என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே கார் மோதி தொழிலாளி பலி
- சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது.
- விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு இரும்பு தடுப்பு அமைக்கும் பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலீம் (19), மற்றும் விராய்பூர் கிராமத்தை சேர்ந்த அனிக்குல் (20) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. இதில் கார் வேலை செய்து கொண்டிருந்த அப்துல் அலீம், அனிக்குல் ஆகியோர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் அலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அனிக்குல் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அப்துல் அலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அனிக்குல்லை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






