search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு எந்திரங்கள்"

    • நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும்
    • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, 'நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்தபின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.



    இந்த கோரிக்கையைத்தான், "இந்தியா கூட்டணி" கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் திரு. குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது.

    தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குனர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது.

    மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.



    கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, ஒன்றிய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் 'சிப்'பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும் அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர்.

    இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச்சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை.

    'இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று பிரதமர் மோடியும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 23- 02- 2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே, நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!- என சனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு அறையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி வாக்கு பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், ஆகியவற்றை வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும். இப்பணி களை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பெங்களூரு பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 பொறியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.

    நாமக்கல்:

    நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு, பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.

    கலெக்டர் ஸ்ரேயாசிங் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் இருந்து இறக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

    இந்த பாதுகாப்பு அறையில், ஏற்கனவே 4,214 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 970 வாக்களர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகிய எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பில் உள்ளன.

    அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள்
    • 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

    15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என விதி உள்ளதால் மாநகராட்சி வளாகத்தில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டு எந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டன.

    1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைத்தனர்.
    • அங்கு போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    இரவு 9.15 மணிக்கு இறுதி சுற்று அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவ னுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை வழங்கினார்.

    இதற்கிடையில் அவ்வப்போது எண்ணி முடிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டு ப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை பாதுகாப்பு அறையில் கொண்டு சென்று அதற்கான இடத்தில் வைத்தனர்.

    ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் அந்த அறையில் தேர்தல் தொடர்பான எந்த பொருட்களும் இல்லாமல் அகற்றினர்.

    பின்னர் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தனர்.

    அங்கு ஒரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஓரிரு நாளில் ஓட்டுப்பெட்டிகள் அங்கிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவல கத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.
    • அ.ம.மு.க வேட்பாளர் சிவப்பிரசாத் உள்பட 6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 96 வேட்பாளர்கள் 121 மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கடந்த 8-ந் தேதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

    மேலும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அ.ம.மு.க வேட்பாளர் சிவப்பிரசாத் உள்பட 6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். நேற்று மாலை 3 மணிக்கு பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

    இதனையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க வேட்பாளர் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்கும் வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெறலாம்.

    தற்போது 77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் 77 வேட்பாளர்கள் பெயருக்கு பின் கடைசியாக நோட்டா இடம்பெறும்.

    5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தினாலும் கட்டுப்பாட்டு எந்திரம் ஓட்டுச்சாவடிக்கு ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும். ஒரு கட்டுப்பாடு எந்திரத்தில் 24 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வரை இணைக்க முடியும். தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மின்னணு எந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி.பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்.டி.ஓ அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலுக்காக 1,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. பெல் நிறுவனத்தை சேர்ந்த 8 பொறியாளர்கள் அந்த கருவிகளில் பழுது ஏற்பட்டுள்ளதா? என்று சரி பார்த்தனர்.

    இந்த பணி முடிந்ததும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. அதன் பின்னர் மின்னணு எந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை மாநகராட்சி பள்ளியில் இருந்து எடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள எந்திரக்கிடங்கில் வைக்கும் பணி நடந்தது. தேர்தல் காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் இந்த பணிகளை பார்வையிட்டார்.

    ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி.பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்.டி.ஓ அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டது.

    ×