவாகதீன் தந்தை, தாயார், தம்பி உள்ளிட்ட உறவுகளுடன், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    வெளிநாட்டில் உள்ள ஹாஜாநவாகதீன், கடந்த 26ந் தேதி ஹாஜிராபானுவிற்கு போன் செய்துபேசியுள்ளார். அப்போது, ஏன் எனக்கு போன் செய்வதில்லையென கேட்டு திட்டினார். இதனால் மனம் உடைந்து போன ஹாஜிராபானு, வீட்டு அறைக்கு சென்று, தனதுதுப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

    சத்தம் கேட்டு, வீட்டில் உள்ள உறவினர்கள் அறை கதவை உடைத்து, ஹாஜிராபானுவை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாஜிராபானு, இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதில் புதிதாக 923 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 29-ந் தேதி 3177 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் புதுவையில் 650 பேர், காரைக்காலில் 18 பேர், ஏனாமில் 72 பேர், மாகியில் 15 பேர் என மொத்தம் 923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    தற்போது ஜிப்மர் மருத்துவ மனையில் 36 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 28 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 24 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் 189 பேரும், வீட்டு தனிமையில் 10,838 பேர் என ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 11, 027 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.   30-ந் தேதி ஒரு நாளில் 2433 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
    இதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 792 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே,  புதுசாரத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, முருங்கபாக்கத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி, மங்கலத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண், காரைக்காலை சேர்ந்த 65 வயது முதியவர், டி.ஆர். பட்டினத்தை சேர்ந்த 73 வயது முதியவர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  

    இதனால் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 1928 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு  கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச் சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜ வேலு,  எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து  தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. பின்னர்,  2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    திருபுவனை அருகே ஆசிரியையிடம் நகையை பறித்து சென்ற 2 பேர் சிக்கினார்கள்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே திருபுவனை பாளையம் ஜெயநகரை   சேர்ந்தவர் அமுதா (வயது 58). இவர் மதகடிப்பட்டில்   உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளி முடிந்து அமுதா தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை லாவண்யா என்பவருடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 

    திருபுவனை கடை தெருவில் வந்த போது, பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில்   ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென லாவண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க 
    செயினை பறிக்க முயன்றனர்.

    உடனே சுதாரித்துக் கொண்ட   லாவண்யா தங்க சங்கிலியை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டார். 

    இதையடுத்து மர்ம நபர்கள் அமுதா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க 
    செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். 

    கொள்ளையர்கள் செயினை பறிக்கும் போது அமுதா கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் துணிகரமாக செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து, அமுதா திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்&இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு,  அஜய்குமார் மற்றும்  குற்றப்பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத் தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். 

    இந்த நிலையில் ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேர் சேலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக திருபுவனை போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருபுவனை போலீசார் சேலம் போலீசார் உதவியுடன் சேலம்& கோவை சாலையில்   பூந்தோட்டம் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு  வந்தனர்.

    அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை விக்கிர மங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி (22), மற்றும் அவனது   கூட்டாளி சென்னை ராஜாஜி நகரை சேர்ந்த சசிகுமார் (20) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் ஆசிரியை அமுதாவிடம் நகை பறித்து சென்றதை ஒப்பு கொண்டனர்.   மேலும் இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுவையில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் ஏற்கனவே உள்ளது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து கருப்பசாமி மற்றும் சசிகுமாரை கைது செய்து அவர்களிடம் இருந்து தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில்  ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
    பெரியகாலாப்பட்டில் வக்கீல் அலுவலகத்தில் கதவை உடைத்து பணம்-வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை பெரிய காலாப்பட்டு மெயின் ரோட்டில் தனியார் வணிக  வளாகம் பின்புற பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 42). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரு கிறார். 

    இவரது அலுவலகம் பெரிய   காலாப்பட்டு கிழக்கு கடற்கரை மெயின் ரோட்டில் நுழைவு வாயில் அருகே உள்ளது. 

    28-ந் தேதி முருகன் தனது அலுவலக வேலையை முடித்து அலு வலகத்தை பூட்டி விட்டு சென்றார்.

    29-ந் தேதி அலுவலகத்துக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு   திறந்து கிடந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி   அடைந்தார். பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

    பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம், 2 வெள்ளி கை காப்பு மற்றும் விலை உயர்ந்த செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன்  மொத்த மதிப்பு ரூ.69 ஆயிரம் ஆகும்.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில்  அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணம், வெள்ளி நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வக்கீல் முருகன் காலாப்பட்டு   போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்&இன்ஸ் பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். 

    தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    புதுவை இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முன்னாள் கவர்னர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி இருந்தார்.  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் கடும் மோதல் நிலவியது. 

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது செயல்பாட்டை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தை அதிகரித்தனர்.

    இந்த நிலையில் கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தெலுங்கானா கவர்னர்  தமிழிசை புதுவையின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    கிரண்பேடி கவர்னராக தான் பதவியில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்து ‘அச்சமற்ற  நிர்வாகம்‘ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். 

    இதுகுறித்து புதுவை மக்களுக்கு கிரண்பேடி  வெளியிட்டுள்ள கடிதம் வருமாறு:-

    புதுவை மக்களுக்கு எனது கடைசி கடிதம் இது. புதுவை கவர்னராக பணியாற்றிய கடந்த மே 29, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை எனது சேவையின் போது நான் உங்களுக்கு பல  கடிதங்களை எழுதியுள்ளேன். இதுதான் எனது கடைசி கடிதம். 

    புதுவையில் பணியாற்றிய விலை மதிப்பில்லாத என் நினைவுகளை நான் என்னுடனேயே மறைந்து போக விரும்பாததால்தான் தற்போது அச்சமற்ற நிர்வாகம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.  இதனை நான் ஏன் எழுதியுள்ளேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 

    குறிப்பாக புதுவை இளைஞர்கள், குழந்தைகளுக்காக இதை எழுதியுள்ளேன். அவர்கள் இந்த வரலாற்றை படிக்க வேண்டும். இந்தியாவிலேயே மிக அழகான பகுதியான புதுவையின் செழுமைக்காக விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

    புதுவையை நீர்வளமாக்கவும், தூய்மையாக்கவும் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நினைவு படுத்த எழுதினேன். நான் அறிந்ததை விட உங்கள் அனைவருக்கும் பிராந்தியத்தை பற்றி அதிகம் தெரியும் என்று எனக்கு புரிகிறது. 

    அதேநேரத்தில் என்னால் செயல்படுத்த முடிந்ததை புத்தகத்தில் எழுதியுள்ளேன்.  ஆதாரப்பூர்வமற்ற எதையும் எழுதவில்லை.

    இது புதுவை மக்களின் அன்பும், மரியாதையும், நேசமும் கொண்ட படைப்பாகவும், விரைவில் தமிழ் பதிப்பும் வரும். உங்கள் அனைவருக்கும் எப்போதும் வளமான புதுவை அமைய வாழ்த்துக்கள்.

    இவ்வாறு கிரண்பேடி கடிதத்தில் கூறியுள்ளார்.
    மின்துறை தனியார் மயத்தில் என்.ஆர்.காங். நிலைப்பாடு என்ன? என்பது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை யூனியன் பிரதேச மின் துறையை மத்திய அரசு தனியாருக்குத் தாரைவார்க்க திட்டமிட்டதை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதே கடுமையாக எதிர்த்தது. 

    சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பியது. மத்திய மந்திரிகளை நேரடியாக சந்தித்து தனியார் மய முயற்சியை கைவிடும்படி கோரிக்கை வைத்தது. 

    மாநில அரசின் உரிமையை மத்திய அரசு கையில் எடுக்கக் கூடாது என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. மின்துறை தனியார் மயத்தை கண்டித்து ஊழியர்கள் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 

    ஆனால் மத்திய அரசு இதைப்பற்றி கவலையின்றி பெரு வணிக கூட்டாளிகளில் ஒருவருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

    குறைந்த மின் இழப்பு, அதிக லாபத்துடன் புதுவை மின்துறை செயல்படுகிறது. இதை தனியாருக்கு ஒப்படைப்பதை மக்கள் நலன் பற்றி சிந்திப்பவர்கள் ஏற்க மாட்டார்கள்.  மின்துறை தனியார்மயமானால் மின்கட்டணம் அடிக்கடி உயரும். இலவச மின்சாரம் நிறுத்தப்படும். 

    தமிழ்தெரியாதவர்கள் மின்துறை ஊழியர்களாக சேர்க்கப்படுவர். புதுவை இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும். அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும்.  இப்பிரச்சினையில் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என மக்களிடம் தெரிவிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    உருளையன்பேட்டை அய்யனார் நகரில் கடன் பிரச்சினையால் வாழை இலை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை அய்யனார்நகர் சந்திர சேகரன் வீதியை சேர்ந்தவர் சின்னதுரை(வயது52). இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், சீனுவாசன் என்ற மகனும் உள்ளனர்.

    சின்னதுரை சாரதிநகரில் வாழை இலை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. 

    இதற்கிடையே சின்னதுரை கடன் பிரச்சினையால் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வார்.

    வழக்கம் போல் சின்னதுரை அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் மனைவியிடம் பிரச்சினை செய்தார். பின்னர் சின்னதுரை வெளியே சென்று விட்டார்.

    இந்தநிலையில் அவரது மகன் சீனுவாசன் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கீற்று கொட்டகையில் தந்தை நைலான் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சின்னதுரை மனைவி வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×