என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 நாளில் 11 அடி உயர்வு
    X

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 நாளில் 11 அடி உயர்வு

    • வழக்கமாக ஜூன் 1-ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.51 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 124.75 அடியாக உள்ளது.

    அணைக்கு நேற்று காலை 7735 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7319 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்தபோதும் தமிழக பகுதிக்கு 100 கன அடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3569 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நடைபெறுகிறது. வழக்கமாக ஜூன் 1-ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நீர்மட்டம் குறையும் பட்சத்தில் அதற்கேற்றபடி தாமதமாக திறக்கப்படும். தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதாலும் வழக்கமாக திறக்கப்படுவதுபோல வருகிற 1-ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அப்போதுதான் கூடுதல் மகசூல் பெற முடியும் என்பதோடு 2-ம் போகத்திற்கான கால அளவு சரியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.51 அடியாக உள்ளது. வரத்து 623 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2487 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.80 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 182.70 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.48 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    பெரியாறு அணை 112.4, தேக்கடி 51.2, கூடலூர் 13.4, உத்தமபாளையம் 12.4, பெரியகுளம் 1, சண்முகாநதி அணை 5.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    Next Story
    ×