என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    செய்யாறு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் (வயது 70), இவரது மனைவி நாகபூ‌ஷணம் (62), மகன் பூபாலன் (35), மருமகள் உமா மகேஸ்வரி (33), உறவினர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கடப்பேரி கிராமத்தை சேர்ந்த குமார் (40), ஆகியோர்கள் நேற்று உறவினரின் நிச்சயதார்த்த விழாவிற்கு செய்யாறு அடுத்த நாவல்பாக்கம் கிராமத்திற்கு சென்றனர்.

    பின்னர் இரவு சுமார் 10.45 மணிக்கு செய்யாறில் இருந்து ஆற்காடு சாலையில் துளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்பக்க டயர் வெடித்து கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயமடைந்த 4 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வீடு புகுந்து நகை திருடியது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    செய்யாறு:

    வெம்பாக்கம் அருகே உள்ள வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49), விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது மகளை காவேரிப்பாக்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவரது மருமகன் சபரிமலை யாத்திரை செல்வதற்காக பூஜையில் கலந்துகொள்ள மருமகன் வீட்டுக்கு 25-ந்தேதி சென்றுள்ளார். 2 நாள் கழித்து வீட்டிற்கு வந்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோவை திறந்து மர்மநபர்கள் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

    இது சம்பந்தமாக அக்கம் பக்கம் விசாரணை செய்தபோது அதே கிராமத்தை சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர், மற்றும் பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் 18 வயதை சேர்ந்த ஒருவர். இவர்கள் இருவரும் குடிசை வீட்டின் பின்புறம் சுவர் ஏறி குதித்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. வெம்பாக்கத்தில் உள்ள அடகு கடையில் திருடிய நகைகளை அடகு வைத்து பணத்தை மது குடித்து செலவு செய்தனர்.

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய ஐ.டி.ஐ. மாணவனை தேடி வருகின்றனர்.
    கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை -செங்கம் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு வரும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் அரசு பஸ்களையே நம்பி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மாணவர்களின் வசதிக்காக போதிய பஸ் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை முன்பு மாணவ- மாணவிகள் பலர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், எங்களில் பலர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அரசு பஸ்சை நம்பித்தான் கல்லூரிக்கு செல்கிறோம். ஆனால் இயக்கப்படும் பஸ்களில் அதிகம் பேர் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதி கல்லூரிக்கு சென்று வரும் நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    போலீசார் கூறுகையில், கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மின்சாரம் தாக்கியதில் டி.வி.மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மேல தாங்கல், கிராமத்தை சேர்ந்தவர் இளையராசு, (வயது 40). டிவி மெக்கானிக், இவரது மனைவி ரேவதி, (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இளையராசு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல தாங்கல், கிராமத்தில் தகர சீட் வீட்டில் வசித்து வந்தார். தகர சீட்டில் செல்லும் மின்சார ஓயர் கசிந்து தகர சீட் முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது.

    இதை அறியாத இளையராசு, மேலே உள்ள தகர சீட்டை தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி, மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் இளையராசுவை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு இளையராசுவைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    பின்னர் இதுகுறித்து இளையராசுவின், மனைவி ரேவதி, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி திருவண்ணாமலைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவிலில் பரணிதீபமும், மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. அப்போது பக்தர்கள் பலர் மலைக்கு சென்று தீப தரிசனம் செய்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா முடிந்த நிலையில் நேற்று பிராயசித்த பூஜை நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு சென்று அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் சிக்குமுடி வாங்குவதாக தினமும் வருகைதரும் மர்மநபர் தனியாக வசிக்கும் முதியவர்கள் பற்றி நோட்டம் விடுவது தெரியவந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பகுதியில் தெருத்தெருவாக வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர்.

    இதில் ஒரு சிலர் மட்டுமே வியாபார நோக்கத்தில் வருகின்றனர். சிலர் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வியாபாரம் நடக்காவிட்டாலும் தினமும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அப்போது யார் யார்? குடியிருக்கின்றனர் என்ற விவரங்களை சேகரிக்கின்றனர். பின்னர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கைவரிசை காட்டுகின்றனர்.

    திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் சிக்குமுடி வாங்குவதாக தினமும் வருகைதரும் மர்மநபர் தனியாக வசிக்கும் முதியவர்கள் பற்றி நோட்டம் விடுவது தெரியவந்துள்ளது.

    இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதுபோன்று தெருக்களில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவண்ணாமலை பகுதியில் அதிக அளவில் திருட்டு நடைபெற இந்த கும்பல்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே இதில் போலீசார் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    ஆரணி அருகே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆரணி- செய்யார் சாலை எஸ்.வி.நகரம் கனிகிலுப்பை கூட்ரோடில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கனிகிலுப்பை கிராமத்தில் 100 நாள் பணியில் 4 பிரிவுகாளாக பிரித்து சுமார் 400 பெண்கள் 100 நாள் பணியில் வேலை செய்து வருகின்றனர்.

    மேலும் 4 பிரிவுகளாக பெண்களை 100நாள் பணியில் வேலை செய்து வந்த நிலையில் தற்போது 100 நாள் பணியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கடந்த 2 மாதகாலமாக சரிவர பணி வழங்கவில்லை.

    இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டற்கு சரிவர பதிலக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆரணி- செய்யார் சாலை எஸ்.வி.நகரம் கனிகிலுப்பை கூட்ரோடில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சாலையின் இருபக்கமும் போக்குவரத்து ஸ்தம்பித்தன. தகவலறிந்த வந்த ஆரணி பயிற்சி டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

    மத்திய அரசு பட்டு சேலைக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுக்கபட்டதால் பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியான சேவூர் முள்ளிபட்டு மூனுகபட்டு எஸ்.வி.நகரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

    மேலும் ஏற்கனவே கைத்தறி பட்டு சேலைக்கு மத்திய அரசு 5சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளன.

    இதனால் பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்துடன் தொழிலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திடிரென மத்திய அரசு பட்டு சேலைக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுக்கபட்டதால் பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் ஆரணி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் ஆகியோர் பட்டு சேலை உற்பத்தியாளர் சங்க தலைவர் குருராஜராவ் தலைமையில் ஓன்றுணைந்து கவனஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஏற்கனவே 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரியால் பட்டு சேலையின் விலை உயர்வு ஏற்பட்டு சிரமத்துள்ளாகி வருகின்றோம்.

    தற்போது மீண்டும் 12 சதவீதம் ஜி.எஸ்.டி உயர்வு ஏற்பட்டால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நெசவாளர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழகளவில் பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுபோவதாக பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பங்கேற்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே 9 பைக்குகளை திருடியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் மாங்கால் கூட்டுரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பைக்கில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கில் வந்த நபர் மாமண்டூர், சந்தைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 34), என்பதும் இவர் காஞ்சிபுரம், மாமண்டூர், அப்துல்லாபுரம், தூசி, வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

    திருடப்பட்ட பைக்குகளில் சென்று தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பாண்டியனை கைது செய்த போலீசார் அவர் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

    இவர் மீது கொள்ளை, வழிப்பறி என பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 தரிசனகட்டணம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண மக்கள் வேதனை அடைந்தனர்.
    கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். முன்னதாக தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு யாத்திரை செல்வார்கள். அதன்படி சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் திருவண்ணாமலை வந்த ஐயப்ப பக்தர்கள் தங்களது பஸ்களை ஈசானிய மைதானத்தில் நிறுத்தியிருந்தனர். அங்கேயே பலர் சமைத்து சாப்பிட்டு விட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் கிரிவலம் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் தாமதமாக வந்த ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலை கோவில் பகுதியில் உள்ள கடைகளில் அமோகமாக பொருட்கள் விற்பனையாகின. கோவிலில் ரூ.50 தரிசனகட்டணம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண மக்கள் வேதனை அடைந்தனர்.

    குறைந்த கட்டணமான ரூ.20 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளையும் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது தொடர்பாக பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் கோவில் நிர்வாகம் இதுபற்றி பரிசீலனை செய்யாமல் வியாபார நோக்கத்தில் ரூ50 கட்டணம் மட்டும் வாங்கி வருவது உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் நாவிதர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். நாதஸ்வர வித்வான். இவரது மனைவி ரம்யா (வயது27). இவர்களுக்கு ராகுல், சஞ்சய் என 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

    சம்பவத்தன்று வெங்கடாச்சலம் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ராகுல் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கண் வழித்த ராகுல் தாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் உள்ளவர்கள் விரைந்து வந்து ரம்யாவை மீட்டு ரம்யாவின் அண்ணனான ரகுவிற்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ரகு இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று போளூர் நரிக்குன்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் (36) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×