என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தூசி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா சிறுநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை (வயது 42), தொழிலாளி. அவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு முத்துலட்சுமி (17), அனுசியா (15) என 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி தணிகைமலை மோட்டார் சைக்கிளில் மாந்தோப்பு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தணிகைமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த தணிகைமலை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மராட்டிய மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்துள்ளன.
    திருவண்ணாமலை:

    வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 1,480 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,780 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,150 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவை வந்து உள்ளன.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து உள்ளது. ஏற்கனவே உள்ள எந்திரங்கள் மற்றும் வரப்பெற்ற எந்திரங்கள் என தற்போது 5,037 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,852 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,152 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் உள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வசதியாக 1,000 வாக்காளர்கள் மேல் கொண்ட வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தற்போது நமது மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 590 ஆக உள்ளது. அதன்படி 2,962 வாக்குச்சாவடிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் அமைய வாய்ப்பு உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,962 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 70 சதவீதமும், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 30 சதவீதமும், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் 40 சதவீதமும் கூடுதலாக உள்ளது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-க்கு பயன்படுத்துவற்காக மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு எந்திரங்களை முதல் நிலை சரிப்பார்ப்பு பணிக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் விரைவில் வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் முழு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படாததால் 4 இடங்களில் கமல்  மக்களை வேனில் இருந்தபடி சந்தித்தார். பொதுமக்களை பார்த்து கைகூப்பி சென்றார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் முழு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அரசும் அரசியலும் அதன் அடிப்படையில் அமைய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வந்துள்ளேன்.

    உலக தரத்தில் திரைப்படங்களை கொடுத்தால் மட்டும் போதாது. என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். என் வாழ்க்கை அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று விரும்புகிறேன்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும். உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.

    மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் செய்யாறு மணல் கொள்ளையைத் தடுப்போம். பழங்குடி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம். நீங்கள் அன்புடன் என்னை ஆண்டவர் என்றழைக்கிறீர்கள். உண்மையில் நான் உங்களது தொண்டன்.

    தமிழகத்தில் முறையான பாசன வசதி இல்லை. நீர் மேலாண்மை கவனிக்கப்படவில்லை.

    மராமத்து பணிகளை தமிழக அரசுதான் செய்வது போல் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்களையும் சீரமைப்போம். முதல் முறை ஆட்சிக்கு வந்ததுமே அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். நானும் ஒரு கூத்து கலைஞன்தான். நான்அவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என் உள்ளத்தின் மையத்தில் அவர்களை வைத்துள்ளேன்.

    தேர்தலுக்கு முன்பே நமதுகட்சித் தொண்டர்கள் வீடு வீடாக சென்று நமது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தலின் போது பொதுமக்கள் கடைசிநேர கண்கட்டி வித்தையில் மயங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் ஒற்றை விரலில் மக்கள் வைக்கும் முத்திரை மைதான் நாளைய அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வந்தவாசியில் புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து இறுதிசடங்கு செய்யும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
    வந்தவாசி:

    புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட வராத, வேளாண் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வந்தவாசியில் என்.எம்.ஆர். உழவர் பேரவை சார்பில் இறுதி சடங்கு நடத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்காக வந்தவாசி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் 18-ம் நாள் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக தர்ப்பை புல் உள்ளிட்டவற்றை தூளி கட்டியும், தோளில் பால்குடத்தை சுமந்தபடியும், சங்கு ஊதிக்கொண்டும், மணி அடித்தவாறு, தாலுகா அலுவலகம் வரை வந்தனர்.

    அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் கொண்டு வந்த பால் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விவசாயிகள் மனுக்கள் கொடுக்க தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். இந்த போராட்டத்தில் உழவர் பேரவையை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்
    பழையனூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வாணாபுரத்தை அடுத்த பழையனூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி சமைத்து சாப்பிட முடியாத அளவுக்கு தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பருப்பு, கல், மண் மற்றும் குப்பைகள் அதிகளவில் கலந்து வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்ததாகவும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ரேஷன்கடைக்காரரிடம் கேட்டால் அவர் சரியான முறையில் பதில் அளிப்பதில்லை. மேலும் 25 கிலோ அரிசிக்கு ரசீது போடுகிறார். ஆனால் அரிசி 19 கிலோதான் இருக்கிறது. அரிசி ஏன் குறைவாக இருக்கிறது என்று கேட்டால் அதற்கு தரக்குறைவாக பேசுகிறார். இதுபற்றி நாங்கள் உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    இதுகுறித்து ரேஷன்கடை விற்பனையாளரிடம் கேட்டபோது அரிசி எங்கள் விவசாய நிலத்தில் இருந்து நாங்கள் தரவில்லை. இதுபோன்ற அரிசிதான் எங்களுக்கு வருகிறது. அதைத்தான் நாங்கள் தருகிறோம். நீங்கள் வேண்டுமானாலும் உயர் அதிகாரிகளிடம் கேளுங்கள் என்றார்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தரமான அரிசியை வழங்குவது மட்டுமல்லாமல், சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வந்தவாசியில் கஞ்சா பயன்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் உத்தரவின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இ்ன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சென்றபோது விற்பனைக்கூட வளாகத்தில் இருந்து 5 பேர் ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கிபிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கே.எஸ்.கே. நகரை சேர்ந்த சாதிக் பாட்சா மகன் அஜ்மீர் (வயது 20), குப்தீன் மகன் பாருக் (38), பாபு பாஷா மகன் அப்துல் அமீது (25), பினாங்கு காதர்ஷா தெருவைச் சேர்ந்த பாபு மகன் முகம்மது அலி (24), கோட்டை தெருவைச்சேர்ந்த யாகூப் அலி (58) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    செங்கம் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    செங்கம்:

    செங்கத்தை அடுத்த அந்தனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு, பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அத்தியாவசிய பொருட்கள் வந்துள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடையில் கேட்டதற்கு முறையான பதில் இல்லாததால் நேற்று திடீரென அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கம்- நீப்பத்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். செங்கம் தாசில்தார் மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் லதா உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரேஷன் பொருட்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வாணாபுரம் அருகே கிணற்றை சீரமைத்து வர்ணம் பூசி அழகுபடுத்திய இளைஞர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு பழையனூர் ஊராட்சியில் துருவம் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு ஊராட்சிக்கு சொந்தமான பழமையான குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை சரியான முறையில் பராமரிக்காததால் சேதம் ஏற்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றை தூர்வாரி, சுத்தம் செய்து, சேதமான பகுதிகளை சீரமைத்து, வர்ணம் பூசி, கிணற்றை சுற்றிலும் அழகான பறவைகள் மற்றும் பல்வேறு ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினர்.

    இதனால் அந்த கிணறு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்தக் கிணறு சீரமைக்கப்பட்டதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    ரஜினி-கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில் மாநில வளர்ச்சி திட்டக்குழு கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மக்களின் தேவைகளை அறிந்து அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்டக்குழு நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியை பயன்படுத்தி 42 அரசு துறைகளின் மூலம் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.

    எனவே அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அவற்றின் முன்னேற்றம், மேலும் கூடுதல் நிதி உதவி தேவைப்படுகிறதா? என மாநில வளர்ச்சி திட்டகுழு நேரடி ஆய்வு நடத்துகிறது. மேலும் பரிசோதனை முயற்சியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்கிறோம்.

    நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    குடிசைத்தொழில், சிறுதொழில், சுய உதவி குழுக்கள் செய்யும் தொழில்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. எந்தெந்த தொழிலை மேற்கொண்டால் வாழ்வாதாரம் மேம்படும்.உற்பத்தியாகும் பொருட்களேக்கு விற்பனை வாய்ப்பு கிடைக்கும் என கண்டுபிடித்து அதற்கான நிதியை வங்கிகள் மூலம் பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசியல் நோக்கம்.

    எனவே சுய உதவிக்குழுக்கள் அதிகம் உருவாக்கவேண்டும். அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது. எனவே படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்குவது அவசியம்.

    கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களுக்கு மாநில வளர்ச்சி திட்ட குழு துணைநிற்கிறது.

    அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினி கடந்த 20 ஆண்டுகளாக சொல்லிவருகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

    எந்த கணிப்பில் அவர் அரசியலுக்கு வருகிறார்? என்பது அவருக்குத்தான் தெரியும். நடிகர்கள் கமல்- ரஜினி இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே சவரப்பூண்டி மதுரைமுத்துநகரை சேர்ந்தவர் அலமேலு (வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையோரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அலமேலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    8 மாதங்களுக்கு பின்னர் ஜமுனாமரத்தூரில் உள்ள கோலப்பன் ஏரியில் படகு சவாரி தொடங்கியது.
    ஜமுனாமரத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் உள்ள கோலப்பன் ஏரியில் நடைபெறும் படகு சவாரி சிறப்பு வாய்ந்ததாகும். ஜமுனாமரத்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவுடன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சவாரி செய்ய அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    மேலும் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவார்கள். இதனால் சுற்றியுள்ள கிராமத்து மக்களுக்கு வருமானம் கிடைத்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோலப்பன் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் கோலப்பன் ஏரியில் இருந்த 2 மோட்டார் படகுகள், 3 பெடல் படகுகள், ஒரு துடுப்பு படகு ஆகியவை பயனற்று காணப்பட்டது. மேலும் அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது.

    சமீபத்தில் பெய்த பலத்த மழையால் கோலப்பன் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. ஜமுனாமரத்தூருக்கு சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோலப்பன் ஏரியில் படகு சவாரி சேவை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜீவாமூர்த்தி தலைமை தாங்கி ஏரியில் பூத்தூவி ரிப்பன் வெட்டி படகு சவாரியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், துணைத்தலைவர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 8 மாதங்களுக்கு பிறகு கோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.
    சேத்துப்பட்டு, வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, தச்சாம்பாடி, தேவிகாபுரம், அப்பேடு ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சேத்துப்பட்டு, உலகம்பட்டு, அப்பேடு, தேவிகாபுரம், தச்சாம்பாடி, நெடுங்குணம், மொடையூர், இடையான்கொளத்தூர், ஆத்தூரை, தும்பூர், நரசிங்கபுரம், குப்பம், பத்தியாவரம், ஒதலவாடி, கரிப்பூர், கங்கைசூடாமணி, அனாதிமங்கலம், நந்தியம்பாடி, வேப்பம்பட்டு, வில்லிவலம், மருத்துவாம்பாடி, கிழக்குமேடு, கோணாமங்கலம், கொத்தவாடி, பரிதிபுரம் ஆகிய கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதேபோல் வந்தவாசி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வந்தவாசி, கீழ்கொடுங்கலூர், புரசை, தெள்ளார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை சேத்துப்பட்டு மின்வாரிய செயற்பொறியாளர் ரவிசந்திரபாபு தெரிவித்துள்ளார்.
    ×