என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57), காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் தேரடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்தினவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர்.
    • காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கலைசெல்வி மோகன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். இதில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி தாசில்தார் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 13 லட்சத்து 24 ஆயிரத்து 581 வாக்களர்கள் உள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் தொகுதியில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 758 வாக்களார்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 615 பேர், பெண்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 86 பேர், மாற்றுபாலினத்தவர்கள் 57 பேர் உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர். உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள் 127960 பேர், பெண்கள்137595 பேர், மாற்று பாலினத்தவர்கள் 43 பேர் என மொத்தம் 2,65,598 பேரும், காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.

    • தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது.
    • வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் தங்கம் கடத்தல் குறையவில்லை. மேலும் தங்கம் கடத்தலுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய இடமாக மாறி வந்தது.

    இந்த நிலையில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலர் உதவி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வரும் சீனிவாசன் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் சோதனை நடத்தினர். அவர், தனது உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 3.70 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் கும்பலிடம் சென்னை விமான நிலையத்துக்குள் சீனிவாசன் தங்க கட்டிகளை வாங்கி அதனை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்து உதவி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும்.

    மேலும் இந்த தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சீனிவாசன், தினகரன் எந்தெந்த தங்கம் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தனர், அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து சென்றவர்கள் யார்? அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேறு எந்த ஊழியர்களும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை, பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது27). ஏ.சி.மெக்கானிக். இவர் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் வேலையை முடித்துவிட்டு குருவிமலையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் ஓரிக்கை, பாலாற்று மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே தேனம்பாக்கம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன்கள் ஆனந்தன் (50) மற்றும் தாமரை குளம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (17) எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    திடீரென மூர்த்தி மற்றும் ஆனந்தன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்சு மூலம் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தியும் இறந்து போனார். சதீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஓரிக்கை பாலாற்று மேம்பாலத்தில் வாகனங்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றி அதிவேகமாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலத்தில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
    • விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்பட சுற்றி உள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவும் அமைக்கப்பட்டு போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் அக்குழுவைச் சேர்ந்த 15 பேர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்தனர்.

    அப்போது விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரந்தூரில் பழமையான கட்டிடமாக இருந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் இடித்த கட்டிடத்தை திருப்பி கட்டி தர வேண்டும். நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும். விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அதிகாலை முதலே காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது.
    • தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஏராளமானோர் குவிந்தனர்.

    அதிகாலை முதலே காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்பட்டு வரும் மீன், இறைச்சி கடைகளில் கடந்த 5 வாரங்களாக விற்பனை குறைவாக நடந்த நிலையில் இன்று வழக்கம் போல் விற்பனை சூடுபிடித்தது.

    இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.
    • சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ரோஜா ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
    • கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    சென்னை:

    சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மற்றும் அக்டோபர் 2-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக அந்த ஊர் முழுவதும் நோட்டீசுகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை கிராமசபை கூட்டம் தொடங்கியது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    • மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.
    • முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒலி முகமது பேட்டையில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இ-டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரியும் கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களையும் எழுப்பினர்.

    போராட்டத்தினை ஆர். மதியழகன் தலைமையேற்று நடத்தினார். கோட்டி மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், கோட்டி காஞ்சிபுரம் செயலாளர் படவேட்டான், கோட்டி திட்ட பொறுப்பாளர் பி. கேசவன், திட்டத் துணைத் தலைவர் ஆர். பாபு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் ஸ்ரீதர், ஒப்பந்த ஊழியர் சி.கலைமணி மற்றும் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.
    • வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    மீனம்பாக்கம்:

    உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் சர்வதேச வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    சென்னை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் வாயிலாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 450 விமான சேவைகள் கையாளப்படுகின்றன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் செயற்கைகோள் வாயிலாக கடல் மேல் செல்லும் விமானங்களை கண்காணிப்பதற்கான நவீன தொழில் நுட்பங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதே போல தென் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் அடி முதல் 46 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் விமானங்களில் உள்ள விமானிகளுடன் தொடர்பு கொள்ள அதி உயர அலைவரிசை தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் 1500 விமானங்கள் கையாளப்படும். விமானங்கள் தடையில்லாமல் வானில் பறக்க, தரையிறங்க, ஓடுபாதைக்கு செல்ல, வானில் ஒரு விமானத்துடன் மற்றொரு விமானம் மோதாமல் இருக்க செய்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் பணி ஆகும். எந்தொரு பயணிக்கும் பாதிப்பு இல்லாமல் விமான பயணத்தை மேற்கொள்ள தரையில் இருந்து கையாளும் பணியை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
    • முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் துணை ஆணையராக பணி புரிந்து வந்த செந்தில்முருகனை காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

    இதன் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 3-வது ஆணையராக செந்தில் முருகன் மாநராட்சி ஆணையரக அலுவலகத்தில் நேற்று முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்றார். முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.
    • கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் காதி மகோற்சவம் என்ற பெயரில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி காஞ்சிபுரம், பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதனை எழிலரசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார். கைத்தறி அலு வலர் எம்.நாகராஜன், தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காண்காட்சியில் கடலூர், கரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி, பரமக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைத்தறி நெசவாளர்கள் தங்களது பொருட்களை அரங்குகளில் வைத்திருந்தனர். கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள், கதர்வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள், மூலிகை மற்றும் பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தனர். இந்த கைத்தறி கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறஉள்ளது. இது குறித்து சேவைமைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறும்போது, இந்தியா முழுவதும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கண்காட்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் திருச்செங்கோடு, காஞ்சி புரம், திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன என்றார்.

    ×