என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் இளம்பெண்ணை வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவரும் வேலூர் ரங்கசாமி நகரை சேர்ந்த துர்காதேவியும் (20) காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரேஷ் மற்றும் அவருடைய அம்மா லலிதா ஆகியோர் துர்காதேவியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்தனராம். நரேசின் மாமா மகேஷ் தகாத வார்த்தைகளால் துர்காதேவியை திட்டி, அவரின் செல்போனை பறித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது., மேலும் 3 பேரும் சேர்ந்து துர்காதேவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிந்து நரேசை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய லலிதா, மகேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் திடீரென கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவில்லை. கட்டணம் செலுத்திய மாணவர்களும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

    தற்பொழுது அந்த அறிவிப்பு செல்லாது என்றும், மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேலூர் ஊரீசு கல்லூரி நிர்வாகம் அரியர் தேர்வுக்கு பணம் கட்டுமாறு மாணவர்களிடையே தெரிவித்தனர்.

    இதனால் இக்கல்வி ஆண்டில் படித்து வரும் மாணவர்களின் அரியர் வைத்தவர்களும், 3-ம் ஆண்டு முடித்து சென்ற மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து நேற்று கல்லூரி முன்பு அமர்ந்து மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த முடியாது என அவர்கள் கூறினர்.

    இதையடுத்து வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், கல்லூரி நிர்வாகத்தினர் வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்கள் கோரிக்கை குறித்து பல்கலைக்கழகத்தில் மனுவாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக போராட்டம் செய்வது வீண் என போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 3-ம் ஆண்டு முடித்த மாணவர்களில் அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. எனவே மாணவர்கள் பலர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். தற்போது இவ்வாறு தெரிவிப்பதால் உயர்கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டோம். தேர்ச்சி செய்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று கூறுகின்றனர். இதை எதிர்த்து போராட்டம் செய்தோம் என்றனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே அரியர் தேர்வுக்காக மாணவர்கள் கட்டணம் செலுத்தினர். ஆனால் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என கூறுகின்றனர். ஏற்கனவே மாணவர்கள் செலுத்திய கட்டணம் அந்த தேர்வு ஏற்பாடுகளுக்கு செலவாகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் தேர்வு நடத்துவதற்கு பணம் தேவைப்படுவதால் கட்டணம் வசூலிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    இதேபோல, திருவண்ணாமலையிலும் அரசு கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர் அருகே லாரியில் கடத்திய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வேலூர் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், தினேஷ் மற்றும் குழுவினர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியில் சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள், லாரியுடன் 16 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (வயது 43) என்றும், ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
    தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட கார் டிரைவர் சாவில் மர்மம் உள்ளதாக கர்ப்பிணி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 27), கார் டிரைவர். இவருடைய மனைவி ரூபிகா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யஸ்வந்த் என்ற மகன் உள்ளான். ரூபிகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தினேஷ் பாகாயம் தொரப்பாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பாகாயம் போலீசார், பிணத்தைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பாகாயம் போலீசில், தினேஷ் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தினேசின் உறவினர்கள் கூறியதாவது:-

    தினேஷ் சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார். காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின் காட்பாடியில் வசித்து வந்தார். அவருக்கும், அவர் வேலை பார்த்த கால் டாக்சி நிறுவன உரிமையாளருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.

    தினேஷ் இறப்பதற்கு முந்தைய நாள் சிலர் வீட்டுக்கு வந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தினேசையும், அவரின் மனைவியையும் அழைத்துச் சென்றனர். அன்று இரவு ரூபிகாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இரவு தினேஷ், ரூபிகாவை தொடர்பு கொண்டு பணம் கொடுத்தால் தான் என்னை விடுவார்கள், எனத் தெரிவித்துள்ளார்.

    மறுநாள் காலை பணம் ஏற்பாடு செய்து தருவதாக ரூபிகா கூறினார். ஆனால், மறுநாள் காலை தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக ரூபிகாவுக்கு தகவல் வந்துள்ளது. தினேசின் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    புகார் மனு கொடுக்க வந்தபோது, கர்ப்பிணியான ரூபிகா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திராவில் இருந்து சோளிங்கர் வழியாக செம்மரம் கடத்தி வந்த கார் பைக்கில் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    ஆந்திராவில் இருந்து சோளிங்கர் வழியாக செம்மரக்கட்டைகளை கடத்திக் கொண்டு சொகுசு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.

    சோளிங்கர் அருகே அதிகாலை வந்தபோது கார் தறிகெட்டு ஓடியது. அப்போது முன்னால் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காரை மடக்கி பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது டிரைவர் காரை மீண்டும் பின் பக்கமாக இயக்கினார்.

    அப்போது பின்னால் வந்த வினோத் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த பைக் மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.

    தொடர்ந்து தறிகெட்டு பின் பக்கமாக வந்த கார் தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது சம்பந்தமாக பொதுமக்கள் சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் சோதனை நடத்தினர்.

    காரில் ஒரு டன் அளவிலான 16 செம்மரக் கட்டைகள் இருந்தது. ஒவ்வொரு கட்டைகளும் 2 மீட்டர் நீளத்தில் இருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து தினந்தோறும் சோளிங்கர் வழியாக அதிவேகமாக சொகுசு கார்கள் சென்று சென்று வருகிறது. அந்த கார்களில் செம்மரம் கடத்தி வரலாம். இதனால் போலீசார் தினமும் வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலில் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.

    கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர். ஜெயிலுக்கு வெளியே இருந்து செல்போன் கஞ்சா போன்றவை வீசப்படும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்த நிலையில் வேலூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) மகேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் ஒட்டுமொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    ஜெயில் பூங்கா பகுதிகள், சமையலறை என அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது.

    வேலூர் ஜெயிலில் இன்று வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    வங்கி வளர்ச்சிக்கு மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு முக்கியம் என கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.
    வேலூர்:

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வேலூர் ஏலகிரி வளாகத்தில் வங்கி மேலாளர்கள், வங்கி செயலாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சிவராமன் வரவேற்றார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியோடர்தியஸ் திட்ட விளக்க உரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    கல்வி மற்றும் பொருளாதாரம் கிடைக்கப்பெற்ற பெண்கள் மிகவும் பாக்கியசாலிகள். இதன்மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை வளர்கிறது. கிராமப் பெண்களும் திறமையை வெளிக்காட்ட மகளிர் சுய உதவி குழு உதவுகிறது. பெண்களின் முன்னேற்றம் சமுதாய வளர்ச்சியாகும். பெண்களுக்கு கல்வியறிவு கிடைத்தால் நாட்டின் வளர்ச்சி கிடைத்த மாதிரி. ஆண்களுக்கு இணையாக பெண்களின் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது.

    பள்ளி பொதுத்தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களுக்கான பொருளாதார இடைவெளியை உடைத்தெறிய வேண்டும். கிராமப்புற தொழிலை பலர் இணைந்து செய்யும் போது அந்த தொழில் அதிகரிக்கிறது. உங்களில் பலர் குழுக்களாக சேர்ந்து சாதிக்க முடியும். இணைந்து செயல்பட்டால்தான் தலைமைப்பண்பு அதிகரிக்கும்.

    உங்களின் திறமையும் அதிகரிக்கும். ஆண்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில் இருந்து விலகி மெல்ல மெல்ல தனித்து செயல்பட உதவுகிறது. பெரிய நிறுவனங்கள் கடன் வாங்கி செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். வங்கியின் வளர்ச்சிக்கு பெரும் முதுகெலும்பாக உள்ளீர்கள்.

    அழிந்துவரும் கிராமப்புற தொழில்களை மீட்டெடுத்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு வங்கிகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது. அதே போல வங்கிகளில் பெறும் கடன்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறப்பான முறையில் உரிய நேரத்தில் வட்டி மற்றும் அசல் தொகையுடன் திருப்பி செலுத்தி மீண்டும், மீண்டும் கடன் பெற்று தங்களை பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உயர்த்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி மகளிர் திட்டஅலுவலர்கள் ஜெயகாந்தன், வெங்கடேசன் மற்றும் வங்கி மேலாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
    காட்பாடி:

    வேலூரை அடுத்த காட்பாடியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது தேர்தலுக்காக தான். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளனர். கிருபானந்த வாரியார் மறைவின் போது அ.தி.மு.க. அரசு தான் இருந்தது. அப்போது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது வேதனையானது.

    ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு தான். பறிமுதல் செய்யட்டும். சசிகலாவுக்கு வரவேற்பு என்பது தியாகத்துக்கும், கொள்ளை கூட்டத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. இதுவரையில் ஒரு ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து ரூ.10 கோடி அபராதம் செலுத்திவிட்டு வந்தவருக்கு வரலாறு காணாத வரவேற்பளிப்பது வெட்கக்கேடானது.

    டி.டி.வி., தினகரனும், தி.மு.க.வும் இணைந்து அ.தி.மு.க.வுக்கு சதிவலை பின்னுவதாக முதல்வர் கூறுவது சரியில்லை. அதற்கு சசிகலாவே போதும்.

    வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து மவுனமாக தவ வாழ்க்கை மேற்கொண்டுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். அவர் ஏதாவது சதி செய்கிறாரா? என தெரியவில்லை.

    சபாநாயகர் உரிமை மீறல் நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம் நியாயம் கிடைத்துள்ளது.

    முதல்வருக்கு கொலை மிரட்டல் என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற கலாசாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள். பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான். இவர்கள் ஏன் வேதனையடைகிறார்கள். மு.க.ஸ்டாலின் படிப்படியாக கட்சியில் வளர்ந்து தான் இந்த அந்தஸ்த்திற்கு வந்துள்ளார்.

    தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின் போது வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பகுதி பொறுப்பாளர்கள் வன்னியராஜா, சுனில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து விடுபட்டவர்கள் மட்டும் தாலிக்கு தங்கம் வாங்க விண்ணப்பித்த தகுதியான காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களை சேர்ந்த 592 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என சமூகநல அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதைப் பெறுவதற்காக அறிவித்தபடி நேற்று காலை 7.30 மணி அளவில் அணைக்கட்டு, காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் இருந்து ஏராளமான பயனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    காலை 10 மணி அளவில் 500-க்கும் மேற்பட்டோர் காயிதே மில்லத் அரங்கம் அருகே குவிந்ததால் அங்கு திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    மேலும் டோக்கன் பெறுவதற்கு அங்கிருந்தவர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ள மற்றொரு அரங்கில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் அங்கு அவர்கள் சென்று கும்பலாக நின்றனர்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கும்பலாக கூடி இருந்தவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து டோக்கன் வழங்கினர். பின்னர் அவர்களுக்கு சமூகநலத்துறை அலுவலர் முருகேஸ்வரி தங்கம் வழங்கினார்.

    பயனாளர்கள் வரிசைப் பதிவேட்டில் சில பிரச்சினைகள் இருந்தது. இதனால் அவர்களுக்கு தங்கம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏற்கனவே தங்கம் பெறாமல் அணைக்கடு ஒன்றியத்தில் 146 பேரும், கணியம்பாடியில் 17 பேரும் இருந்தனர். அர்களுக்கும், காட்பாடி ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கு என 592 பேருக்கு தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கம் பெற பயனாளிகள் மட்டும் வராமல் உடன் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பெயர் மற்றும் வங்கிகணக்கு எண்ணில் சில முரண்கள் இருந்தது. இதனால் சிலருக்கு உடனடியாக தங்கம் கொடுக்க முடியவில்லை. அவை அனைத்தும் சரிபார்த்து பின்னர் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பொதுமக்கள் கூறுகையில், தங்கம் பெற ஏராளமானவர்கள் வருவார்கள் என அதிகாரிகளுக்கு தெரியும். எனவே அவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வந்தவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் பின்பற்றவில்லை. பயனாளிகள் கடும் அவதிப்பட்டனர் என்றனர்.
    தான் நலமாக இருக்க உங்களுக்கு சேவை செய்ய தனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
    வேலூர்:

    காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசூர், ஏகாம்பரநல்லூரில் 2 ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. மக்கள் சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முன்னாள் முதல்வர் கருணாநிதி முடிவு செய்த போது மின்சார துறை அமைச்சராக நான் இருந்த போது கையெழுத்திட்ட கரம் தான் இது.‌

    விவசாயக்குடும்பத்தில் பிறந்த நான் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டும் போது என் தாயின் காதில், மூக்கில், கழுத்தில் இருந்த நகையும் இல்லாமல் போகும். இதேபோல் மக்கள் எல்லோரும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

    மேலும் எனது கடைசி ஆசை எனது தொகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்க வேண்டும். தமிழகத்திலேயே இல்லாத அளவுக்கு தனியார் மருத்துவமனையை விட சிறந்த மருத்துவமனையாக உருவாக்க வேண்டும். அதில் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும்‌ என்பது எனது கடைசி ஆசை. நான் நலமாக இருக்க உங்களுக்கு சேவை செய்ய எனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். (இதனை தொடர்ந்து கூட்டத்தில் 2 நிமிடங்கள் அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.)

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய டி.வி. இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க.வினர் வழங்கிய மின்விசிறி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் ஒன்று கூட வேலை செய்யவில்லை. பேரீச்சம்பழத்திற்கு கூட உதவாமல் போனது.

    வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தான் ஜெயிக்கும். தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் தான் முதல்வர். சத்தியம் செய்து சொல்கிறேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நான் நம்புகிறேன். நீங்கள் என்னை தூக்கி விட்டால் தி.மு.க. தலைவர் பக்கத்தில் 2-வது அமைச்சராக உட்கார்ந்துகொள்வேன். அவரிடம் கேட்டு 3 மாதத்தில் காவிரி தண்ணீரை கொண்டு வருவேன்.

    இது நான் சவாலாக விட்டு செல்கிறேன். நான் சவால் விட்டேன் என்றால் அதை நான் செய்து முடிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூரில் குப்பைகளை தரம்பிரித்து கொடுத்த 2 பேருக்கு 4 கிராம் தங்க காசு, 4 பேருக்கு 5 கிராம் வெள்ளி காசுகளை மாநகராட்சி கமிஷனர் வழங்கினர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 24-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். சிறந்த முறையில் தரம் பிரித்து கொடுக்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி காசுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 45 நாட்கள் சிறந்த முறையில் குப்பைகளை தரம்பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் வழங்கும் நிகழ்ச்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 பேருக்கு 4 கிராம் தங்க காசு, 4 பேருக்கு 5 கிராம் வெள்ளி காசுகளை மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் வழங்கினர்.

    இதில், மாநகர் நலஅலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனமுதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
    வேலூர்:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் இன்று அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்பட்டார்.

    கிருபானந்த வாரியார், 1993ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×