என் மலர்tooltip icon

    விருதுநகர்

    2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சிவகாசி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரிக்காளை (வயது48). பழ வியாபாரி. இவர் 2017-ம் ஆண்டில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை நீதிபதி பரிமளா விசாரித்து, மாரிக்காளைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.
    ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பெண்களுக்கு எடை அளவு, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமிற்கு வான் முகில் தொண்டுநிறுவன திட்ட மேலாளர் அருள் தலைமை தாங்கினார். கள ஒருங்கிணைப்பாளர் கற்பக சுந்தரி முன்னிலை வகித்தார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் சங்கரன், பார்கவி ஆகியோர் தலைமையில் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கீழராஜ குலராமன், தொம்பகுளம், கீழாண்மறைநாடு, சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், ராசாப்பட்டி, கொங்கன்குளம், சங்கரமூர்த்திபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சுண்டங்குளம் ஊர் நாட்டாண்மை செந்தட்டி காளை பாண்டியன், சமூக ஆதரவு குழுதலைவி முருகேஸ்வரி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி, பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமை வான் முகில் அமைப்பினரும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் சேர்ந்து செய்திருந்தனர்.
    திருத்தங்கலில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 37). கட்டிட தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கட்டிட தொழிலாளி முத்து வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சம்பத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் வழக்கம்போல் பணியில் இருந்து வந்தார்.

    நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்ததால் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவரது மருத்துவ பரிசோதனை முடிவு வெளியானது. இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக விருது நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ள மற்ற காவல் துறையினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதேபோல் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மேலும் பாதுகாப்பு பணியின் போது அவர் அருகே நின்றவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    வேளாண் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் 247 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் தொழிற்சங்கத்தினரும், இடதுசாரி கட்சிகளும், விவசாய சங்கத்தினரும் தொடர்ந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனையொட்டி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் மாவட்ட கிளையின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. வேளாண் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்டத் திருத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

    தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, வாழ்க விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் காளிராஜ், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்தையா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ.. ராமசாமி, முன்னாள் எம்.பி. அழகர்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்அர்ச்சுனன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆர்.எம். சண்முகசுந்தரம், ரகுராம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 41 பெண்கள் உள்பட 247 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    சிவகாசி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த குந்தன் (வயது 23) என்பவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சீமா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சீமா தனது கணவரு டன் சிவகாசி வந்துவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்னை திருமணம் செய்து கொள் அல்லது விஷத்தை குடி என மிரட்டல் விடுத்ததால் வாலிபர் கொடுத்த பூச்சி மருந்தை குடித்த பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 30). இவரது மனைவி 6 மாதத்திற்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றவர், தற்போது பிரசவம் நடந்து குழந்தையுடன் அங்கே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாரீஸ்வரன், 21 வயது பெண்ணை காதலிப்பதாக மிரட்டி வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னை திருமணம் செய்ய வேண்டும் என அவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

    உடனே மாரீஸ்வரன், அந்த பெண்ணிடம், என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் அவர் பயந்து போனார். பின்னர் அந்த பெண்ணை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் என்னிடம் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷ பாட்டிலை) நீ குடிக்க வேண்டும் என்று மாரீஸ்வரன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த இளம்பெண், அவர் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரியவருகிறது். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.
    சிவகாசியில் 7 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சிவகாசி:

    தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 19 இடங்களில் மினி கிளினிக் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதில் 13 மினி கிளினிக்குகள் சிவகாசி சுகாதார மாவட்டத்தில் அமைகிறது.

    சிவகாசியில் கங்காகுளம், பள்ளபட்டி, சித்துராஜபுரம், பெரியபொட்டல்பட்டி, சுக்கிரவார்பட்டி, மம்சாபுரம், வேண்டுராயபுரம் ஆகிய இடங்களில் முதல்- அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    வேண்டுராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், வட்டார மருத்துவர் வைரகுமார், ஜெயச்சந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    ராஜபாளையத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போலீசார் தகுதித்தேர்வு பாதுகாப்பிற்காக ராஜபாளையம் போலீசார் சென்று விட்டனர். ராஜபாளையம் நகர்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இதனால் பஞ்சு மார்க்கெட், நேரு சிலை, பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், மலையடிப்பட்டி ரெயில்வே கேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வழிகாட்டுதல் இல்லாததால் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ராஜபாளையம் நகர் பகுதியில் போதுமான போக்குவரத்து போலீசார் இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் தேர்வு பணிக்காக போக்குவரத்து போலீசார் சென்றதால் இன்னும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் நகர் பகுதிகளில் காணப்பட்டது.

    ஆதலால் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் அல்லது தேர்வு பணியில் போலீசார் ஈடுபடும் காலங்களில் இந்த பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.

    ராஜபாளையம் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சிரமம் கருதி நகர்பகுதியில் தேவையற்ற வாகனங்கள் நுழைய தடை விதித்து டி.பி.மில்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது.

    சத்திரப்பட்டி மேம்பால பணிகள் முடிவடையாததால் அதிக உயரம் கொண்ட கனரக வாகனங்கள் நேர் வழியில் செல்ல அனுமதி உள்ளது. தற்போது போலீசார் இல்லாததால் இவர்கள் டி.பி. மில்ஸ் ரோட்டின் பாதி வழியில் சென்று வேறு வழியின்றி மலையடிப்பட்டி ரெயில்வே கேட் வழியாக திரும்ப வழியில்லாமல் திணறுகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சாத்தூரில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    சாத்தூர்:

    சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். பாபு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இதையடுத்து புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    சாத்தூரில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார தலைவர்கள் செந்தியப்பன், சீனிவாசன், சுப்பையா ஆறுமுகம், சேதுராமலிங்கம், செய்யது இப்ராகிம், வேலுச்சாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் நகர தலைவர் தாமோதரன் செய்திருந்தார்.

    முன்னதாக சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் சிறப்பு கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினரால் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் ஒத்தையால் ஒ.மேட்டுப்பட்டி கண்மாய், சூரங்குடி, ஸ்ரீரங்காபுரம் உள்பட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    விருதுநகர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் ருக்மணி (வயது 63). நோய்க்கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயசுதா (48) கொடுத்த புகாரின் பேரில் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 864 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,104 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 15,738 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 138 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினமும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எனினும் தென்மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் தான் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    இதற்கு காரணம் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தாதது தான் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள கூரைக்குண்டு கிராமம் மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி வளாகத்தில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏனெனில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள பகுதியிலேயே நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் அப்பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை, கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இம்மாதிரியான நிலை நீடித்தால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் எந்த அளவில் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் என்பது தெளிவாக தெரியும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×