என் மலர்
கிருஷ்ணகிரி
தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது. அதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.
அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 9 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். தமிழகத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் பதுங்கி உள்ளார் என்ற தகவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதியில் உள்ள ரிசார்ட், சொகுசு விடுதிகள் அதேபோல பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் உள்ளாரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஓசூர்:
தமிழகத்தில் ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கர்நாடக- தமிழக மாநில எல்லைகளில் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு, சுகாதாரத் துறையினர் உடல் வெப்பநிலை பரிசோதனையையும் மேற் கொண்டனர்.
இந்த நிலையில், ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி, நேற்று மாநில எல்லையில், இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
மாநில எல்லையில் வாகன ஓட்டிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வாகன ஓட்டிகள், பயணிகள், பஸ்களில் பயணிப்பவர்கள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையொட்டி, எல்லையிலேயே தடுப்பூசி முகாம்கள் அமைத்து, தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், மாநில எல்லையில் வாகன போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பாத்தகோட்டா பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு மேற்கு வங்காளம் ஜால்பைகுரி பகுதியை சேர்ந்த சம்பு தண்டி (வயது 37) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜிபு (27) என்ற வாலிபரும் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கல்குவாரியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து சமையல் செய்து வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஜிபு அடிக்கடி மது குடித்து விட்டு சம்பு தண்டியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு சம்பு தண்டி, அறையில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் தள்ளாடியப்படி ஜிபு வந்தார். திடீரென அவர், சம்பு தண்டியின் சாப்பாட்டு தட்டை காலால் எட்டி உதைத்தார். மேலும் சமம்பு தண்டியையும் திடீரென தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சம்பு தண்டி, அருகே கிடந்த காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து ஜிபுவை குத்தினார். இதில் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் அடைந்த ஜிபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து வந்தனர். கொலையுண்ட ஜிபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பு தண்டியை , கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் தகராறு செய்த அசாம் வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






