என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருக்குவளையில் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    பரமக்குடி ஆரியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் இருளன்சேதுபதி (வயது 19). இவர் திருக்குவளையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து இருளன்சேதுபதி மற்றும் அவரது நண்பர்களான நவீன்வரதன், கவுசிக்ராஜன், நிஷாந்த், கோகுல்ராஜன், கோகுல் ஆகியோருடன் திருக்குவளையில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கு உள்ள குளத்தில் நவீன்வரதன், கவுசிக்ராஜன், இருளன்சேதுபதி ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது திடீரென இருளன்சேதுபதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி இருளன் சேதுபதியின் உடலை மீட்டனர்.

    பின்னர் உடலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பனியன் மற்றும் ஜவுளி தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வு பிரச்சினையை தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நாளை நடக்கிறது.

    இதுகுறித்து டீமா தலைவர் முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பனியன் மற்றும் ஜவுளி தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக முன்பு ஒப்பந்தம் செய்துள்ள ஆர்டர்களை தற்போதைய விலையேற்றத்தால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    மேலும் புதிய ஒப்பந்தம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சு பதுக்கல், அதிகப்படியாக ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு மத்திய அரசால் 12 சதவீதம் வரி விதிப்பு போன்றவைகளால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதை களைய, திருப்பூர் சார்ந்த அனைத்து தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வியாபார அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மக்கள் சார்பாக அவசர ஆலோசனைக்கூட்டம் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் காயத்திரி ஓட்டலில் நடக்கிறது. 

    இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி நாகை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    வெளிப்பாளையம்:

    தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் இருந்து கல்லூரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் இந்த பருவத்திற்கான பாடத்திட்டங்களை இன்னும் முடிக்கவில்லை. எனவே முறையான பயிற்சி இல்லாமல் நேரடி தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதம் குறையும்.

    மாணவர்கள் நலன் கருதி நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவ, மாணவிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி நாகையில் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுனந்தா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் நாகை செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் பணியின் நேரத்தை மாற்ற வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும்.

    தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, காழ்ப்புணர்ச்சியோடு சமூக விரோதிகளின் தாக்குதல் நடைபெறுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பூசி முகாம்களை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றி, சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன.
    புதுடெல்லி:

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளை பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

    40 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்த சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கியது. மேலும் பல விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. இதில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 3 வேளாண் சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுப்ரீம் கோர்ட்


    வேளாண் சட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளால் இடையூறு ஏற்படுவதாக பொது நல வழக்குகளும் தொடரப்பட்டன.

    ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் உயிரிழந்தும் உள்ளனர். இதற்கிடையேதான் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.

    அப்போது அவர் கூறும் போது, “விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு அதைப்பற்றி விளக்க முடியவில்லை. வேளாண் சட்ட முக்கியத்துவத்தை விளக்குவதற்கு எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

    மோடியின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்று உள்ளன. ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர். பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், அதுவரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதற்கிடையே விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கோரி அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்று விவசாய சங்கம் அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து 40 சங்கங்கள் இணைந்த அமைப்பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா கூறும்போது, “கருப்பு சட்டங்களான வேளாண் திட்ட மசோதாக்களை ரத்து செய்வதற்காக மட்டும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தவில்லை. அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.

    அதேபோல மின்சார திருத்த மசோதா வாபஸ் பெற வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சார்பில் விரைவில் கூட்டம் நடத்தப்படும். இதில் எங்களின் அடுத்தக்கட்ட முடிவை தெரிவிப்போம்” என்று தெரிவித்து உள்ளது.

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன. போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து உள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து உள்ளன. தற்போது விவசாயிகள் கோரி வந்த 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு அடுத்தக்கட்டமாக குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் தங்களது போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது சுமூகமான முடிவுக்கு வருவதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு கீழே இறங்கி வந்தநிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடாமல் பிடிவாதம் காட்டி வருகிறார்கள். இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கையில் இறங்குகிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனை செய்யும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 

    அந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் உண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆட்டோ பிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கிறது. ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிரத்யேக பி.இ.வி. ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

    இந்த எஸ்.யு.வி. 58 கிலோவாட் ஹவர் அல்லது 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    நாகூரில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகூர் பாலத்தடி அருகில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் வகையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் 1 கிலோ கஞ்சா இருந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் வேந்தன் (வயது 30) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேந்தனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகை தர உள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருப்பூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் அலுவலக திறப்புவிழா வருகிற 24-ந்தேதி தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

    பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருப்பூர் வருகை தர உள்ளார். இதற்காக விழா மேடை அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. 

    பூமி பூஜையில் கேரள மாநில பா.ஜ.க. பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். 

    மாவட்டதலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, நாச்சிமுத்து, மாவட்ட பொதுசெயலாளர்கள் கே.சி.எம்.பி சீனிவாசன், கதிர்வேல், காடேஸ்வரா எஸ்.தங்கராஜ் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
    நாகை, வேதாரண்யத்தில் பெய்த பரவலான மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி உள்பட பல பகுதிகள் உள்ளன. நாைக மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வயல்களில் தேங்கி நின்ற தண்ணீர் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது. மேலும் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர்.

    கீழ்வேளூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மீண்டும் கனமழை பெய்ய தொடங்கினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நாகை மாவட்டம் நாகூரில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    கோவையில் உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர் கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.

    இந்தநிலையில் அந்த பெண் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தார்.

    வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த அந்த பெண்ணின் 60 வயது கணவர், மதியம் வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் வெகுநேரமாக தட்டி பார்த்தார். கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு அந்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    நாகை கடற்கரையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் நாகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    நாகை நகரில் பொழுதுபோக்கு அம்சமாக கலங்கரை விளக்கம் மற்றும் புதிய கடற்கரை மட்டுமே உள்ளது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை கடற்கரை சிதிலமடைந்தது. இதை தொடர்ந்து நாகை புதிய கடற்கரை மீண்டும் புதுபொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில் பாராசூட் பயிற்சி, படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடை பயிற்சி மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதனால் அங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கடற்கரையில் காற்று வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமர முடியாத நிலையில் உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்ததொடர் மழையின் காரணமாக புதிய கடற்கரையில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது.

    உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை சுற்றி மழைநீர் சிறிய குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் தினந்தோரும் புதிய கடற்கரைக்கு வந்து உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து நாகை தொகுதி மக்கள் கூறியதாவது:-

    நாகை பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக புதிய கடற்கரை உள்ளது நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு சென்று இளைப்பாறுவதும், நடைபயிற்சி மேற்கொள்ளவதுமக பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    நாகை புதிய கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர்களின் நலனுக்காக புதிய கடற்கரையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தை மேடாக்கி, மீண்டும் மழை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கல்லூரி முதல்வர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×