என் மலர்
சேலம்
- 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலம் மைசூர், குடகு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்து உள்ள கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இந்த அணைக்கு நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 697 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 22 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 82.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கடந்த 13-ந்தேதி மாலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் 20 ஆயிரம் கன அடியில் இருந்து 23 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்து அணையில் இருந்து தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது.
இதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ் அணை நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 933 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியாக உள்ளதால் அந்த அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 579 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று மாலை 5 மணி அளவில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. இதனால் நேற்று மாலை 4,500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று முதல் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4,013 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,047 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து 5054 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் 23ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் சுவட்டர் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் வனப்பகுதிகளும் பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கிறது. தற்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விடுமுறை இல்லாததால் சுற்றுலா பயணிகள் இன்றி ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக நாள் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.

மலைப்பாதைகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் பகல் நேரங்களிலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றனர். குறிப்பாக நேற்று மாலை முதல் கடுமையாக குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இன்று காலையும் பனிமூட்டத்துடன் சாரல்மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சுவட்டர் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர். பனிமூட்டம், சாரல் மழை, கடுங்குளிர் நிலவி வருவதால் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி ஏற்காடு நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக மர்ம விலங்கு அடித்து கொன்று வந்தது.
- சில நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது பக்க நாடு கிராமம். இப்பகுதியில் உள்ள கோம்பைக்காடு, ஓடுவங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில், விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக மர்ம விலங்கு அடித்து கொன்று வந்தது.
இதனை அடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்கள் மற்றும் அடையாளங்களை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதை உறுதி செய்தனர். இதனை அடுத்து வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தும், சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்தும் கடந்த சில நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வப்போது கிராமப் பகுதிக்கு வருவதும், மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் சென்று பதுங்கி கொள்வதுமாக போக்கு காட்டி வந்த சிறுத்தையின் நடமாட்டத்தினை கண்காணிப்பதற்காக, அப்பகுதியில் டிரோன் கேமராவினை பறக்க விட்டு, கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் சிறுத்தை பிடிபடும் வரை அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும், பொதுமக்கள் இயற்கை உபாதைக்காக வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகள், சிறுவர்களை தனியாக வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு வனத்துறையினர் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
- போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியவன் (33). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் மகள் சவுமியா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இனியவன் வீட்டுக்கடன் வாங்குவதற்காக, சவுமியா வேலை செய்த வங்கிக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. பின்னர் இனியவன்- சவுமியா தம்பதியர் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர்.
இந்தநிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக 6 மாதங்களுக்கு வெளியூருக்கு செல்ல வேண்டியிருப்பதால் மனைவி சவுமியாவை சேலத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் சென்று இருக்குமாறு கூறினார்.
இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து தனது தாயாரின் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சவுமியா சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த டாக்டர் இனியவன் மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அம்மாபேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை டாக்டர் இனியவன் குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு வீட்டில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி தற்கொலை செய்த நிலையில் சில நாட்களில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3406 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2257 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 257 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (38), இவர் தனது தந்தையின் சகோதரி மகளான அயோத்தியாப்பட்டனம் ராம் நகரை சேர்ந்த இந்துமதி (27) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் வேல்முருகன் (12) என்ற மகன் உள்ளார்.
திருமணம் முடிந்ததில் இருந்தே இந்து மதி அயோத்தியாப்பட்டணம் ராம்நகரில் தனக்கு தாய் கொடுத்த வீட்டில் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். 2 பேரும் கட்டிட கொத்து வேலைக்கு சென்று வந்தனர். இதற்கிடையே குடிப்பழக்கம் உள்ள சுரேசுக்கும், அவரது மனைவி இந்து மதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது . இதனால் கடந்த 8 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக சுரேஷ் , இந்து மதியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். நேற்றிரவு சுரேஷ் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் இன்று காலையும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் இந்துமதியை வயிறு உள்பட பல பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
இதில் நிலைகுலைந்த இந்துமதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையே அஙகு வந்த காரிப்பட்டி போலீசாரும், அந்த பகுதியினரும் சேர்ந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகத்தில் மூழ்கியது.
கொலை செய்யப்பட்ட இந்து மதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது. இதையொட்டி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், மனைவியின் மீதான நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக கூறி உள்ளார். இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது.
சேலம்:
கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 673 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2507 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 507 கனஅடி தண்ணீர் அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நாளை காலை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அங்கு இருந்து நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு அந்த தண்ணீர் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் இனி வரும் நாட்களில் காவிரியில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி கூடுதலாக தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 87 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 13.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- முதலில் ஆடிய சேலம் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே நெல்லை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இதனால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினர்.
இறுதியில், சேலம் அணி 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராபின் 23 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
- மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆத்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும் ஆட்டுக்குட்டியுடன் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.
இதையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
- குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 6,141 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 104.30 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,972 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5,118 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த 2 அணையில் இருந்தும் மொத்தம் விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,341 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,521 கன அடியாக அதிகரித்தது.
தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 4,197 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 41.15 அடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடியாக உயர்ந்தது. அணையில் 12.95 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.
- ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க இன்னொருபுறம் திருப்பூர் வீரர் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து கொண்டிருந்தார்.
ஆனாலும் இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இப்போட்டியில் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ப்ரதோஷ் ரஞ்சன் ஆட்டநாடகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.
முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
- விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி:
எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்க நாடு ஊராட்சி, சன்னியாசி முனியப்பன் கோவில் அருகிலுள்ள ஒடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் பழனிசாமி, விவசாயியான இவரது விவசாயத் தோட்டம் அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இவரது விவசாயத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த மாதம் 7-ந் தேதி அன்று திடீரென காணாமல் போனது.
இதனை அடுத்து பழனிசாமி தனது தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டினை தேடி சென்ற போது சற்று தூரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆடு இறந்து கிடப்பதும், அதன் உடலில் பெரும் பகுதியை மர்ம விலங்கு தின்று இருப்பதும் கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த மர்ம விலங்கின் காலடித் தடங்களை பதிவு செய்தனர். ஆட்டினை வேட்டையாடிய மர்ம விலங்கின் காலடித்தடம் சிறுத்தை காலடி தடத்தை போல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த வனத்துறையினர், அது குறித்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட உதவி வன அலுவலர் செல்வகுமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கநாடு கிராமம், கோம்பைகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்றது. பசு மாட்டின் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை கடித்துத் தின்ற நிலையில், காலையில் அப்பகுதிக்கு வந்த விவசாய மாதையன் தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு இறந்து கிடப்பதையும் அதன் உடல் பகுதியை மர்ம விலங்கு கடித்து தின்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பக்க நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டாம் எனவும், மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுவர்களை தனியாக வேளியே விட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்த ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ் ஆறுதல் கூறினார். எடப்பாடி அருகே நள்ளிரவு நேரத்தில் மீண்டும் விவசாய தோட்டத்தில் கட்டியிருந்து பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






