என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய போது மலேசிய பயணி திடீரென மயங்கி விழுந்து பலியானார். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசியாவுக்கு இன்று அதிகாலை விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்வதற்காக மலேசியாவைச் சேர்ந்த கப்பல் என்ஜினீயர் நூர்பின்பார் (54) என்பவர் வந்தார். அவர் விமானத்தில் ஏறிய போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் மஞ்சள் காமாலை நோய்க்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். இன்று காலை அவர் சொந்த நாட்டுக்கு திரும்ப விமானத்தில் ஏறியபோது இறந்து விட்டார். #ChennaiAirport
    பரங்கிமலையில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் கருணாநிதி. இவர் கடந்த 13-ந்தேதி போலீஸ் ரோந்து மோட்டார் சைக்கிளில் பரங்கிமலை ரெயில் நிலையம் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயிலில் சென்றார்.

    இரவு திரும்பி வந்த போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. ஆதம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகிறார்கள்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 6½ கிலோ தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirPort
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் 6½ கிலோ தங்க கட்டி கேட்பாரற்று கிடந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    இந்த விமானம் துபாயில் இருந்து டெல்லி வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது. எனவே துபாயில் இருந்து வந்த பயணிகள் யாரேனும் தங்கத்தை கடத்தி வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விமானத்திலேயே தங்க கட்டியை மறைத்து வைத்து தப்பி சென்று உள்ளனர்.

    இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். #ChennaiAirPort
    வாடகை பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்த திரும்பிய வியாபாரி மரணமடைந்ததை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தாவை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்து உள்ளனர்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்து இருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ரகுநாதன் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “நான் வாடகை பாக்கி வைத்திருந்ததால் கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகுவின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு வந்து என்னை மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகுநாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ரகுநாதனின் மனைவி தேவி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    பள்ளிக்கரணை அருகே வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கரணை:

    பள்ளிக்கரணையை அடுத்த ஜல்லடையான் பேட்டையை சேர்ந்தவர் அரவிந்தன். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிதம்பரம் சென்றார்.

    இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த 13 பவுன் தங்கநகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் பாமாயிலை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன், மக்கான் தெருவில் உள்ள வீட்டில் ரே‌ஷன் அரிசி, பாமாயில் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தாசில்தார் பாக்யலட்சுமி, வட்ட வழங்கல் அலுவர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சகிலா என்பவரது வீட்டில் 3 டன் ரே‌ஷன் அரிசி, 65 பாமாயில் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்ததும் சகிலா தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட பாமாயில் பாக்கெட்டுகள் எந்த ரே‌ஷன் கடையில் வாங்கப்பட்டது.இதில் தொடர்புடைய ரே‌ஷன் கடை ஊழியர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். #tamilnews
    ராமாபுரத்தில் மாநகராட்சி கழிவறை மேற்கூரை உடைந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம் பாரதி சாலையில் மாநகராட்சி அலுவலகம் அருகில் இலவச பொது கழிப்பிடம் உள்ளது.

    இன்று காலை 7.30மணி அளவில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் கழிவறையின் மேலிருந்த மேற்கூரை இடிந்து மேலே இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியும் உடைந்து கிடந்ததை பார்த்தனர்.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது கழிவறை உள்ளே 65வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    விசாரணையில் நேற்று மாலையே விபத்து நடந்திருக்கலாம் என்றும் இறந்த முதியவர் ராமாபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நாடு என்கிற ராமலிங்கம் என்பதும் தெரியவந்தது.

    மாமல்லபுரம் அருகே கட்டுமான நிறுவன ஊழியர் கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    மாமல்லபுரம்:

    நெய்வேலியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 24). சென்னை ஓரகடத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    மாமல்லபுரம் அடுத்த திருவிருடந்தை சவுக்கு தோப்பு பகுதியில் கடந்த மாதம் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை தொடர்பாக பாண்டிச்சேரியை சேர்ந்த சிவசங்கரன், மதியரசன், முகிலன், மோகன்ராஜ், ஆகிய 4பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    இவர்களின் கூட்டாளியான ஜெயராமனை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். ஜெயராமன் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்துவரும் அருண் பிரகாசின் அக்காள் சுந்தரவள்ளி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் அதே பகுதியை மோகன்ராஜிக்கும் காதல் ஏற்பட்டு கணவன் மனைவியாக வாழ்ந்தனர். நாளடைவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

    பின்னர் சுந்தரவள்ளி தனது மகள்களுக்கு மோகன்ராஜ் பாலியல் தொந்தரவு செய்ததாக ரெட்டியார் பாளையம் போலீசில் பொய் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்து காலாபேட்டை சிறையில் அடைத்தனர்.

    இதற்கு முழு காரணமாக செயல்பட்டது அருண்பிரகாஷ் என்பது தெரிந்தது. ஒரு மாதம் கழித்து ஜெயில் இருந்து மோகன்ராஜ் வெளியே வந்ததும், அருண்பிரகாசை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    இதற்காக ஒரக்கடத்தில் இருந்த அருண்பிரகாசை சமாதானம் பேசுவதற்காக கோவளம் வர வைத்தோம். அவர் வந்ததும் மது அருந்தியே பேசலாம் என திருவிடந்தை சவுக்கு தோப்புக்குள் அழைத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.

    பின்னர் நாங்கள் 4 பேர் அருண்பிரகாஷின் கை கால்களை பிடித்தோம். சிவசங்கரன் அருகே கிடந்த பாறாங்கல்லை தூக்கி அருண் பிரகாசின் முகத்தை போட்டான். இதில்அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இவ்வாறு ஜெயராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport #GoldSeized
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானம் மீண்டும் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி செல்ல தயாராக இருந்தது.

    அந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, இருக்கையின் அடியில் 6 தங்க கட்டிகள் கொண்ட பார்சல் இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் இருந்த ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மும்தாஜ் பேகம்(வயது 41) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைத்து இருந்த ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 224 கிராம் கொண்ட 3 தங்க சங்கிலிகளை கைப்பற்றினார்கள்.

    மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த அலி நூர்முகமது (47) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த பர்சில் இருந்து 3 சிறிய தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர். ரூ.7 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நாதன்(40) என்பவரின் உடைமைகளில் இருந்து 2 தங்க கம்பிகள், 19 தங்க மோதிரம், 1 தங்க செயின், 6 தங்க மீன் டாலர்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 312 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த விநாயகம்(40) என்பவர் உடைமைகளில் வைத்திருந்த காலணியில் 2 தங்க கம்பிகள், 21 தங்க மோதிரங்கள், 6 தங்க மீன் டாலர்கள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 207 தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.50 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 563 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். #ChennaiAirport #GoldSeized 
    விருகம்பாக்கத்தில் ரூ.20 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பெங்களூரைச் சேர்ந்தவர் அருண்குமார். கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் இருவரும் சென்னை விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார் திரும்பி வரவில்லை. இதுகுறித்து மனைவி பத்மாவதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    நானும் எனது கணவர் அருண்குமாரும் 2நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தோம். நேற்று மாலை கணவர் அருண்குமார் வெளியே சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கணவரின் நண்பரான சத்தியநாராயணா என்னை செல்போனில் தொடர்பு கொண்டு “உன் கணவர் எனக்கு 20 லட்சம் பணம் தரவேண்டும். அப்படி தரவில்லை என்றால் உன் கணவரை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே எனது கணவரை மீட்டு தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GutkhaScam

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஓரகடம் கூட்டு சாலையில் ஒரகடம் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு மினி லோடு வேனை மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தன. அதில் இருந்த 18 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் எடை 350 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.

    இந்த குட்காவை கடத்தி வந்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். குட்கா மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

    இந்த குட்கா மூட்டைகள் ஓசூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. #GutkhaScam

    செங்கல்பட்டை அடுத்த ஒத்திவாக்கம்- திருமணி இடையே சென்னை வரும் மார்க்க தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ஒத்திவாக்கம்- திருமணி இடையே சென்னை வரும் மார்க்க தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை பணியில் இருந்த ரெயில்வே ‘கேங்மேன்’ பார்த்து அதிகாரிகளுக்கு தகவல்கொடுத்தார்.

    இதனால் உஷாரான அதிகாரிகள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில்களை ஆங்காங்கே நிறுத்த உத்தரவிட்டனர். இதன் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டது. காரைக்குடியில் இருந்து வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் அச்சரப்பாக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். அதன் பின் ரெயில்கள் சென்னை புறப்பட்டு வந்தன. இதன் காரணமாக திருச்செந்தூர் ரெயில் 1 மணி நேரம் தாமதமாகவும், பல்லவன் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாகவும் செங்கல்பட்டு வந்தன. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தண்டவாளத்தில் விரிசல் எற்பட்டது. நாசவேலை எதுவும் காரணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×