என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 1,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 61 ஆயிரத்து 408 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கடந்த மாதம் 19-ந்தேதியும், 65 வயது ஆண் 25-ந்தேதியும், 85 வயது முதியவர், 55 வயது ஆண் ஆகியோர் 30-ந்தேதியும், 67 வயது முதியவர் 31-ந்தேதியும் இறந்தனர்.

    மேலும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்து 70 வயது மூதாட்டி கடந்த 1-ந் தேதியும், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 389 ஆக உயர்ந்தது.

    அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,565 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 932 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

    இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    வட்டார மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முத்தழகியை கைது செய்தார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையத்தில் மருந்துக்கடை நடத்தி வருபவர் முத்தழகி (வயது 51). இவர் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரை வழங்குவது மற்றும் ஊசி போடுவது உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்து வருவதாக கலெக்டர் கதிரவனுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் காட்டுப்பாளையத்துக்கு சென்று முத்தழகியிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முத்தழகியின் வீட்டில் ஊசி போடுவதற்கு தேவையான மருந்துகள், ஊசிகள், கையுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்தியூர் அருகே உள்ள மூக்கம்பாளையத்தை சேர்ந்த முத்தழகி 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் உதவியாளராக வேலை பார்த்த அனுபவத்தில் பொதுமக்களுக்கு ஊசி போட்டுவந்ததும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முத்தழகியை கைது செய்தார்கள்.
    முதியோர் இல்லத்தில் கொரோனா பரவலை அடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு இளைஞர்கள், முதியவர்கள், முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உயிரிழந்து உள்ளனர்.

    இந்நிலையில் ஈரோடு திண்டலில் லிட்டில் சிஸ்டர் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து 76 முதியோர் தங்கியுள்ளனர். முதியோர்கள் தங்குவதற்கு தனித்தனி அறைகள் உள்ளன.

    இந்நிலையில் இங்கு தங்கியுள்ள முதியவர்களில் ஒரு சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 76 முதியோர்களுக்கும்  கொரோனா பரிசோதனை   செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தது. இதில் 40 முதியோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 36 முதியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    முதியோர் இல்லத்தில் கொரோனா பரவலை அடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.


    தலைமை ஆசிரியை கே.சுமதி ஆலோசனையின் பேரில், சத்துணவு அமைப்பாளர் நிர்மலா மாணவ- மாணவிகளின் பெற்றோரிடம் சத்துணவு முட்டைகளை வழங்கினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசின் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி நேற்று முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அனுமதிக்கப்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டன.

    ஈரோடு எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று முட்டைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை கே.சுமதி ஆலோசனையின் பேரில், சத்துணவு அமைப்பாளர் நிர்மலா மாணவ- மாணவிகளின் பெற்றோரிடம் சத்துணவு முட்டைகளை வழங்கினார். இதை முன்னிட்டு நேற்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கூடத்தின் முன்பு கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர்கள் போட்டனர்.

    இதுபற்றி சத்துணவு அமைப்பாளர் நில்மலா கூறும்போது, “அரசு வழங்கி உள்ள அறிவுறுத்தலின் பேரில், சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கும் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, ஒவ்வொரு வகுப்பு வாரியாக அவர்கள் வரவேண்டிய நேரத்தை குறிப்பிட்டு உள்ளோம். அதன்படி அவர்கள் வந்ததும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முட்டைகளை வழங்குகிறோம். பெற்றோரும் இடைவெளியை கடைபிடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்து முட்டை வாங்கி செல்கிறார்கள்” என்றார். இதுபோல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் முட்டை வழங்கப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சி நேரு நகரை சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதித்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    சில நாட்களுக்கு முன்பு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். சர்க்கரை நோயாளியான அவருக்கு திடீரென கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின்படி அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரியை சேர்ந்த தறித்தொழிலாளியின் மனைவி சர்க்கரை மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார்.

    அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். திடீரென அவரது வலது கண்ணுக்கு கீழ், கன்னத்தின் மையப்பகுதியில் கருப்பு நிறத்தில் தழும்பு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு பூஞ்சை பயத்தால் அவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தெரிய வரும்.

    கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
    ஈரோடு:

    கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.

    பல்வேறு இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஏதேனும் ஒரு வழியில் சாலையில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. எனவே அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    நேற்று காளைமாட்டு சிலை அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது தேவையின்றி சுற்றிய பலரும் பிடிபட்டனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், மூலப்பட்டறை பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அவசியமின்றி சுற்றி பிடிபட்டவர்களை கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த நடவடிக்கையால் பலரும் தெரியாமல் வந்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கெஞ்சினார்கள்.

    இதுபற்றி போலீஸ் ஒருவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பு இருக்கும் பலரும், சோதனை கூட செய்யாமல் சாலைகளில் சுற்றி வருகிறார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே அவசியமின்றி வரும் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்” என்றார்.
    தாளவாடி பகுதியில் வியாபாரிகள் வாங்க வராததால் தோட்டத்திலேயே முட்டைகோஸ்கள் அழுகுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
    தாளவாடி:

    தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தொட்டகாஜனூர், திகனாரை, பனக்கள்ளி, மல்லன்குழி, தலமலை போன்ற மலைக்கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.

    இங்கு ஊட்டியில் நிலவும் தட்பவெப்பநிலை காணப்படுவதால் மலைக்காய்கறி பயிரான காலிபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாத பயிரான முட்டைகோசை இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்திருந்தார்கள். தற்போது பல ஏக்கரில் முட்டைகோஸ் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இந்தநிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி சந்தைகள் மூடப்பட்டுள்ளன. சரக்கு ஆட்டோக்கள், வேன்களில் மட்டுமே காய்கறிகள் விற்கப்படுகின்றன. இதனால் தாளவாடி பகுதிக்கு சென்று காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் செல்லவில்லை. ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே தோட்டங்களுக்கு சென்று ஒரு கிலோ முட்டைகோஸை 2 ரூபாய்க்கு கேட்கிறார்கள். இதனால் விற்க மனமின்றி பல விவசாயிகள் முட்டை கோஸ்களை அறுவடை செய்யாமல் அப்படியே தோட்டத்தில் விட்டுவிட்டார்கள். பல இடங்களில் முட்டைகோஸ்கள் செடியிலேயே அழுகி காணப்படுகின்றன.

    இதுபற்றி தாளவாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய ரூ.50 ஆயிரம் செலவாகிறது. 15 டன் வரை மகசூல் எடுக்க முடியும். தற்போது வெளியூர் மொத்த வியாபாரிகள் வராததால் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. அதனால் காட்டிலேயே விட்டுவிட்டோம். கடன் வாங்கி விவசாயம் பார்க்கும் எங்களுக்கு மேலும் கடனும், வேதனையுமே மிஞ்சுகிறது’ என்று வேதனைப்பட்டார்கள்.
    தாளவாடி அருகே தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தது. இதில் வாழை, கரும்பு, தக்காளி நாசம் ஆனது.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள்.

    இந்தநிலையில் தாளவாடி அருகே உள்ள கெட்டவாடியைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). விவசாயி. இவர் தன்னுடைய 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் காட்டை விட்டு வெளியேறி இளங்கோவின் தோட்டங்களுக்குள் புகுந்தன. பின்னர் வாழை குருத்துகளை தின்றும், மரங்களை மிதித்தும் நாசம் செய்தன. மேலும் கரும்புகளையும் மிதித்து அட்டகாசம் செய்தது. தோட்டத்து வீட்டில் படுத்திருந்த இளங்கோ சத்தம் கேட்டு எழுந்து தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது யானைகள் தோட்டத்தில் அட்டகாசம் செய்வதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் விவசாயிகள் சிலர் அங்கு வந்தார்கள். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வெளியேறி சென்றன.

    யானைகள் சேதப்படுத்தியதில், இளங்கோவின் தோட்டத்தில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிர்கள், ½ ஏக்கரில் வாழை ஆகியவை நாசம் அடைந்தன.

    இதேபோல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் கிராமத்தை சேர்ந்த குணசேகர் என்பவருக்கு சொந்தமான தக்காளி தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு யானைகள் புகுந்தன. பின்னர் தக்காளிகளை மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. இதில் சுமார் ½ ஏக்கரில் விளைந்திருந்த தக்காளிகள் நாசம் அடைந்தது.

    நேற்று காலை குணசேகர் தோட்டத்துக்கு வந்து பார்த்தார். தக்காளிகள் சேதம் அடைந்து கிடந்ததை எண்ணி வேதனைப்பட்டார்.

    இந்தநிலையில் யானைகள் சேதப்படுத்தியதால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உாிய நிவாரண உதவியை வனத்துறையினர் பெற்றுத்தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மற்றும் வாலிபர் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் ஒரே நாளில் 1,784 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மெதுமெதுவாக குறைந்து வருகிறது. அதேசமயம் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தொற்று பரவல் குறைந்தபாடில்லை.

    கடந்த 22-ந் தேதி புதிதாக 1,758 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டது புதிய உச்சமாக இருந்து வந்தது. அதன்பிறகு 23-ந் தேதி 1,352 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தினமும் மெதுவாக தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருந்தது. 24-ந் தேதி 1,467 பேருக்கும், 25-ந் தேதி 1,555 பேருக்கும், 26-ந் தேதி 1,642 பேருக்கும், 27-ந் தேதி 1,699 பேருக்கும், 28-ந் தேதி 1,731 பேருக்கும், நேற்று முன்தினம் 1,743 பேருக்கும் என கொரோனா தொற்றின் புதிய பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,784 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவே மாவட்டத்தின் புதிய உச்சமாகும். மேலும், தமிழக அளவில் கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு 3-வது இடத்தை பிடித்து உள்ளது.

    தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறையாமல் இதுவரை இல்லாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை எட்டுவது மக்களை பீதி அடைய செய்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுவரை மொத்தம் 54 ஆயிரத்து 914 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் 39 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 941 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது வரை 15 ஆயிரத்து 207 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 22 பேர் பலியாகி உள்ளார்கள். அதிலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் 4-ந் தேதியும், 25 வயது பெண் கடந்த 20-ந் தேதியும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். குறைந்த வயதினரும் கொரோனா வைரசால் பலி ஆவது வேதனைக்குரியதாக உள்ளது. இதேபோல் 56 வயது பெண் கடந்த 6-ந் தேதியும், 66 வயது மூதாட்டி 10-ந் தேதியும், 69 வயது மூதாட்டி 11-ந் தேதியும், 60 வயது மூதாட்டி 12-ந் தேதியும், 65 வயது மூதாட்டி 13-ந் தேதியும், 53 வயது பெண் 14-ந் தேதியும், 57 வயது ஆண் 16-ந் தேதியும், 52 வயது ஆண், 78 வயது முதியவர் ஆகியோர் 17-ந் தேதியும், 50 வயது பெண் 19-ந் தேதியும், 50 வயது பெண் 20-ந் தேதியும், 49 வயது ஆண், 60 வயது மூதாட்டி ஆகியோர் 26-ந் தேதியும், 58 வயது ஆண், 65 வயது மூதாட்டி, 70 வயது முதியவர், 80 வயது மூதாட்டி ஆகியோர் 28-ந் தேதியும், 50 வயது ஆண், 50 வயது பெண் ஆகியோர் நேற்று முன்தினமும், 57 வயது ஆண் நேற்றும் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 340 ஆக உயர்ந்தது.
    பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது.

    ஆனால் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மற்றும் திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    இதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி உத்தரவிட்டார்.

    மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோரும், திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரும், ஈரோடு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நியமிக்கபட்டு அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் முகாமிட்டு தடுப்புப் பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின்

    ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

    கோவை மாவட்டத்தில் நேற்று 3,692 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஈரோட்டில் 1,743 பேரும், திருப்பூரில் 1,697 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு வந்த மு.க.ஸ்டாலின் காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆக்சிஜன் வசதி குறித்தும், இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 400 படுக்கை வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வையிட்டார். பின்னர் 5 டாக்டர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் தற்காலிக பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஈரோட்டில் ஆய்வை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சென்றார். அங்கு நோயாளிகளை அழைத்து வர வசதியாக 20 கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குமரன் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகிறார்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் சென்று மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசனை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து திருப்பூரில் 18 வயது முதல் 44 வயது உடையவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். பின்னர் மதுரை மற்றும் திருச்சிக்கு சென்று கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தார்.

    இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளார்.

    இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகிறார். இதனையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடுக்கு கார் மூலம் வருகிறார். இரவு ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    இதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் வசதியுடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சென்று ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து அன்று இரவே விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார்தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இ-பதிவு பெற்றிருந்தாலும் கடும் சோதனைக்கு பிறகே தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். இருந்தாலும் முழு ஊரடங்கு பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிந்தனர். ஊரடங்கின் 4-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர்.

    நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 350 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 1,100 இருசக்கர வாகனங்கள், 45 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    போலீசாரின் தொடர் இறுக்குபிடியால் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்று 5-வது நாளாக தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
    ×