என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது.
    • விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு இரும்பு தடுப்பு அமைக்கும் பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலீம் (19), மற்றும் விராய்பூர் கிராமத்தை சேர்ந்த அனிக்குல் (20) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. இதில் கார் வேலை செய்து கொண்டிருந்த அப்துல் அலீம், அனிக்குல் ஆகியோர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் அலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அனிக்குல் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அப்துல் அலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அனிக்குல்லை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.
    • பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

    காஞ்சிபுரம் புடவையின் வலிமையும் மகத்துவமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

    தரமான அசல் பட்டுச் சேலைகளை வாங்க வேண்டும் என விரும்பி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல் வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.

    மற்ற மாவட்டங்களில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுவதாகவும் இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன. இதனால்,போலிகளை கண்டறிவதில், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமம் ஏற்படுகிறது என்றும் பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டு விற்பனை கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி துணி நூல்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளில் அசல் ஜரிகையைக் கொண்டு நெசவாளர்கள் தரமாக நெய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் சில தனியார் பட்டு விற்பனைக் கடைகளில் ஒரிஜினல் போன்று வடிவமைப்பைக் காட்டி தரத்தைக் குறைத்து பட்டுகள் விற்பனை செய்து விடுகின்றனர்.

    மேலும் காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகன பதிவு எண்ணை குறி வைத்து இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களில் பின் தொடர்ந்து டிரைவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் கடைகளுக்கு திசை திருப்பி விடுகின்றனர்.

    அங்கும் அசல் காஞ்சிபுரம் சேலைகள் விற்கப்படுவதில்லை என்பதால் போலியான பட்டுகளை வாங்கி பொதுமக்கள் ஏமாந்து செல்லும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் அதிரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரத்துக்கு நம்பி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை காணப்படுகிறது.

    இடைத்தரகர்களால் காஞ்சிபுரம் பட்டின் தரமும் மதிப்பும் சிதைத்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அண்ணா, முருகன், காமாட்சியம்மன் உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரத்தில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக பட்டுச் சேலை நெய்து தந்து வருகிறோம். தற்போது அறிஞர் அண்ணா, முருகன், காமாட்சியம்மன், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் அசல் ஜரிகையைக் கொண்டு, தரமான பட்டுச் சேலைகளுக்கு வடிவமைப்பு தந்து, அவற்றை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொடுக்கிறோம்.

    மேலும் தரத்துக்கேற்ப அரசால் விலை நிர்ணையிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இடைத்தரகர்களால் நீண்ட தொலைவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பட்டு சேலை வாங்க வரும் மக்கள் அசல் காஞ்சிபட்டு என நம்பி போலி பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பட்டு சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும். இதேபோல் இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் பட்டு சேலை என கூறி, வெளியூர் சேலைகளை விற்கின்றனர். அவை பட்டு சேலையே கிடையாது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த, சாதாரண சேலைகளை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, மோசடியாக விற்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறார்கள். சில சமயங்களில் தாக்குகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமார் அளித்த காசோலையை சரவணன் வங்கியில் செலுத்திய நிலையில் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது.
    • குமார் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரிடம் காஞ்சிபுரம் மாமல்லன் நகர் கே.டி.எஸ் மணி தெருவில் வசித்து வந்த குமார் (வயது 45) என்பவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு 24 சதவீத வட்டிக்கு ரூ.35 லட்சம் கடனாக பெற்று உள்ளார். கடன் தொகையை சரவணன் பலமுறை குமாரிடம் கேட்டும் திருப்பி அளிக்காமல் இழுத்தடித்துள்ளார்.

    மேலும் கடன் தொகை ரூ.35 லட்சம் மற்றும் அதற்கு உண்டான வட்டி என ரூ.45 லட்சத்திற்கு குமார் கடந்த 2014-ம் ஆண்டு வங்கி காசோலையாக அளித்து உள்ளார்.

    குமார் அளித்த காசோலையை சரவணன் வங்கியில் செலுத்திய நிலையில் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து சரவணன் வாங்கிய கடனுக்கு வங்கியில் பணம் இல்லாமல் குமார் காசோலை கொடுத்து மோசடி செய்ததாக கூறி காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். காசோலை மோசடி வழக்கு தீர விசாரிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு காசோலை கொடுத்து ஏமாற்றிய குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.90 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குமார் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தலை மறைவாக இருந்த நிலையில் சரவணன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடுத்ததன் அடிப்படையில் குமாரை கைது செய்ய கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குமாரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து, குமார் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் தொடங்க தாமதமானது.

    கூட்டத்துக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்க தாமதமானதால் அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதற்கு பதிலடியாக தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்த்து கோஷமிட்டனர்.

    அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மணிப்பூர் சம்பந்தமான வீடியோவை மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டது ஏன்? என்று பெண்கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் நகரில், வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாமை எழிலரசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது, வட்டாட்சியர் புவனேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, திருட்டுத்தனமாக மது விற்பவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருட்டுத்தனமாக அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக இதுவரை 1,196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,204 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 110 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 2 ஆதாய கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்குகள், 23 வீடு புகுந்து திருடுதல் வழக்குகள் மற்றும் 65 திருட்டு வழக்குகள் என மொத்தம் 100 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் களவுபோன சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 224 என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 வழக்குகள் தவிர மற்ற 81 வழக்குகள் துரிதமாக அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 46 லட்சத்து 1,324 மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 20 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.23,55,448 பணம் மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    • அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோரின் உத்தரவின் படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 31 வாகனங்களை கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வாகனங்களுக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து இதுபோன்று மீண்டும் அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது, சாலைகளில் பக்கவாட்டில் வட்டமாக பொருத்தப்பட்டிருக்கும் போக்குவரத்து சின்னத்தில் குறிப்பிடப்பட்ட வேக அளவில்தான் அந்தந்த பகுதியில் செல்லவேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

    மேலும் தணிக்கையின் போது பெரும்பாலான டிரைவர்கள் தாங்கள் சரியான வேகத்தில் தான் வந்தோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரேடாரின் வேக புகைப்படத்தை பார்த்த பின்னர்தான் தம் தவறை உணர்ந்து, இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று உறுதி எடுத்து சென்றார்கள் என்றார்.

    • பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் டே பை டே என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ். இவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த நிதி நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    இதில் ரூ.1லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் தினமும் ரூ.1500 பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும்,அந்த முதலீட்டா ளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்டுகளுக்கு தினமும் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். மேலும் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். போட்டி போட்டு முதலீட்டாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இந்த நிறுவனத்தில் பொது மக்கள் சுமார் ரூ.24 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை பணம் திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தையே காலி செய்துவிட்டு இயக்குனர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ் தலைமறைவாகிவிட்டனர்.

    இதனால் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.மேலும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான வாசுதேவன் மற்றும் சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த வாசுதேவனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.அதே போல் சுரேஷ் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பனபாக்கத்திற்கு சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக வேகவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தாயார் குளம் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டுக்கு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜே.சி.பி. மூலம் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.

    அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக்கின் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 24). இவர்களுக்க திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கஸ்தூரியை பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனர். நேற்று மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் கஸ்தூரியின் உடல் நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதனை கேட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கற்பகம். இவர்கள் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஹேமலதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஹேமலதாவின் பெற்றோர் அவரை ஒழுங்காக படித்து நல்ல மதிப்பெண் எடுக்குமாறு அறிவுரை கூறி கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ஹேமலதா பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் ஹேமலதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், மாணவி ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை.
    • சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் வேனில் பணிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் வேலைக்காக வேனில் சென்றனர். வேனை டிரைவர் சிவானந்தம் என்பவர் ஓட்டினார். சாலவாக்கம் அருகே பொற்பந்தல் ஏரிக்கரையோரம் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

    ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மற்றும் கிராமமக்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேரை பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்த வேகத்தில் தொழிலாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏரிக்கரையோரத்தில் வேன் கவிழ்ந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. குறைந்த அளவு தண்ணீரே அங்கு இருந்தது. ஆனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. கரையோரத்தை தாண்டி கூடுதல் தூரத்தில் வேன் பாய்ந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

    தற்போது அதிர்ஷ்டவசமாக அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×