என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- மு.க.ஸ்டாலின் நாளை பெருந்துறை மருத்துவ கல்லூரியில் ஆய்வு

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகிறார்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் சென்று மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசனை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து திருப்பூரில் 18 வயது முதல் 44 வயது உடையவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். பின்னர் மதுரை மற்றும் திருச்சிக்கு சென்று கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தார்.

    இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளார்.

    இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகிறார். இதனையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடுக்கு கார் மூலம் வருகிறார். இரவு ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    இதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் வசதியுடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சென்று ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து அன்று இரவே விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×