என் மலர்
சிவகங்கை
- அரசு ஊழியர்கள்-ஓய்வூதியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்.
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து போராடினர். போராட்ட களத்திற்கு வந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்-அரசு ஊழிய ர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று கூறினார். அவர் உறுதியளித்தபடி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.
முதல்-அமைச்சர் பிறந்தநாளில் நாங்கள் கேட்காத கோரிக்கைகளான அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்றும், அனைத்து ஆசிரியர்க ளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
- ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் மாசிமக விழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இந்த கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு மாசிமக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூலவர் அங்காள பரமேசுவரிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தார்.
அதன்பின் கோவிலை வந்தடைந்த அம்மன் தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். தெப்பம் 3 முறை வலம் வந்தது. திரளான பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.
- பொதுபிச்சி அம்மன் கோவில் மாசி திருவிழா நடந்தது.
- இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் "ராவாத்தா" என்னும் மாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்- கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள். விழாவின் 10-ம் நாளில் இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
விழாவின் 10ம் நாளான நேற்று இரவு அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்- கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஏலம்விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறை வடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணை யவழியில் (ஆன்லைனில்) பெறப்பட்ட வருமா னச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதா ரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இருவரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி த்துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்து பேசியதாவது:-
கீழடி அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில், செட்டி நாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்.
நமது முன்னோர்களான சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் ரீதியாக எடுத்துச் செல்லும் வகையில், அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா ஆய்வகத்தின் மூலம் அகழ் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆய்விற்குட்படுத்தப்பட்டது.
அதில் அந்த பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே, நமது முன்னோர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த பயிற்சிக்கென ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1,000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், கோவை, தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்திடவும் திட்ட மிடப்பட்டு, அதன் முதல் சுற்றாக மதுரை மண்டலத்தில்இந்த பயிற்சி தொடங்கப்பட்டு, வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆர்வத்தின் அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்பட்டு, இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக தாங்கள் அறியப்படும் வரலாற்று சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவ செல்வங்களிடம் எடுத்துரைத்து, தமிழின் பெருமையையும், தமிழர்களின் புகழையும் அறியச்செய்கின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுமட்டுமன்றி இந்த வரலாற்று சிறப்பு அம்சங்களை மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் கல்வி சுற்றுலாவும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, இயக்குநர்கள் அறிவொளி (தொடக்கக்கல்வி இயக்ககம்), லதா (மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்), இணை இயக்குநா்கள் குமார், ஸ்ரீதேவி, ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சக்கந்தி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது:-
சிவகங்கை வட்டம் சக்கந்தி கிராமத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். சக்கந்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கண்டனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் நடந்தது.
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.கண்டனூர் பேரூராட்சி செயலாளர் சேகர் வரவேற்றார்.
மாவட்ட செயலா ளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வைகை செல்வன் பேசுகையில், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்கும் இயக்கம் அ.தி.மு.க.. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 3 நாட்களில் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சியோடு இங்கே கூடியுள்ளோம். தி.மு.க அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாசான், சுப்பிரமணியன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நருவிழி கிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர்கள் ராம்குமார், அமுதா, கனகவள்ளி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
- வேம்பத்தூர் கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
- இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் அமைந்துள்ள ஆவுடை நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த கோவிலில் மட்டும் நவகிரகங்களில்உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சிகொடுப்பதால் தென்மாவட்டங்களில் உள்ள புதன் தலமாக கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
கோவில் முன் மண்டபத்தில் புனித நீர்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கைலாசநாதர் சுவாமிக்கும், ஆவுடை நாயகி அம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பின்னர் கோவிலில் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
- அக்னி வீரபத்திர சுவாமி கோவிலில் திருவிழா நடந்தது.
- 101 கிடாய்கள் பலியிட்டு விடிய, விடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்புவனம்
திருப்புவனம் கோட்டையில் அக்னி வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சார்பில் மகா வனபோஜனம், பச்சைக்குடில் உற்சவ விழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
அதன்படி 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த மாதம் 21-ந் தேதி கோவிலில் கொடி கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 24-ந்தேதி முதல் வைகை ஆற்றங்கரையிலிருந்து தினமும் கரகம் எடுத்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர் சுற்றி வந்து பச்சை குடிலில் இறக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 101 கிடாய்கள் பலியிடப்பட்டு முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்பு மகா வனபோஜனம் என்னும் அன்னதானம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் தேரோடும் வீதி, பெருமாள் கோவில் வீதி, சிவன் கோவில் வீதி உள்பட பல வீதிகளில் பக்தர்கள் இருபுறமும் அமர்ந்து அன்னதான விருந்தை சாப்பிட்டனர்.
நள்ளிரவில் தொடங்கிய அன்னதானம் அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- இளையான்குடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
- இந்தப்பணிகள் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சிவகங்கை-பரமக்குடி சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் திருமலைமான் முடிகாரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
மேலும் கூடுதல் தலைமை செயலாளர் தன்னிடமிருந்த பிஸ்கட், முந்திரி, உலர் திராட்சை பழங்களை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆய்வின் போது மதுரை மண்டல செயற் பொறியாளர் செல்வராஜ், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ், இளையான்குடி பேரூராட்சி திட்ட பொறி யாளர் சந்திரமோகன், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கூத்தலூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படித்துவந்தார். சுதந்திரனும் கல்லல் விநாயகநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சூர்யபிரகாஷ் (20) என்பவரும் நண்பர்கள்.
இந்த நிலையில், நேற்று கல்லலில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சூர்யபிரகாஷ் அழைத்ததால், சுதந்திரன் கல்லல் சென்று திருவிழா தேரோட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் விநாயகபுரம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீர்பாட்டிலால் சுதந்திரனையும், சூர்யபிர காசையும் கடுமையாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுதந்திரன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, திருவிழாவுக்கு சென்று விட்டு அந்த வழியாக வந்த சிலர் 2 வாலிபர்கள் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி கல்லல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுதந்திரன் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சூர்யபிரகாசுக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொலை நடந்த பகுதிக்கு இன்று சென்று அங்கு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி உள்ள மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்.
- இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் கருத்தரங்கம் நடந்தது.
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை அனுப்பி வைத்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பில் இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது .
முதல் நாள் கருத்தரங்கில் துறை தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார் பேராசிரியர் நசீர்கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக புதுடெல்லி இந்திய பொது நிர்வாக நிறுவன பேராசி ரியர் சுரேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பி வைத்தனர். அதை வணிகவியல் துறை சர்வதேச தரவரிசை புத்தகத்தை பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா, பாரதியார் பல்கலை கழக பேராசிரியை சுமதி ஆகியோர் வெளியிட அதை கல்லூரி ஆட்சி குழு தலைவர் அகமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அகது, ஆட்சி குழு உறுப்பினர் ஹமீது தாவூது, அப்துல் சலீம், சிராஜுதீன் முதல்வர் அப்பாஸ் மந்திரி பெற்றுக் கொண்டனர். உதவி பேராசிரியர் - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார் .
முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் சுமதி பங்கேற்று பேசினார். 2-ம் அமர்வில் சிறப்பு விருந்தினராக மைசூர் எஸ்.டி. எம். மேலாண்மை மேம்பாடு கல்வி நிறுவன பொருளாதார உதவி பேராசிரியர் ரியாஸ் அகமது பங்கேற்று பேசினார்.
கருத்தரங்கின் 2-ம் நாளில் உதவி பேராசிரியர் சம்சுதீன் இப்ராகிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின ராக மைசூர் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் நாகராஜா பங்கேற்று இந்திய பொருளாதாரத்தில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.
மற்றொரு அமர்வில் உதவி பேராசிரியர் பவுசியா சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலை வர் கிருஷ்ணகுமார் நவீன வங்கி செயல்பாட்டில் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசினார்.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் பிராந்திய இயக்குநர் சதக்கத்துல்லா பங்கேற்று பேசினார். உதவி பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.






