என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா மேற்கு கண்ணத்தான்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 71). இவர், தனது சைக்கிளில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். குப்புடையான்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீனவர் வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடை கொண்ட திருக்கை மீனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் வழக்கம் போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர்.

    அப்போது மீனவர் ஒருவர் வலையில் சுமார் 100 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் அதை கரைக்கு கொண்டு வந்தனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

    படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்கிரண் (30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 பேரும் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் 3 பேரும், மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், ராஜ்கிரண் உள்ளிட்ட 3 பேர் சென்ற விசைப்படகு மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் விசைப்படகு சேதமடைந்ததால், தண்ணீர் படகிற்குள் புகுந்தது. இதனால் சிறிது நேரத்தில் படகு கடலுக்குள் மூழ்கி விட்டது. இதையடுத்து அந்த படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

    இதையடுத்து இலங்கை கடற்படையினர், தண்ணீரில் தத்தளித்த சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய இருவரையும் மீட்டு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர். ஆனால் கடலில் தத்தளித்த ராஜ்கிரண் மட்டும் மாயமானார்.

    இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாங்கள் மீட்ட 2 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து இலங்கை அரசு, இந்திய அரசுக்கு தகவல் கொடுத்தது. இதுபற்றி தெரியவந்ததையடுத்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் மீனவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் காணாமல் போன மீனவரின் கதி என்ன? என்று தெரியாமல் மீனவர்கள் திகைத்து போய் நின்றனர்.

    இதையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காணாமல் போன மீனவரை தேடுவதற்காக கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

    இந்நிலையில் காணாமல் போன ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும், அவரின் உடலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அங்கு கொண்டு சென்றதாகவும் மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது இலங்கை அரசுக்கும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

    இலங்கை கடற்படையினர் அழைத்துச்சென்ற 2 மீனவர்கள் மற்றும் கடலில் மூழ்கி இறந்த மீனவர் உடலையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையினரால் விசைப்படகை மூழ்கடித்ததில் இறந்த மீனவர் ராஜ்கிரணுக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் தான் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடலில் மூழ்கி இறந்த ராஜ்கிரண் வீட்டிற்கு அமைச்சர் மெய்யநாதன் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட 2 மீனவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து தலா ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் 2 மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடல் தாயகம் வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என மீனவ சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    அறந்தாங்கி அருகே வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே மூக்குடி புதுதெருவை சேர்தவர் பாரதிராஜா (வயது 25). இவர் குடும்பத்தினருடன் கடந்த 15-ந் தேதி மருத்துவ சிகிச்சைகாக புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பூரோவில் இருந்த தங்க செயின், நெக்லஸ், தங்க தோடு உள்பட மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு சொந்தமான இலுப்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள லாட்ஜ், இலுப்பூர் சவுராஷ் டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் மகன் இளவரசனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் டாக்டர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வினர் என இன்று காலையிலேயே ஏராளமானோர் திரண்டனர்.

    இதனால் அந்த பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    புதுக்கோட்டை அருகே பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அடப்பன் வயல் பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது 57). இவர் காமராஜபுரம் பகுதியில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கிலி பறிப்பு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் அஜித் (21). இவர் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் பொற்க் குடையார் கோவில் அருகே உள்ள ஊற்றுக்குழி ஓரத்தில் மது அருந்தியுள்ளார். பிறகு ஊற்றுக்குழியில் குழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற அஜித் நீண்ட நேரமாகியும் வர வில்லை. அதனையடுத்து சந்தேகமடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரமாக தேடி, அஜித்தை சடலமாக மீட்டனர். பின்பு உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அகஸ்டின்ராஜ்(55). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.

    இவருக்கு பேஸ்புக்கில் லண்டனை சேர்ந்த ரூத் மங்கார என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் லண்டனிலிருந்து அவர், பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக அகஸ்டின்ராஜியிடம் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து டெல்லியிலுள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம் என தெரியாத நபர்கள் அகஸ்டின்ராஜியிடம் போன் மூலம் பேசியுள்ளனர்.

    அவ்போது அவர்கள், பரிசு பொருள் உள்ளது அதை வெளியே கொண்டு வர பணம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இதனை நம்பிய அகஸ்டின்ராஜ் உடனடியாக அகஸ்டின்ராஜ் வங்கியின் டெல்லி கிளைக்கு ரூ38 ஆயிரமும், அதனை தொடர்ந்து ரூ.99,750ம், இரண்டு முறை செலுத்தியதுடன், உத்தரபிரேதசம் கிளைக்கு ரூ.50 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளார்.

    ஆக மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் எந்த பொருளும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ராஜ் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலிசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

    ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி அருகே புதுப் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்ப்பவளக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் செல்வக்குமார் (35) இவருக்கும் கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகள் கவிதா (25) இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலையில் வயலுக்கு செல்வதாகக் கூறி சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், உறவினர், நட்பு வட்டாரங்களில் தேடியும் கவிதா கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கணவர் செல்வகுமார் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யாராவது கடத்தி இருப்பார்களா? வேறு எங்கும் சென்றிருப்பாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி, மாயமான கவிதாவை தேடிவருகின்றனர்.

    அண்டக்குளம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அண்டக்குளத்தை அடுத்த புதுக்குடியான்பட்டியை சேர்ந்தவர்கள் குமாரசாமி-சுசீலா தம்பதியின் மகள் குணவதி (2½ வயது). நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டிக்குள் அருகே குணவதி விளையாடி கொண்டிருந்தாள். இதையடுத்து அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி கிடந்தாள்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்காமல் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் பணியிடம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அதற்கான சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும், அப்போதுதான் 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு  தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. 

    எம்.எம்.அப்துல்லா எம்.பி.

    அந்தக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்குமாறு கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்காமல் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர். 

    இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் மாணவிகள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவை சந்தித்து முறையிட்டனர். உடனே கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்ட மாநிலங்களவை உறுப்பினர், மாணவிகளுக்கு தமிழ் வழி பயின்ற சான்று வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகம் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கியது. இதற்காக, மாணவிகள் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 17 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 412 ஆக உள்ளது.
    ×