search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள்
    X

    மானாமதுரை நகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் தமிழரசி எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆணையாளர் சக்திவேல், துணை தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள்

    • மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைகளுக்கென ராஜகம்பீரம் தலைமை நீரேற்று நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மானாமதுரை பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன நிறுத்தம் தொடர்பாகவும் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மானாமதுரை பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதல் அலுவலகக் கட்டிடத்திற்கென ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய நகர்ப்புற சுகாதார மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சியின் உரக்கிடங்கு மையத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் ஆய்வு செய்தேன்.

    இந்த மையத்தின் கசடு கழிவு நிலைய மேலாண்மைப் பணிக்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும், அரசக்குழி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின் மயான கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது போன்று சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×