search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உட்லண்ட்ஸ் சாலையில் ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    உட்லண்ட்ஸ் சாலையில் ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    கோவை, நீலகிரியில் கனமழை: ஊட்டியில் ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது - வாகன ஓட்டிகள் அவதி

    தொடர் மழை காரணமாக ஊட்டி பஸ் நிலையம் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்து, பகல் நேரங்களில் கடுமை யான குளிர் நிலவி வந்தது. அவ்வப்போது இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துனேயே காணப்பட்டது. மாலையில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. குன்னூர், அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.

    இரவில் தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழையால் குன்னூர் மார்க்கெட் சாலை, பஸ் நிலைய சாலை, வண்டிச்சோலை சாலை, அருவங்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இந்த மழையால் சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலக சாலை, ரோஜா பூங்கா சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி பஸ் நிலையம் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் முறிந்து விழுந்த போது வாகனங்கள் மரம் விழுந்த இடத்தில்வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவை மாநகர் பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். ஒரு சிலர் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு பஸ் நிறுத்தம் மற்றும் சாலையோர கடைகளுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த மழை காரணமாக தாழ்வான பகுதி, சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. கோவை- அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. இதேபோல் புறநகர் பகுதிகளான கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 


    Next Story
    ×