என் மலர்tooltip icon

    தேனி

    • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
    • வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக வைகை அணையில் இருந்து முன்கூட்டியே மதுரையைச் சென்று சேரும் வகையில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 1000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியே திறக்கப்படும். அணையில் இருந்து வெளியேறும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு மே 12-ந் தேதி காலை 6 மணிக்கு நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக தண்ணீர் செல்வதால் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 55.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2762 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 1618 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.50 அடியாக உள்ளது. வரத்து 68 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 13.6, வீரபாண்டி 26.8, பெரியகுளம் 58, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5, வைகை அணை 46.8, கூடலூர் 11.6, பெரியாறு அணை 14.8, தேக்கடி 18.2, சண்முகா நதி அணை 7.4, அரண்மனைபுதூர் 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இது தவிர கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

    இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மழை பெய்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும். மூல வைகை ஆறு வறண்டுள்ளதால் வைகை அணைக்கு 25 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக சரிந்துள்ளது.

    மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2802 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1593 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.70 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. கூடலூர் 2.6, சண்முகாநதி 3.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • நேற்று இரவு இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முத்துமாயனின் உறவினர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவரது மனைவி விஜயா (57). இவர்களது மகன் பார்த்திபன் (32) காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    ராஜேந்திரனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தர் (65) என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திரன் குடும்பத்தினர் ஒரு தரப்பாகவும், சுந்தர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரு தரப்பாகவும் அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

    இந்த மோதலில் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துமாயன் (80) என்பவருக்கு கடுமையான அரிவாள் வெட்டு விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ராணுவ வீரர் பார்த்திபன், அவரது தாய் விஜயா, சுந்தர், அவரது மகன் சூர்யா ஆகியோரும் படுகாயம் அடைந்து உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முத்துமாயனின் உறவினர் சுந்தர் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இரு தரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது. மீண்டும் அங்கு மோதல் உருவாகாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வார்கள். இதனை முன்னிட்டு வைகை அணையில் 4 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இது குறித்து அணை அதிகாரிகள் கூறுகையில், மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து மே 8-ந்தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 55.76 அடி நீர் மட்டம் உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2842 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. அணையில் 1585 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 39.20 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. போடியில் மட்டும் 21.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வருகின்ற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலர் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • தேக்கடி சுற்றுலா தலத்துக்கு கோடை விடுமுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    மேலசொக்கநாதபுரம்:

    கோடை விடுமுறை தொடங்கியுள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகியவற்றை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு சுற்றுலா தலங்களில் ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி தேக்கடி சுற்றுலா தலத்துக்கு கோடை விடுமுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    அடுத்தபடியாக மூணாறு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கேரள அரசின் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 2019ம் ஆண்டு மூணாறு-மதுரை சாலையில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 4.5 கோடி செலவில் புதிய தாவரவியல் பூங்காவை உருவாக்கியது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    வருகின்ற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலர் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ரோஜா, ஜெரோனியா, டேலியா, ஜெரிபரா, ஐஸ்வர்யா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பூ வகைகள் சுமார் 20,000 செடிகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள தமிழக எல்லைப் பகுதியில் மக்களை மிரட்டி வந்த அரிக்கொம்பன் யானையை நினைவுபடுத்தும் வகையில் யானையின் உருவத்தை தத்ரூபமாக பைபர் மூலம் வடிவமைத்து அதன் அசல் செயல்பாடுகள் போலவே காதுகளையும் தும்பிக்கையையும் அசைக்குமாறு எந்திரம் மூலம் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளது. தற்போதே அந்த யானை அருகில் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிதாக பல இடங்களில் வண்ண விளக்கு அலங்காரங்களுடன் இசையுடன் கூடிய நீர் அருவி செல்பி பாய்ண்டுகள், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளாவின் முக்கிய அடையாளங்களான அரி கொம்பன் யானை உருவம், கதகளி நாட்டிய உருவம் காட்டெருமை போன்ற உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டதுடன் மலர்கள் மற்றும் இலைகளால் டைனோசர் உருவங்கள், மர அணில்கள் உருவங்கள் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
    • நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவருக்கு நதீஸ்வரி, வைத்தீஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நதீஸ்வரிக்கும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் நெல்லூரைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு நவீன்குமார் (14), நவீனா (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    நதீஸ்வரியின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று நவீன்குமார் அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.

    அய்யாத்துரை என்பவரது தோட்டத்து கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென நீரில் நவீன்குமார் மூழ்கினார். உடன் சென்ற ஜோதி சிவா மற்றும் கவியரசன் ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு புகார் தெரிவித்து கிணற்றில் நவீன்குமாரை தேடினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதும், பின்னர் நிறுத்தப்படுவதும் என இருந்து வருகிறது.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அவ்வப்போது கோடைமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

    அணையின் நீர்மட்டம் 56.36 அடியாக உள்ளது. அணையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதும், பின்னர் நிறுத்தப்படுவதும் என இருந்து வருகிறது.

    நேற்று பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு 522 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2944 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1543 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.79 அடியாக உள்ளது. 11.56 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 38.20 அடியாக உள்ளது. 10 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    பெரியகுளம் 15, சோத்துப்பாறை 1.5, பெரியாறு அணை 1.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
    • பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.

    போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    • விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமாக வறுத்தெடுத்து வந்த நிலையில் நேற்று 4வது நாளாக பல இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை தொடங்கி நள்ளிரவு வரை மழை நீடித்ததால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது.

    மேலும் விவசாய குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.

    கனமழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.69 அடியாக உள்ளது. வரத்து 504 கன அடியாக உள்ள நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3000 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.70 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீரே வராத நிலையில் தற்போது அணைக்கு 493 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1509 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது. வரத்து 32.74 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 48.33 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33 அடி. வரத்து 115 கன அடி. சண்முகாநதியின் நீர்மட்டம் 35.30 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 33.76 மி.கன அடி.

    போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்ததால் கொட்டக்குடி அணைப்பிள்ளையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதே போல் மூல வைகை ஆற்றுப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பக்கரை அருவியில் வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக அங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி 29.6, அரண்மனைபுதூர் 50.4, வீரபாண்டி 28.2, பெரியகுளம் 50.2, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 25.2, வைகை அணை 6.2, போடி 17, உத்தமபாளையம் 46.3, கூடலூர் 21.6, பெரியாறு 3.2, தேக்கடி 15, சண்முகாநதி 57.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

    கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்த தொடர் மழைக்கு சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 66.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.75 அடியாக உயர்ந்துள்ளது. 42 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது. 493 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. 238 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2966 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, போடி 1.2, கூடலூர் 2.8, பெரியாறு 0.2, தேக்கடி 0.4, சண்முகாநதி 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.
    • வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதேபோல கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் நகராட்சி 26, 27, 28வது வார்டுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 29வது வார்டு ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிர்த்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூக்கமின்றி வேறு இடங்களுக்கு சென்றனர்.

    இன்று அதிகாலை அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்ததால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து சேதம் ஆகிவிட்டதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கம்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் இருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் நடந்து செல்ல முடியாத நிலையும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதேபோல் தேவதானப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, அரண்மனைபுதூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளக்கவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது.

    நேற்று மாலை அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்றும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீரின் அளவை பொறுத்து சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனச்சரகர் அன்பழகன் தெரிவித்தார்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திற்கு மேலும் சில நாட்கள் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடியாக உள்ளது. நீர்வரத்து 180 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக உள்ளது. வரத்து 396 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1442 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடி. வரத்து 155 கன அடி. திறப்பு 3 கன அடி, இருப்பு 40.28 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.40 அடி. வரத்து 7 கன அடி.

    ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 30.2, வீரபாண்டி 9.4, பெரியகுளம் 61, மஞ்சளாறு 43, சோத்துப்பாறை 86, வைகை அணை 22.8, போடி 12.8, உத்தமபாளையம் 54.6, கூடலூர் 9.6, பெரியாறு அணை 8, தேக்கடி 1.2, சண்முகாநதி அணை 11.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    ×