என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    அடைக்கம்பட்டி கிராமத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். 5 பவுன் நகையை மீட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 வீடுகளில் நகை- பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை பாடாலூர் போலீசார் பிடிப்பதற்குள், அடைக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர். தொடர் திருட்டு சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மேற்பார்வையில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் டி.களத்தூர் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அந்த நபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர்.

    இதில் அவர் டி.களத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னார் (வயது 36) என்பதும், அவரும், அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கராஜாவும் (46) சேர்ந்து அடைக்கம்பட்டி கிராமத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பாடாலூர் போலீசர் வழக்குப்பதிவு செய்து பொன்னார், மாணிக்கராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பெரம்பலூர் அருகே தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ராயல் நகரை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவரது மகன் முஜிபுர் ரகுமான் (வயது 21). இவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு நேற்று முன்தினம் தனது தாய் மெகராஜ் நிஷாவிடம் ரூ.2 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை கருதி தற்போது சுற்றுலா செல்ல வேண்டாம் என்று முஜிபுர் ரகுமானிடம், அவரது தாய் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முஜிபுர் ரகுமான் வீட்டில் தனது அறையில் தான் கட்டியிருந்த வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 40 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 64 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பாடாலூர் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி மங்கூன் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அங்கு சென்று வள்ளியம்மையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, வள்ளியம்மை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெருநிலா கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 48). இவர் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    என்ஜினீயரிங் கல்லூரி மாணவி நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 18). தந்தை ரோவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியான இவர் நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். 

    இந்நிலையில் பிரியதர்ஷினியை ஊக்குவிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம் ரூ.10 ஆயிரமும், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி ரூ.5 ஆயிரமும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
    குன்னம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செம்பையன். இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு வசந்த்(வயது 10) என்ற மகனும், வைஷ்ணவி(8) என்ற மகளும் உண்டு.

    சில்லக்குடியில் உள்ள அரசு பள்ளியில் வசந்த் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் வைஷ்ணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வசந்த் வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று வசந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து சில்லக்குடி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் குளிக்கச் சென்றான். அங்கு குளித்தபோது நீச்சல் தெரியாத நிலையில் வசந்த் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து குன்னம் போலீசில் நந்தினி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பலூரில் இலங்கை அகதி என்பதை மறைத்து பாஸ்போர்ட் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    இலங்கையில் இருந்த அகதியாக வந்த வேலாயுதம்பிள்ளை மகன் ஸ்ரீகாந்த் ராஜா (வயது 44) என்பவர் பெரம்பலூர் இலங்கை அகதிகளில் முகாமில் தங்கி வசித்து வருகிறார். டிவி மெக்கானிக்கான இவர் 2009 -ம் ஆண்டு எறையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு 2011-ம் ஆண்டு வரை பெண் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

    அப்போது எறையூரில் தங்கியிருந்த வீட்டின் முகவரியை வைத்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பான்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ளார். இந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி தான் இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.

    இதேபோல் இலங்கையில் இருந்த அகதியாக வந்த சுப்பையா மகன் சூனிக் கண்ணன் (எ) சுதர்சன் (40) என்பவர் பெரம்பலூர் இலங்கை அகதி முகாமில் தங்கி வசித்து வந்தார். அதே முகாமைச் சேர்ந்த தவராசா மகள் மிதுனரூபி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பெரம்பலூர் பாலக்கரையில் தள்ளு வண்டியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    2011-ம் ஆண்டு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட காரணத்தினால் இலங்கை அகதிகள் முகாம் பதிவேட்டிலிருந்து இவரது பெயர் நீக்கப்பட்டு பெரம்பலூர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2011-லிருந்து 2018 வரை திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கியிருந்தார். தற்போது சுதர்சன் பார்க்கவன் தெரு, நெடுவாசல் சாலை, துறைமங்கலம், பெரம்பலூர் என்ற முகவரியில் தங்கியுள்ளார்.

    ஏற்கனவே திருச்சி பொன்மலைப்பட்டி தங்கியிருந்த வீட்டின் முகவரியை வைத்து பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றை பெரம்பலூர் முகவரிக்கு மாற்றம் செய்து அந்த ஆவணங்களை பயன்படுத்தி சுதர்சன் என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி தான் இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்துள்ளார். சூனிகண்ணன் (எ) சுதர்சன் மீது திருச்சி மாவட்டம், பொன்மலை, உப்பிலியபுரம், தாரபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இது குறித்து பெரம்பலூர் கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிந்து இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்த ஸ்ரீகாந்த்ராஜா, சுதர்சன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(வயது 40). இவர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வைத்தியலிங்கம் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் கடையில் கல்லாவில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் சாக்லெட், பால் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே இந்த மளிகை கடையில் கடந்த ஆண்டு மர்மநபர்கள் பணம், பொருட்களை திருடிச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே அவ்வையார் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் மணிகண்டன் (26) நடத்தி வரும் மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடையில் பணம் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடையில் திருட்டு நடந்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பாக்கி தொகையை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் 20-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு கூட்டுறவு சங்கங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்து வந்தது. தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகியும் பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பால் பணத்தை கூட்டுறவு சங்கங்கள் வழங்குவதில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தங்களது பசு மாடுகளுக்கு தீவனம் கூட வாங்க முடியாமலும், குடும்பம் நடத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    பால் பாக்கி தொகையை உடனடியாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கித் தொகை, ஊக்கத் தொகை, உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு பால் விற்பனை விலையை குறைத்ததால் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பாக்கி தொகை வழங்கப்படாமல் உள்ளது. அந்த பணத்தை உடனே கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு வருகிற 20-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் 20-ந்தேதி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வழங்கினர்.
    குன்னம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட்டு முகமது (வயது 51). இவர் நெல் அறுவடை செய்யும் எந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் நெல் அறுவடை எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து எறையூர், பெருமத்தூர் வழியாக வேப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. வைத்தியநாதபுரம் பிரிவு சாலையில் துணை மின் நிலையம் அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில், அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் சேட்டுமுகமதுவின் மனைவி ரகமானி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பலூரில் டீக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). இவர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து திருச்சி - சென்னை புறவழிச்சாலை செல்லும் பிரதான சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி ராணியை பிரிந்து சுமார் 15 ஆண்டுகளாக தனியாக செல்வராஜ் வாழ்ந்து வந்தார்.

    இவருக்கு கார்த்தி, கண்ணதாசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த மகனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக உறவினரிடையே ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    நேற்று காலை செல்வராஜ் கடைக்கு டீக்குடிக்க வந்தவர்கள் கடையின் கதவு பாதி திறந்தும், மீதி திறக்காமலும் இருந்ததை கண்டனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், அங்கு வந்து கடைக்குள் பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்ததாக தெரியவந்தது. பின்னர் செல்வராஜின் உடலை கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசாா் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×