என் மலர்tooltip icon

    நீலகிரி

    தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தொடர்வண்டி பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன.

    அதிக வேகத்தில் தொடர்வண்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்வண்டி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், தொடர்வண்டி எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வேகம் காட்டும் சிப்’பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    வனத்துறை அதிகாரிகளை விடுதலை செய்யும்படி தமிழக வனத்துறை உயரதிகாரிகள் கோரியும் அதை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் ஏற்கவில்லை. யானைகள் மீது தொடர்வண்டியை மோதியதற்காக கைது செய்யப்பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ஆர்.பி.எப் விடுவித்திருக்கிறது.

    இந்த மோதலை வனத்துறையினருக்கும், தொடர்வண்டி பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களும், தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள் குழுவில் இருந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.

    கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்ட விரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்.

    தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து தொடர்வண்டியின் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது.

    இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்வண்டித்துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை பெய்தது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த மழைக்கு சேரனுர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

    மஞ்சூர்- ஊட்டி சாலையில் குந்தா பாலம் அருகே 3 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதேபோல் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடியிருப்புகளுக்கருகே மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி- கோத்தகிரி சாலை மேல்கோடப்பமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெய்த மழைக்கு மரப்பேட்டை வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதேபோல் வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் வெள்ளத்தில் நனைந்தன. இதேபோல் கோவை குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

    புதுச்சேரியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
    காரைக்கால்:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், மகளிர் தின விழா காரைக்கால் வணிகர் சங்க மையத்தில் கொண்டாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, சத்தான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயமும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான உதவிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு விரைவில் உருவாக்கி செயல்படுத்தும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற விடா முயற்சி அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
    நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டராக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இந்த நிலையில் யானைகள் வழித்தட பிரச்சினை தொடர்பாக இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருந்தது.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், இவர் நீலகிரி மாவட்ட கலெக்டராகவே தொடர்ந்தார்.

    சுப்ரீம் கோர்ட்

    இந்த நிலையில் நீலகிரி கலெக்டரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு அவரை இடமாற்றம் செய்ய அனுமதி கொடுத்தது.

    இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த எஸ்.பி.அம்ரித்தை நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது.

    இதையடுத்து அவர் இன்று காலை நீலகிரி வந்தார். பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற எஸ்.பி.அம்ரித், கோப்புகளில் கையெழுத்திட்டு நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு பிறந்த இவர் 2013-ம் ஆண்டு தமிழக அரசு பணியில் சேர்ந்தார். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். மேலும் இவர் ஏற்கனவே மதுரை மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.


    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

    தமன்னா

    அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அம்மன் வேடம் கச்சிதமாக உள்ளது. புதிய படத்தில் அம்மனாக நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமன்னா தற்போது தெலுங்கில் 4 படங்களிலும், இந்தியில் 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
    தொடர் மழை காரணமாக ஊட்டி பஸ் நிலையம் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்து, பகல் நேரங்களில் கடுமை யான குளிர் நிலவி வந்தது. அவ்வப்போது இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துனேயே காணப்பட்டது. மாலையில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. குன்னூர், அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.

    இரவில் தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழையால் குன்னூர் மார்க்கெட் சாலை, பஸ் நிலைய சாலை, வண்டிச்சோலை சாலை, அருவங்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இந்த மழையால் சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலக சாலை, ரோஜா பூங்கா சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி பஸ் நிலையம் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் முறிந்து விழுந்த போது வாகனங்கள் மரம் விழுந்த இடத்தில்வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவை மாநகர் பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். ஒரு சிலர் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு பஸ் நிறுத்தம் மற்றும் சாலையோர கடைகளுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த மழை காரணமாக தாழ்வான பகுதி, சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. கோவை- அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. இதேபோல் புறநகர் பகுதிகளான கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 


    நிலநடுக்கம் காரணமாக சிட்டகாங் மட்டுமின்றி இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. 

    வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து 174 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சிட்டகாங் மட்டுமின்றி இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. கொல்கத்தா, கவுகாத்தியில் 30 வினாடிகள் வரை அதிர்வு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
    கர்நாடகாவில் இருந்து கூடலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனையானது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து கூடலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

    மயங்க் அகர்வால் 13 பந்தில் வெளியேறினாலும், ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால், ஷுப்மான கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒருபக்கம் புஜாரா நிலைத்து நிற்க, மறுபக்கம் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 81 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

    ஷுப்மான் கில் 87 பந்தில் 52 ரன்களும், புஜாரா 61 பந்தில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, நெலாக்கோட்டை, கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்பட எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனத்துறையினர் அவ்வப்போது வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவர மற்றும் மாமிச உண்ணி வனவிலங்குகளின் கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீட்டுப் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் வனசரகர்கள், வன காவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலரும் ஈடுபட்டனர்.

    முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, நெலாக்கோட்டை, கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் நேரடி காட்சிகள், கால்தடங்கள், விலங்குகளின் எச்சங்கள், நகக்கீறல்கள், தாவர மற்றும் மாமிச உண்ணிகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்டவைகளின் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

    சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட உள்ளது. இன்று தொடங்கியுள்ள கணக்கெடுப்பு பணி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    உள்வட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் வருகிற 1-ந் தேதி முதல் முதுமலை வெளிவட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    முன்னதாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடக்கூடிய வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கணக்கெடுத்தல் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தடயங்கள் சேகரித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரத்துக்கும் மேலாக நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் தெங்குமரகடா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் அணையில் 104 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி ஆற்றில் அதிகபட்சமாக 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 104 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடியும், பவானி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.
    கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ×