search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House Collapsed"

    • சின்னமனூரில் பகுதியில் ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
    • மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் 23-வது வார்டு ஊர்க்காவல் தெருவில் வசித்து வரும் முத்தீஸ்வரன் (வயது 40). இவரது மனைவி ஈஸ்வரி (35) இவர்களது வீடு கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுவர் இடிந்து விழுந்தது.

    அப்போது முத்தீஸ்வரன் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 23 வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள்ராமு, துணைத் தலைவர் முத்து க்குமார் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.

    பின்பு மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • போடியில் நேற்று பெய்த கன மழை காரணமாக 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே குடியிப்புகள் உள்ளன. இங்கு செண்பகவேல் என்பவருக்கு சொந்த வீடுகளில் 3 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நேற்று பெய்த கன மழை காரணமாக இந்த 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருந்தபோதும் பெரும்பாலான பகுதி சேதம் அடைந்ததால் குடும்பத்தினர் கடும் சிரமம் அடைந்தனர்.

    நகராட்சி அலுவலகம் பின்புறம் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கி ரமிப்புகள் அகற்றப்பட்டன. அதில் சில மண்மேடுகள் அப்புறப்படுத்தாததால் சாக்கடையில் அடைத்து நின்றது. இந்த நிலையில் நேற்று சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக போடி யில் கன மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சாலையில் தண்ணீர் செல்ல வழியி ல்லாததால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள், முதியவர்களுடன் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து சாக்கடை கழிவுகளை அகற்றினர். அதில் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    • தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழைக்கு போடி 2-வது வார்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 2-வது வார்டு புதூர் பகுதியில் செல்வம் மனைவி ராசாத்தி(60) தனியாக வசித்து வருகிறார். நேற்றிரவு அவரது பேத்தி ரஞ்சனி(20) பாட்டி வீட்டுக்கு வந்தார். இரவில் 2 பேரும் தூங்கினர். அப்போதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

    சிறிதுநேரத்தில் மேற்கூரையில் இருந்து பூச்சுகள் விழுந்ததால் சுதாரித்துக்கொண்ட 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறினர். சிறிதுநேரத்தில் வீட்டின் சுவர் முழுவதும் இடிந்து பொருட்கள் நாசமானது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் சரியான நேரத்திற்கு வெளியே வந்ததால் உயிர்தப்பினார்கள்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளியான பாட்டி சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். தற்போது வீடும் சேதமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருமங்கலம் அருகே வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்தார்.
    • திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்களாக மழை பெய்து வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(57).

    இவருடைய மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நாகராஜூக்கு 2 வீடுகள் உள்ளது. அம்மாபட்டி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் ஆட்டு குட்டிகளை அடைத்து மற்றொரு வீட்டில் நாகராஜ் தூங்கி கொண்டிருந்தார்.

    திடீரென்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் நாகராஜின் வலது கால் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை அதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
    • வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது.

    பந்தலூர்,

    பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், தேவாலா, கரியசோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது.

    சேரங்கோடு அருகே காப்பிகாடு பாரதியார் நகரில் பார்வதி என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மேலும் வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஆரணி அருகே குடிசை வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு அருகே பழங்காமூர் காவங்கரை பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 70). கணவரை இழந்து குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது.

    இதில் வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உடலை மீட்டனர்.

    சம்பவம் இடத்திற்கு வந்த ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே தொடர்ந்து பெய்து வந்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். கூலி தொழிலாளி. இவரது மனைவி ‌ஷகிலாபானு. இவர்களது மகள் ரிஸ்வானாபர்வீன், மகன் அசாருதீன். இவர்கள் 4 பேரும் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சலீம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டின் சுவர் ஈரத்தில் ஊறி போய் இருந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் சிறுவன் அசாருதீன் இடிபாடுக்குள் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மகனை காப்பாற்ற முடியவில்லையே.. என கூறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசாருதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவரது மனைவி நித்தியா (40). இவர்களுக்கு காவியா (18), பவித்ரா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரியின் தந்தை முருகன் (75) என்பவரும் வசித்து வருகிறார்.

    ஈஸ்வரன் தனது வீட்டிலேயே கைத்தறியில் பட்டுப்புடவை நெய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீடு மண்ணால் ஆன ஓட்டு வீடு ஆகும்.

    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈஸ்வரனின் மண் வீடு ஈரப்பதம் காரணமாக உறுதி தன்மையை இழந்து வந்தது.

    இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீட்டின் உறுதி தன்மை மேலும் வலுவிழந்தது. மழை பெய்தபோது ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பின்னர் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று இரவு தங்கினர். இதுபற்றி தெரியவந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ஈஸ்வரனுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் வீடு இடிந்து விழுந்ததில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பட்டு சேலைகள் தயார் செய்ய வைத்திருந்த நூல் பாவு சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து 9 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் நேற்று இரவு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுவீதி, குல்ஷார் வீதி, அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்தது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் மாடிகளில் வீடுகளில் தங்கினர்.

    இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய வீட்டில் அவரது மனைவி அனிஷா பேகம் (வயது63) மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் (45) அவரது மகள் தன்ஷிலா (27) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர்.

    மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்தனர். மொத்தம் 18 பேர் அந்த வீட்டில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 6.15 மணிக்கு திடீரென வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

    பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பலியானவர்கள் உடலை மீட்டு சென்ற காட்சி

    இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானது தெரியவந்தது.

    அனிஷா பேகம்(63) இவரது மருமகள்கள் ரூஹினாஷ் (27), மிஸ்பா பாத்திமா(22),

    பேரன்கள் மனுலா(8), தமீத்(2),

    பேத்திகள் ஹபீரா(4), ஹப்ரா(3),

    ஆசிரியை ஹவுசர்(45), தன்ஷிலா(27).

    9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டனர்.

    முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அகமது, அபிப் ஆலம், இலியாஸ் அகமது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் (6) ஆகிய 9 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உதவி கலெக்டர் தனஞ்சயன் தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பேரணாம்பட்டு, ரங்கம்பேட்டு, கானாற்று வெள்ளத்தால் அந்த பகுதியில் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மழை பெய்து வருவதால் பழமையான வீடுகளில் தங்கி உள்ள பொதுமக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் வந்து தங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. #Iranearthquake
    தெக்ரான்:

    ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

    அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் ரோடுகளில் தடை ஏற்படுத்தின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.

    5.9 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானது.

    நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  #IranEarthquake
    அருப்புக்கோட்டை அருகே எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப் பட்டியைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 55), விவசாயி. இவர் அங்குள்ள காட்டுக் கொட்டாயில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய வீட்டில் மனைவி சங்குலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டரால் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளிடக்கரையில் ஏற்பட்ட உடைப்பால் வீட்டின் கூரைவீடு இடிந்ததையடுத்து, வேதனை அடைந்த தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நாகை:

    கொள்ளிடக்கரையில் ஏற்பட்ட உடைப்பால் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் நேற்று தனது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றார்.

    பின்னர் வீட்டை பார்வையிடுவதற்காக ரவி நேற்று மாலை வந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய அவரது கூரைவீடு இடிந்து கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்த ரவி, நேற்று இரவு திடீரென பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×