என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
    • தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களான அத்திக்கோம்பை, கள்ளி மந்தயம், அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, புதுச்சத்திரம், விருப்பாச்சி, லக்கையன்கோட்டை பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் 65 சதவீத காய்கறி தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பூர்த்தி செய்கிறது.

    இந்த நிலையில் நாளை மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஸ்டிரைக் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வாகனங்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் தங்களுக்கு காய்கறிகளை அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

    தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கேரளாவில் நாளை வேலை நிறுத்த போராட்டத்தால் காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என அம்மாநில வியாபாரிகள் கூறி உள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மார்க்கெட்டில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். 

    • கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து கோம்பைபட்டி கிராமத்தை அப்பகுதி மக்களிடம் கருத்தை கேட்காமல் வருவாய்த்துறையினர் பச்சலநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைத்தனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பச்சலநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் கோம்பைபட்டி கிராமத்தை இணைக்க கூடாது. கோம்பைபட்டி ஊராட்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து துண்டு பிரசுரங்களையும் கிராம மக்கள் வழங்கி வருவதுடன் தங்கள் கிராமத்தில் பதாகைகளையும் வைத்துள்ளனர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
    • ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாநிலம் முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தின் எதிரில் உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழக அரசு தற்போது வருவாய் துறை மூலமாக சாதாரண ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500யும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000யும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது.

    தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    குறிப்பாக ஆந்திராவில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6000யும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10000யும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15000 உதவித்தொகையாக வழங்கி வருகின்றனர்.

    இதேபோல் பாண்டிச்சேரியில் ரூ.5800யும், தெலுங்கானாவில் ரூ.4016யும், டெல்லியில் ரூ.5000யும் வழங்கி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே வழங்கி வருகின்றனர்.

    எனவே ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    • குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் போது அதிக அளவில் மலரும்.
    • பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தொடங்கி கோடைகாலம், வசந்தகாலம், கிறிஸ்துமஸ் சீசனில் பூக்கும் சிலுவை மலர்கள் என பல்வேறு பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும்.

    அந்த வகையில் தற்போது குளிர் சீசன் நிறைவு பெறுவதை உணர்த்தும் வகையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    இந்த மலர்கள் பொதுவாக குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் போது அதிக அளவில் மலரும். குறிப்பாக கொடைக்கானலில் குளிர் காலங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான பனிப் பொழிவினால் புதர்கள் கருகும். இதனைத் தொடர்ந்து கோடை காலம் தொடங்கும் போது கருகிய புதர்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் நிகழும். மேலும் காலம் மாறும் இந்த நேரங்களில் தீயின் நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலர்களுக்கு புதர் தீ (காட்டு தீ)மலர்கள் என பெயர் வந்ததாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    மலைப்பகுதிகளில் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களைக்கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    மேலும் தற்போது இந்தப்பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால் காடுகளில் தீ பிடிக்காமல் இருக்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகளை முன்கூட்டியே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    • ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர். அமைச்சர் இ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விடுதலையான வழக்கை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அமைச்சர் இ.பெரியசாமி தனது முதுகில் உள்ள அழுக்கை பார்த்து விட்டு மற்றவரை குறை கூற வேண்டும். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.

    தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கனவே புஸ்வானமாகிவிட்டது. இந்நிலையில் புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி ஏதாவது ஒன்றை நிறைவேற்றவில்லை என தெளிவாக கூறாமல் அமைச்சர் இ.பெரியசாமி குறை கூறி வருகிறார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அண்டா, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். அதில் 10 சதவீதம் கூட தரமான பொருள் கிடையாது. 100 வீடுகள் என்றால் 10 வீடுகளுக்கு மட்டுமே தரமான பொருள் இருக்கும். எவ்வளவு பணம் கொடுத்தாலும், பரிசு பொருள் கொடுத்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு கெட்டபெயர்தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விஜய் திரைப்படங்களில் நடித்ததற்காக கருப்பு பணம் வாங்கியது உண்மைதான். இதை நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருப்போம். நாங்கள் மட்டுமல்ல தி.மு.க.வினரும் இது குறித்து பேசி வருகின்றனர். ஆனால் செங்கோட்டையன் எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசி வருகிறார். தனது சம்பளம் முழுவதையும் வெள்ளை பணமாக மட்டுமே வாங்கினேன் என அவரால் சொல்ல முடியுமா?

    நிர்மலா சீதாராமன் மக்களவையில் தமிழ் குறித்து என்ன பேசினார் என எனக்கு தெரியாது. அதற்கு கமல்ஹாசன் என்ன பதில் அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் என்.டி.ஏ. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.
    • இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தில் பூ விவசாய குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார்-மாலியபுரம் தம்பதியினருக்கு அஸ்வினி மற்றும் தாமோதரன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தாய் மாலியபுரம் உடன் பிறந்த சகோதரர் வேல்முருகன், தனது சகோதரி குழந்தைகளுக்கு காதணி விழா செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களுடன் எ.காமாட்சிபுரத்திலிருந்து எ.கொங்கப்பட்டி கிராமத்திற்கு சுமார் 4 கி.மீ. தூரம் 20-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.

    இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும் இரட்டை சீர் என்று சொல்லக்கூடிய பித்தளை பானை, அண்டா, பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் இரட்டை எண்ணிக்கையில் சீராகவும், உப்பு, மிளகாய், மஞ்சள் பொடி, இரட்டை மாலை, இனிப்பு, கார வகைகள் என அனைத்தும் பாரம்பரியம் மாறாமல் சீர்வரிசையாக கொண்டு வந்தார்.

    தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு தமிழர் கலைகளுடன் தாரை தப்பட்டை, வான வேடிக்கை சகிதம் ஆட்டுக்கிடாய், வெள்ளி பாத்திரங்களுடன் காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பெண் குழந்தையான அஸ்வினிக்கு 5 பவுனில் தோடு அணிவித்துள்ளார். நிறைவாக சம்பிரதாயப்படி அசைவ விருந்து வழங்கப்பட்டு மொய் வாங்கப்பட்டு காதணிவிழா நடைபெற்றது. சொந்த பந்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.
    • எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமையைத் தொகையை ரூ.2000 மாக உயர்த்தி வழங்கப்படும். கல்விக்கடனை அரசே ஏற்கும். வருடத்துக்கு 3 சிலிண்டர் இலவசமாக தரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார்.

    அவர் உருட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவராக கூட வருவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் அவர் வாக்குறுதிகளை அள்ளி விட்டு செல்லலாம். ரூ.2000 கொடுப்பதாக கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

    தனது 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட எதையும் செய்யாமல் இப்போது வாக்குறுதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அ.தி.மு.க. என்பது முடிந்து போன கதை. அது இனிமேல் ஆட்சிக்கு வரவே வராது.

    எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்ப மாட்டார்கள். அவ்வாறு உள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நம்புவார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றவர் தற்போது எதற்காக கூட்டணிக்கு சென்றுள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார். 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை அ.தி.மு.க. ஆட்சியில் 9 லட்சமாக குறைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தற்போது பொருளாதார நிபுணர் போல பேசுகிறார். அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார். டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை அ.தி.மு.க. காலத்தில் கட்டவில்லை. அந்த பணம் எங்கே போனது. எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியது ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம்தான். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

    ஏற்கனவே அவர் அறிவித்த 5 வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாமல் புஸ்வானமாக போய் விட்டதால் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதுவும் புஸ்வானமாகவே போய் விடும் என்றார். 

    • தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகளை பெற்றுள்ளேன்.
    • தெர்மாகோல் அட்டை, குடை கம்பி, ஐஸ் குச்சி, சிறிய மூங்கில் குச்சி, ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர் கொண்டு தயாரித்துள்ளேன்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த நல்லையா நடராஜன் மகன் பழனிவேல் ராஜன் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சிறிய ரக விதை நடும் விமானத்தை தயாரித்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பறக்க விட்டார். இது அங்கு வந்து பார்வையிட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை அதிகம் கவர்ந்தது.

    இதுகுறித்து மாணவர் பழனிவேல் ராஜன் கூறுகையில், சிறு வயதிலிருந்தே விமானம் மற்றும் அது பறப்பது பற்றி ஆர்வங்கள் எழுந்து வந்தது. 9ம் வகுப்பு படிக்கும் போது இதில் ஆர்வம் அதிகரித்தது. கொரோனா காலத்தில் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படிக்கும் நிலை உருவானது. இதனால் செல்போன் பயன்படுத்துவது அதிகமானது. அப்போது யூடியூப் மூலம் விமானம் குறித்த பல தகவல்களை அறிந்து சேகரித்தேன். அதை தொடர்ந்து விமானம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

    இதுவரை 15 சிறியரக விமான மாதிரிகளை தயாரித்து பறக்க விட்டு உள்ளேன். தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகளை பெற்றுள்ளேன்.

    தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் விதை நடும் சிறிய ரக விமானம் தயாரித்து பறக்க விட்டேன். தெர்மாகோல் அட்டை, குடை கம்பி, ஐஸ் குச்சி, சிறிய மூங்கில் குச்சி, ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர் கொண்டு தயாரித்துள்ளேன். இதில் டிரான்ஸ் மீட்டர், ரிசீவர் மட்டும் ஆன்லைன் மூலம் வாங்கி பயன்படுத்தியுள்ளேன். ரூ.12 ஆயிரம் செலவில் ரிமோட்டுடன், 1850 மில்லியன் ஆம்ஸ் திறன் கொண்ட பேட்டரி, 850 கிராம் எடையுடன் 25 நிமிடம் வானில் பறக்கும் வகையில் சிறிய ரக விமான மாதிரியை தயாரித்தேன்.

    அழியும் காடுகளை மீட்டு எடுக்க, விதை பந்து வீசும் வகையில் இதனை வடிவமைத்துள்ளேன். ஏரோநாட்டிக்கல் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். கணித கம்ப்யூட்டர் அறிவியல் பாட பிரிவு எடுத்து படித்து வருகிறேன். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், யூடியூப் பார்த்து செய்து முடித்துள்ளேன் என்றார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

    • எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது.
    • 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மீண்டும் அமர்வார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய் வெளியே வர வேண்டும். இந்த அரசியல் வெகு நாட்களுக்கு எடுபடாது. சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அரசியல் செய்ய முடியாது. எல்லா அரசியலையும் பார்த்து விட்டோம். இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க.வுக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. திருக்குறளை மாற்றிக்கூறி விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.

    அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வளர்த்ததைப் போல தற்போது மு.க.ஸ்டாலினும் வளர்த்து வருகிறார். எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது. அவரை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.

    கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் தண்ணீர் இல்லாமல் இறந்து விட்டனர். அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ள மனமில்லை. இவர் எவ்வாறு 7 கோடி மக்களை காப்பாற்றுவார்? ஏதோ நடித்துப்பார்க்கிறார். டான்ஸ் ஆடிப்பார்க்கிறார். இந்த டான்ஸ், டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். இது எப்படி அரசியல் தலைவருக்கு அழகாகும்.

    கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை. வெற்றி வாய்ப்பை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை ஜனநாயக ரீதியில் வழங்குவார். கனிமொழி எம்.பி. ராகுல் காந்தியிடம் கெஞ்சுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நாங்கள் பல ஆண்டுகளாக ஒரே அணியில் நீடித்து வருகிறோம். இந்த கூட்டணிதான் வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப் போகிறது. சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை. தற்போதுதான் அவர் மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவர் தி.மு.க.வுக்கு வந்தால் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.

    அண்ணாமலை திடீர் திடீர் என ஏதாவது ஒரு கருத்தை வெளியிடுவார். தற்போது பழனியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறியுள்ளார். பழனிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.
    • தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை காமனூரில் மத்திய தொல்லியல்துறையின் மைசூர் கண்காணிப்பாளர் குமரன் தலைமையில் முதல் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.

    இதில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் 2500 முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்பதுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கண்காணிப்பாளர் கூறுகையில்,

    தாண்டிக்குடியில் கடந்த 2004 முதல் 2006ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மூலம் அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் கற்திட்டை, கற்பதுகை, அறைகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் ராவத் உத்தரவின் பேரில் கற்காலம், இரும்பு காலத்திற்கு முன்பிருந்த பகுதிகள் குறித்து அகழாய்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.

    காமனூரில் கற்பதுகை மூலம் நினைவுச் சின்னங்கள், ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாலி, பயன்படுத்தப்பட்ட பொருள், வாழ்க்கை முறை, கலாச்சாரம் குறித்த தடயங்கள் பற்றி அகழாய்வு நடக்கின்றது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்பதுகை சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாகும்.

    இங்கு கண்டறியப்பட்டுள்ள கற்பதுகையை சுற்றி கற்களான சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே காண முடிந்தது. தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குகை ஓவியம், பாறை ஓவியம், குகை ஆதிகால மனிதர்களின் கலாச்சாரம், பெருங்கற்கால மனிதர்களின் சின்னம், வரலாற்று எச்சம் உள்ளிட்டவை குறித்து அகழாய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றார்.

    மேலும் தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம். இரும்பு காலத்திற்கு முந்தைய கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, வாழ்ந்த அடையாளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஏராளமாக உள்ளன. இவை குறித்து 3 ஆண்டுகள் அகழாய்வு நடக்கும். தற்போது அகழாய்வுகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார். 

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • காகாதோப்பு, சேடப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    திண்டுக்கல்:

    வேடசந்தூர் அருகே லெட்சுமணம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை 30-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காகாதோப்பு, சேடப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.
    • தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது சாரல் மழை, உறைபனி, உறையவைக்கும் குளிர் ஆகியவை வாட்டி எடுத்து வருகிறது.

    பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர். தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    தற்போது கொடைக்கானல் பகுதியில் கடல் நுரை பொங்கி எழுவது போல வெண்மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் செண்பகனூர் சிட்டி வியூ, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளில் வானத்தில் இருந்து மேகக்கூட்டங்கள் தரையிறங்கி மலை முகடுகளை முத்தமிடுவது போல வந்த காட்சி வெகுவாக ரசிக்க வைத்தது.

    "வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்" என்ற வைரமுத்து வரிகளுக்கேற்ப கொடைக்கானலில் தினந்தோறும் காணப்படும் ரம்யமான சூழல் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுத்து வருகிறது. அதன் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ×