என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், மேலும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை, தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடியேற்றத்தை அடுத்து கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகார தலங்களாக இந்த 2 கோவில்கள் உள்ளன
    காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும்.

    நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

    ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.

    வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.

    திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.

    ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.

    திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

    எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

    ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

    ஞானம் என்பது அறிவு.

    தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

    “சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.

    இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

    “மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

    திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.

    ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்
    செய்யாறு அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தாத்தா, பேரன் பலியானார்கள்.

    வெம்பாக்கம்:

    காஞ்சிபுரம் அடுத்த வையாவூரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 33). இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு விஷ்வா (8), என்ற மகனும், நிலா (5), கமலி (3) என மகள்கள் உள்ளனர்.

    இளங்கோவின் சித்தப்பா குழந்தைவேலு (60), அவரது மனைவி புஷ்பா ஆகியோர் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை இளங்கோ ஓட்டி வந்தார்.

    மாமண்டூர் அருகே உள்ள 3 கண் பாலத்தில் கார் வந்த போது பெரணமல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கம்பெனி வேனும், இளங்கோ ஓட்டிச் சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    வேன் மோதிய வேகத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. காரின் இடிபாடுகளில் சிக்கி குழந்தைவேலு, விஸ்வா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளங்கோ, சுகன்யா, நிலா, கமலி, புஷ்பா ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வெம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


    பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையில்  கடந்த சில நாட்களாக  பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மலைத்தொடரில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  பஞ்சலிங்க அருவி  ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்றுமுன்தினம் மலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில் மலைத்தொடரில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தளி போலீசார், சாம்பல் மேடு பகுதியில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து திருமூர்த்திமலைக்கு செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    கோவில் பகுதியில் இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நேற்று  மழை இல்லாத நிலையில்  சிற்றாறுகளில், அதிக நீர் வரத்து காரணமாக பஞ்சலிங்க அருவியில்  வழக்கத்தை விட கூடுதலாக நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.தற்போதைய நிலவரப்படி, திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 979 கன அடி நீர் வரத்து உள்ளது.

    அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நின்று உள்ளூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று எல்லை தெய்வங்கள் உற்சவ நிகழச்சிகள் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கொடியேற்றத்தன்றும், 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளதால் அந்த நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

    மேலும் 17-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதனை தவிர்த்து மற்ற விழா நாட்களில் தினமும் உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி சீட்டு வழங்கும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலை வழங்கி அனுமதி சீட்டு பெற்று சென்றனர்.

    தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) மேற்கண்ட 4 அலுவலகங்களிலும் அனுமதி சீட்டு வழங்கும் பணி நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கர்நாடகத்தில் மேகதாது திட்ட பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை காங்கிரஸ் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டினர் தேவையின்றி பிரச்சினை கிளப்புகிறார்கள். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது. பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவதுடன் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவது தான் மேகதாது திட்டத்தின் நோக்கம். மேலும் அணையில் நீர் இருக்கும்போது, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் உதவும்.

    தமிழகத்தினர், அரசியல் நோக்கங்களுக்காக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். இதில் அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. இது கர்நாடகத்தின் நிலரப்பரப்பிற்குள் செயல்படுத்தப்படும் திட்டம். காவிரி நீரை பெறும் உரிமை மட்டுமே தமிழகத்திற்கு உள்ளது. வெள்ளம் ஏற்படும்போது அந்த நீரை சேகரித்து வைத்து பயன்படுத்தினால் தமிழகத்திற்கு என்ன பிரச்சினை?.

    கடலில் வீணாக போய் சேரும் தண்ணீரை சேகரித்து வைக்கவே இந்த திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த சட்டப்படி அனைத்து உரிமையும் அரசுக்கு உள்ளது. இந்த திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உள்பட எந்த தொந்தரவும் கிடையாது. அதனால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்ட பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் முதல் மேகதாது பகுதியில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் அதற்கான தேதியை அறிவிப்போம்.

    தேர்தலை மனதில் வைத்தோ அல்லது வாக்குகளை பெறவோ இந்த பாதயாத்திரையை நாங்கள் மேற்கொள்ளவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அரசு மேகதாது திட்டத்தை வகுத்து, திட்ட அறிக்கையை தயாரித்தது. மத்திய அரசு அனுமதி வழங்காததால் இந்த திட்ட பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது.

    கிருஷ்ணா மேல் அணை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நாங்கள் முன்பு பாதயாத்திரை மேற்கொண்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்வோம் என்று கூறினோம். அதன் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்தோம். இதில் அரசியல் கிடையாது. எங்களுக்கு விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் தான் முக்கியம்.மேகதாது திட்ட விஷயத்தில் நான் நாட்டின் பக்கம் நிற்பதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். நாங்கள் கர்நாடகம், கன்னடர்களின் பக்கம் இருக்கிறோம். மேகதாது திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    இந்த பேட்டியின்போது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    பையூர் கால்வாய் உடைந்து அருகில் இருந்த ஆரணி டவுன் கே.கே.நகர் சீதாராமன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    பையூர் கனிகலுப்பை எஸ்.வி.நகரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு விவசாயத்திற்கு நீராதாரமாக இந்த ஏரி விளங்கி வருகின்றது.

    தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருவதால் கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து ஆரணி டவுன் பகுதியில் வரும் ஏரிகால்வாய் மூலம் பையூர் ஏரிக்கு நீர்வரத்து வந்தது. ஆனால் கால்வாய் ஆக்கிரமித்து இருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லை.

    இதனால் பையூர் கால்வாய் உடைந்து அருகில் இருந்த ஆரணி டவுன் கே.கே.நகர் சீதாராமன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. பாம்பு போன்ற வி‌ஷ ஜந்துகள் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    பையூர் ஏரி நிரம்பினால் அந்த பகுதியில் உள்ள மேலும் 20 ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

    கன்னியாகுமரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி குழந்தைகள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பணிவு அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும் என்று கூறினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

    அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளுடன் கலந்து ரையாடினார். மேடையில் ராகுல்காந்தி தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

    இந்த வீடியோ காட்சி சமூவலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார்.

    அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை ராகுல்காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் மாணவி ஒருவர், ‘‘நீங்கள் பிரதமரானால் முதலாவதாக என்ன உத்தரவு பிறப்பிப்பீர்கள்?’’ என்று ராகுல்காந்தியிடம் கேட்டார்.

    அதற்கு ராகுல்காந்தி, ‘‘பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவேன்’’ என்று கூறினார்.

    மற்றொரு மாணவி, ‘‘குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, ‘‘குழந்தைகள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பணிவு அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும் என்று கூறுவேன்’’ என்றார்.

    மேலும் ராகுல்காந்தி கூறும்போது, ‘‘தீபாவளி நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு கலாச்சாரத்தின் சங்கமம்தான் நமது நாட்டின் வலுவான சக்தியாக இருக்கிறது. இதை நாம் எப்போதும் காப்பாற்ற வேண்டும்’’ என்று கூறினார்.

    இந்த விருந்தின் இடைவெளி நேரத்தில் பிரியங்காவும் அங்கு வந்தார். அவர் அந்த மாணவிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    பிரியங்கா காந்தி

    பின்னர் ராகுல்காந்தியிடம், ‘‘பிரியங்கா விவசாயிகள் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பங்கேற்றது குறித்து என்ன கூறுகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘விவசாயிகளோடு நாங்களும் இருக்கிறோம் என்பதை அவரது பங்கேற்பு காட்டியது’’ என்றார்.

    இதையும் படியுங்கள்...சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது

    திருவண்ணாமலை அருகே காஞ்சீபுரத்தை சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைகுழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவரது மகள் ரம்யா (24), காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள வெள்ளகுளம் கூட்ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் ரம்யா விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடியபோது போலீஸ் வந்ததால் பயந்துபோய் கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்துக்கு பிறகு அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    ஆவடி:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் கூவம் ஆற்றின் ஓரமாக உள்ள சுடுகாட்டில் அமர்ந்து சீட்டு விளையாடினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீஸ் வருவதை கண்டதும், அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி தலைதெறிக்க ஓடினார்கள்.

    அப்போது சரவணன், போலீசுக்கு பயந்து அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் கூவம் ஆற்றில் செடி, கொடிகள், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து இருந்ததால் செடிகொடிகளுக்கு இடையே சரவணன் சிக்கிக்கொண்டார்.

    இதை கண்ட அவரது நண்பர்கள், கூவம் ஆற்றில் இறங்கி சரவணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் பயந்துபோய் ஆற்றில் இருந்து வெளியேறி விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், இருள் சூழ்ந்து விட்டதால் மின் விளக்குகள் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி இரவு 9 மணியளவில் கூவம் ஆற்றில் செடி கொடிகளுக்கு இடையே சிக்கி இருந்த சரவணனை பிணமாக மீட்டனர். அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது.

    பட்டாபிராம் போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பலியான சரவணனுக்கு சத்தியவாணி (38) என்ற மனைவியும், ஷாலினி (21), மாலினி (19) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி, நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    மருதாடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே மருதாடு கிராமம் பஜார் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 19). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வந்தவாசியில் உள்ள சினிமா தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு மருதாடு கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிவராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று கூறினர்.

    இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,319 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்பிற்கு யாரும் பலியாகவில்லை.
    ×