என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வந்தனர்.
    திருவண்ணாமலை:

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்காக கோவிலில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திரி மற்றும் நெய் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.

    தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 10-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது சாலையில் நின்ற பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்து வணங்கினர். தொடர்ந்து மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

    இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு தீப மை வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் தீப மை வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 45). இவர், முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார்.

    இந்தநிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தமிழ்செல்வன் என்பவர் மணி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதில், நண்பர் ஒருவர் மூலம் மணியிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதைநம்பி அவரிடம் ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை.

    இதனால் கடந்த சில மாதங்களாக அவரிடம் அரசு வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்து வந்தார். எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய மணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் செல்வக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். இதையடுத்து மணி மற்றும் செல்வக்குமார் ஆகியோர் மீது கூட்டு சதி, பண மோசடி செய்ததாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதன்பிறகு அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, செல்வக்குமார் ஆகியோர் சேலம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடியானது.

    அதேசமயம் நடுப்பட்டி மணி, சென்னை ஐகோர்ட்டிலும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தலைமறைவான மணி மற்றும் செல்வக்குமார் ஆகியோரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மணி வந்தபோது, தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் மணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது கூட்டாளியான செல்வக்குமாரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதனிடையே சேலம் உள்பட பல்வேறு இடங்களை சேர்ந்த 25 பேரிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்று மோசடி செய்ததாக மணி மீது மேலும் சிலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
    திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில் மகாதீப தரிசனம் இன்னும் நடைபெற்று வருகிறது.

    இதை ஒட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளது. நேற்று, இன்றும் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். நேற்று மாலை தரிசனத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    மகா தீபத்தை தரிசித்த பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது அருணாசலேஸ்வரர் சன்னதி அருகில் குறுக்கு வழியில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டதால் பலர் வாக்குவாதம் செய்தனர். இருந்த போதிலும் அந்த வழியாக தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

    சிறப்பு தரிசன கட்டணம் செலுத்தியும் விரைந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனைப்பட்டனர். நேற்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

    நாளையுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் மகா தீப தரிசனம் நிறைவு பெறுகிறது.

    பவுர்ணமி தினத்தில் வருகை தரும் பக்தர்கள் கூட்டம் போல் நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சே‌ஷத்திரி, ரமணர் ஆசிரமம், அடிமுடி சித்தர் கோவில் உள்ளிட்ட சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிலர் ஆட்டோக்களில் சென்று அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்தனர்.

    தீபத் திருவிழாவின் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இப்போதுதான் திருவிழா நடைபெறுவது போல பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பலர் ஆன்மிக சுற்றுலாவாக திருவண்ணாமலை வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.

    இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
    காங்கயம் நகரத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக்கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த முத்துகுமார் கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர் தற்போது வரை காங்கயம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை.

    புதிய ஆணையராக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றி வரும் அலுவலர் ஒருவர் பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக காங்கயம் நகரத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக்கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது சில நாட்களாக இந்தப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன.

    மேற்பார்வையிட பிரதான அலுவலர் இல்லாததால் இந்த பணிகள் எப்போது தொடர்ந்து நடைபெறும் என தெரியவில்லை.எனவே உடனடியாக  காங்கேயம் நகராட்சிக்குஆணையாளர் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.
    திருவண்ணாமலை:

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்.

    இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்தார். தலைமுடியிலும் சாயம் அடித்திருந்தார்.

    திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார்.

    சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.

    உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.

    உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

    விரைவில் திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பழனியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. உபரிநீர் வெளியேற்றப்பட்டு குளங்கள், கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதன்படி முழுக்கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 700 கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் குதிரையாறு அணைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக இந்த தரைப்பாலம் சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தரைப்பாலத்தை தற்காலிமாக சீரமைத்திருந்தனர்.

    இந்நிலையில் தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீரால் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் பாலத்திற்கு மறுபுறம் உள்ள பூஞ்சோலை கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மீண்டும் கன மழை பெய்யும் பட்சத்தில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆரணி அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு அருகே பழங்காமூர் காவங்கரை பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 70). கணவரை இழந்து குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது.

    இதில் வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உடலை மீட்டனர்.

    சம்பவம் இடத்திற்கு வந்த ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமியையொட்டி நாளை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 6.30. மணிக்கு அலங்கார தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    சந்தவாசல் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர், கண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சதீஷ்குமார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருச்செந்தூர் அருகே சேதமடைந்துள்ள அரசு பள்ளிக்கட்டிடத்தால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பழுதாகியுள்ளன. மேலும் அந்த கட்டிடங்களின் மேற்கூரையும் சேதமடைந்து மழை பெய்தால், தண்ணீர் வகுப்பறைக்குள் விழுகிறது.

    தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இந்த 2 வகுப்பறை கட்டிடங்களிலும் மழை நீர் விழுந்து, மாணவர்கள் உட்காரும் பெஞ்சு, மேஜைகள் மற்றும் கல்வி சாதனங்கள் உள்பட அனைத்தும் சேதமடைந்துள்ளன.

    இதனால் இந்த வகுப்பறைகளின் மாணவர்களை, மற்ற 2 வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது கொரோனா காலகட்டமாக இருப்பதால் வகுப்பறைகளில் அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி சமூக இடைவெளியுடன் உட்கார வைக்க முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்து கொடுத்து மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆரணியில் காசாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த திருமணி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31). இவர், ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல், காசாளர் கலீம்வரிப் என்பவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கலீம்வரிப் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தார்.
    நாமக்கல்லில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மேட்டுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் நாமக்கல் நடராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்த பிரபு (வயது 35) என்பதும், கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×